Lebal

Saturday, July 28, 2012

யாழில் தலைவிரித்தாடும் இராணுவ அராஜகம்! நீதித்துறையிலும் எமக்கு நம்பிக்கையில்லை. - சிவாஜிலிங்கம்

இராணுவத்தினரால் தாக்குதல் நடத்தப்படலாமென பொலிஸாரே எச்சரிக்கும் அளவிற்கு யாழ்ப்பாணத்தில் இராணுவ அராஜகம் தலைவிரித்தாடுவதாக தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் அரசியல் தலைவருமான எம்.கே.சிவாஜிலிங்கம், இதை சர்வதேசம் சரியாக புரிந்துகொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலை நினைவு தினம் குறித்த சுவரொட்டிகளை நெல்லியடி பகுதியில் ஒட்டிக்கொண்டிருந்த சமயம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்தும், அதன் பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தும் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

கைதுசெய்யப்பட்ட பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றிருந்தனர். அங்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் வெளியே பாதுகாப்பாகச் செல்லுமாறும், இராணுவம் கடும் ஆத்திரத்துடனிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் தமது வாகனமொன்றை எமக்குப் பாதுகாப்பாக அனுப்பியிருந்தனர். அதன்போது வீதியின் ஆங்காங்கே படையினர் நின்றனர். எம்மை மறித்து விசாரித்தனர்.
அதேவேளை, பொலிஸ் நிலையத்தில் நின்றிருந்தவர்கள் சிலர், தம்மை யாரென அடையாளப்படுத்திக் கொள்ளாமலேயே நின்ற சிலர் இறந்தவர்கள் இறந்துவிட்டார்கள் 29 வருடங்களின் பின்னர் அவர்களை நினைவுகூர்ந்து என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்கிறார்கள்.
இறந்தவர்களை நினைவுகூர முடியாத நிலையில், அவர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலையில்தான் இங்கு நிலையுள்ளதென்றால் என்ன ஜனநாயகம் இருக்கின்ற தென்பதை சர்வதேசம் உணர்ந்து கொள்ளவேண்டும். பொலிஸார் 200 சுவரொட்டிகளையே பறிமுதல் செய்திருக்கின்றனர். ஆனால் நாங்கள் 2300 சுவரொட்டிகளை ஒட்டியிருக்கின்றோம்.
இந்தச் சம்பவத்திற்கெதிராக நாம் ஒருபோதும் நீதிமன்றத்தை நாடப்போவதில்லை, ஏனெனில் இலங்கையின் நீதித்துறையில் எமக்கு ஒருபோதும் நம்பிக்கையில்லை என்றார் சிவாஜிலிங்கம்.

No comments:

Post a Comment