ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானத்தை நிராகரிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்
இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டு
விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது ஏராளமான
அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர்.அப்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள்
குறித்தும், போர்க்குற்றங்கள் குறித்தும் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்
என்று பல்வேறு உலக நாடுகளும் வற்புறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், 2009–ம் ஆண்டில் போர் முடிவுற்ற போதிலும் அங்கு இதுவரை
மனித உரிமைகளை மேம்படுத்த இலங்கை அரசு தவறி விட்டது என்றும், இறுதிக்கட்ட
போரின் போது நடந்த போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச அளவில் விசாரணை நடத்த
வேண்டும் என்றும் கோரி ஐ.நா.மனித உரிமை கவுன்சிலின் 25–வது கூட்டத்தொடரில்
அமெரிக்கா புதிதாக ஒரு வரைவு தீர்மானத்தை கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கல்
செய்தது. தீர்மானத்தை ஆதரித்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு உள்ளிட்ட
23 நாடுகளின் உறுப்பினர்கள் வாக்கு அளித்தனர். தீர்மானத்துக்கு எதிராக
ரஷியா, சீனா, பாகிஸ்தான், கியூபா, வெனிசூலா, பெலாரஸ், ஜிம்பாப்வே உள்ளிட்ட
12 நாடுகளின் உறுப்பினர்கள் வாக்கு அளித்தனர்.இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள்
வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன.இதனால் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் 11 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேறியது.
இந்த நிலையில்,ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானத்தை நிராகரிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது:-இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்க ஆதரவு தீர்மானத்தை நிராகரிக்கின்றேன். தீர்மானத்திற்கு பதிலாக அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்த தீர்மானம் நல்லிணக்கத்தை காயப்படுத்தும் வகையில் அமையும். இந்த தீர்மானம் நல்லிணக்கத்திற்கு வழியமைக்காது. எனினும், நான் இந்த தீர்மானத்தினால் களங்கப் போவதில்லை. ஆரம்பிக்கப்பட்ட நல்லிணக்க முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment