வரவிருக்கின்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில்
ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பில் தமிழக அரசியற் கட்சிகள் தங்கள் தேர்தல்
விஞ்ஞாபனத்தில் கொண்டிருக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து நாடுகடந்த தமிழீழ
அரசாங்கத்தின் அரசவையில் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியிருந்தது.
இத்தீர்மான செயலாக்கத்தின் தொடர்சியாக சென்னையில்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே நியூயோர்கில்
இருந்தவாறு இணையவழி தொழில்நுட்ப காணொளிபரிவர்தனையூடாக இக்கருத்தினை
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன்
தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழ் மக்களுக்காக ஆதரவாக தமிழக சட்டசபையில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தமிழக முதல்வருக்கும் தமிழக அரசியற்
கட்சித்தலைவர்களும் தனது நன்றியினைத் தெரிவித்த பிரதமர் வி.உருத்திரகுமாரன்
வராலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு
அமையப் போகும் இந்திய அரசாங்கத்தினை தமிழக அரசியற் கட்சிகள் தமது பேரம்
பேசும் சக்தி மூலமாக சம்மதிக்க வைக்க முடியுமென தாம் கருதுவதாகத்
தெரிவித்தார்.
ஈழத்தமிழர் தேசமானது இந்தியாவினை நட்பு நாடாகவே
கொள்கின்றனெ இந்தியக் கொள்கை வகுப்பாளர்களை நோக்கி கருத்துரைத்த பிரதமர்
வி.உருத்திரகுமாரன் தமிழீழம் ஒரு சிறிய தேசமாக இருந்தாலும் அது இந்திய
நலன்களுக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைவதோடு அதனை நாம் தமிழீழ
சுதந்திர சாசன பிரகடனத்தில் தெளிவாக குறித்திருக்கின்றோம் எனவும்
கோடிட்டுக் காட்டினார்.
சிங்கள தேசம் வரலாற்றுரீதியாக இந்திய எதிர்பினை
தன்னகத்தே கொண்டது என்பதும் சிங்கள தேசத்தின் தற்போதைய சீன உறவுக்கு
பின்னால் இந்திய எதிர்ப்பு இருக்கின்றது என்பதும் இரகியமம அல்ல என்பதனையும்
விஉருத்திரகுமாரன் சுட்டிக்காட்டினார்.
இதனால் தமிழீழ மக்களின் விடுதலைக்கு சாதகமான
மாற்றமொன்று இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட வேண்டும்.இதற்கு
நடைபெறவுள்ள இந்திய நாடாளுமன்றத் தேர்தல் துணை செய்ய வேண்டும். தமிழக
அரசியல் கட்சிகளும் மக்களும் வரக்கூடிய வாய்ப்புக்களை ஈழத்தமிழ் மக்கள்
விடுதலைக்கு சாதகமாக்க வேண்டும். இவையே எமது எதிர்பார்ப்பெனவும் பிரதமர்
வி.உருத்திரகுமாரன் தெரிவித்தார்.
நாடுகடந்த
தமிழீழ அரசாங்கத்தின் தமிழக தோழமை மையத்தின் ஏற்பாட்டில்
ஒருங்கிணைக்கப்பட்டிருந்த இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் செய்தியாளர்களின்
முன்னதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் வழங்கிய தொடக்கவுரையின் சுருக்கம் :
- நமது தமிழீழ தேசத்தின் விடியல், தமிழீழ மக்களின்
விடுதலை சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழ அரசு அமைவதற்கு
சாத்தியத்திற்கான திறவுகோல், தமிழக மக்களின் கைகளில் இருக்கின்றது என்பது
வரலாறு நமக்கு காட்டும் வழிகாட்டியாக உள்ளது
- 2009ம் ஆண்டு மே மாதம் நிகழ்த்த முள்ளிவாய்கால் தமிழின அழிப்பு நமக்கு சில படிப்பினைகளைத்
தந்துள்ளது.
எம்மிடம்
எவ்வளவுதான் நியாயம் இருந்தாலும், வீரம் இருந்தாலும், ஈகம் இருந்தாலும்,
எமது விடுதலைக்காக போராடும் உறுதிப்பாடு இருந்தாலும், அனைத்துல சமூகத்தின்
ஆதரவினை எமது பக்கம் வென்றெடுக்காவிடின், நாம் நமது இலட்சியத்தினை
வென்றெடுக்க முடியாது.
இங்கு அனைத்துலக சமூகம் எனும் போது அரசுகள் வகிக்கும் தலைமைப் பாத்திரத்தினை நாம் குறைத்து மதிப்பிடி முடியாது.
இதனால் தமிழீழ மக்கள் தமது விடுதலையினை வென்றெடுப்பதற்கு, உலக ஒழுங்கினை
தீர்மானிக்கும் சக்திமிக்க அரசுகளின் ஆதரவினைத் வென்றெடுப்பது அவசியமாக இருக்கின்றது.
இது மிகுந்த சவால் நிறைந்த விடயமாகும்.
அரசுகளால் தீர்மானிக்கப்படும் உலக ஒழுங்கு, நீதியின் அச்சு சுழலாமல், நலன்களின் அச்சாக
சுழல்வதுதான் இதற்க முக்கிய காரணம்.
- இங்கு இந்திய அரசின் பங்கு முக்கிய இடத்தினைப் பிடிக்கின்றது
உலக ஒழுங்கலில் தென்னாசியப் பிராந்தியத்தினை பொறுத்தவரை, இந்தியாவின் முதன்மை பாத்திரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசு என்னதான் முயற்சிகளை எடுத்தாலும்,
இந்திய அரசின் முடிவுகளை மீறி இலங்கைத்தீவு இயங்க முடியாது என்ற அரசியல்
யதார்த்தம்.
இங்குள் சோகமான யதார்த்தம்
என்னவென்றால், தமிழக மக்களும் - இந்திய மக்களும் ஈழத்தமிழ் மக்கள் மீது
ஆதரவும் அக்கறையும் கொண்டிருந்தாலும், இந்திய அரசும் - இந்தியக் கொள்கை
வகுப்பாளர்களும் தமிழின அழிப்பினை மேற்கொள்ளும் சிறிலங்காவின் பக்கமே
நெருங்கி நிற்கின்றார்கள்.
அதற்கு இவர்கள் மத்தியில் உள்ள மரபாந்த சிந்தனையும், தமிழீழத் தேசிய வாதம் குறித்த அச்சங்களும் முக்கிய காரணங்களாக அமைகின்றன.
மரபார்ந்த
சிந்தனையின்பாற்பட்டு, சிறிலங்கா அரசுடன் நெருக்கமாக உறவுகளைப் பேணுவதன்
மூலம், இந்தியாவின் தேசிய நலன்களை அடைந்து கொள்ளல் இலகு என
கருதுகின்றார்கள்.
ஈழத்தமிழ் மக்கள், தேசத்திற்கான அங்கீகாரத்தினைப்
பெற்று, தமக்கென ஒர் அரசினை அமைப்பது, தமிழகத்தில் தேசிய உணர்வுகளைத்
தூண்டிவிடுமெனக் கருதுகின்றார்கள்.
இதில் இன்னுமொரு யதார்த்தமும் இருக்கின்றது.
தமிழகம் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளை
தீர்மானிப்பதில் கேரளம் வகிப்பதனைப் போல், காத்திரமான பாத்திரத்தினை
வகிக்கும் நிலையில் அரசியல் ரீதியில் தன்னை வளர்த்தெடுக்கவில்லை. இதற்கான
காரணங்கள் தனியாக ஆராய வேண்டியவை.
இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையினை தீர்மானிப்பதில்,
தமிழகம் வகிக்கும் குறைந்த பாத்திரமும், ஈழத்தமிழர் விடுதலையினை
வென்றெடுப்பதில் பாதகமான தாக்கத்தினை செலுத்துகின்றது.
இதனால்
இந்திய அரசின் வெளிவிவகாரக் கொள்கையில், ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கு
சாதகமான மாற்றத்தினை ஏற்படுத்த உழைத்தல் இன்று எம்முன் உள்ள முக்கிய பணியாக
இருக்கின்றது.
இத்தகைய சூழலில் இவ்வாண்டு நடைபெறவுள்ள இந்திய நாடாளுமன்றத் தேர்தல் எமது மிகுந்த அக்கறையினைக் கொள்ளக்கூடியதாக அமைகின்றது.
நாடாளுமன்றத் தேர்தலிலே இந்திய அரசின் ஆட்சியாளர்களை தீர்மானிக்கப் போகின்றது.
இவர்களே இந்திய அரசாங்கத்தினை தலைமைதாங்கி நடத்தப் போகின்றார்கள்.
இந்திய அரசாங்கத்தின் சிறிலங்கா தொடர்பான வெளிவிவகாரக் கொள்கையினை தீர்மானிப்பதில் காத்திரமான பங்கினை வகிக்கப் போகின்றார்கள்.
வருகின்ற தேர்தலில் தமிழகம் கொண்டுள்ள 40 நாடாளுமன்ற
ஆசனங்கள், இந்திய அரசாங்கத்தினை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு
வகிக்கக்கூடிய நிலைமைகள் உள்ளன.
இத்தகைய
வாய்ப்பான சூழல் ஏற்படும் பட்சத்தில், அதனை ஈழத் தமிழ் மக்களின்
விடுதலைக்கும் நல்வாழ்வுக்கும் பயன்படுத்த தக்க வகையில் தமிழக அரசியல்
கட்சிகள் கையாள வேண்டும்.
அதற்கான அங்கீகாரமும் ஊக்கமும்; தமிழக மக்கள் மத்தியில் இருந்து அரசியற் கட்சிகளுக்கு கிடைக்க வேண்டும்.
கட்சிகளும் மக்களுக்கு தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் தார்மீக பொறுப்போடு இயங்க வேண்டும்.
இதற்கெல்லாம் துணை செய்யக் கூடிய வகையில்தான், தமிழக
அரசியல் கடசிகள் தமது நாடாளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில், ஈழத்தமிழர்
தேசியப் பிரச்சனையினை உள்ளடக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தீர்மானம்
நிறைவேற்றியுள்ளது.
இவ்வாறு அமைந்திருந்த பிரதமர் வி.உருத்திரகுமாரனது
தொடக்கவுரையினைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில்
வழங்கியிருந்தார்.
நாதம் ஊடகசேவை
source:tgte
No comments:
Post a Comment