Lebal

Sunday, June 01, 2014

நரேந்திர மோடி அரசில் இணைகிறது அதிமுக? – சிறிலங்காவுக்கு அதிர்ச்சி

புதுடெல்லியில் ஆட்சியமைத்துள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக இணைந்து கொள்ளலாம் என்று எக்கொனமிக் ரைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா வரும் செவ்வாய்க்கிழமை புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். 

இதன் போது, இந்தக் கூட்டணிக்கான இறுதி வடிவம் கொடுக்கப்படும் என்று கருதப்படுகிறது. 

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது குறித்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோருடன் செவ்வாயன்று ஜெயலலிதா பேச்சு நடத்தவுள்ளார். 

பாஜக தலைமையிலான கூட்டணிக்கு இந்திய நாடாளுமன்றத்தின் லோக் சபையில், பெரும்பான்மை பலம் உள்ள போதிலும், ராஜ்யசபையில் பெரும்பான்மை இல்லை. 

எனவே, காங்கிரஸ் அல்லாத கட்சிகளுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பாஜக உணர்கிறது. 

அதன் மூலம் ராஜ்யசபையில் சட்டமூலங்களை நிறைவேற்ற முடியும் என்று பாஜக நம்புகிறது. 

அதிமுகவுக்கு ராஜ்யசபையில் 10 உறுப்பினர்கள் உள்ளனர். 

இங்கு ஆதரவளிப்பதற்காக, ஜெயலலிதா தமிழ்நாட்டுக்கு நிதி உதவிகளைக் கோரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற பின்னர், தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதம் தொடர்பாக, இந்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஜெயலிதாவுடன் நேற்று முன்தினம் கலந்துரையாடியுள்ளார். 

இதன்போது பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. 

ஜெயலலிதாவுக்கும் நரேந்திர மோடிக்கும் நீண்டகாலமாக நல்லுறவு இருந்த வந்த போதிலும், கடந்தவாரம் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வுக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை அழைப்பு விடுத்ததால், அந்த உறவுகளில் சிறிய நெருடல் ஏற்பட்டிருந்தது. 

சிறிலங்கா அதிபர் பங்கேற்ற பதவியேற்பு நிகழ்வை ஜெயலலிதா புறக்கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனித்து ஆட்சியமைத்ததால், தமிழ்நாட்டின் செல்வாக்கு புதுடெல்லியில் இல்லாமற்போய் விட்டதாக, சிறிலங்கா அரசாங்கம் மகிழ்ச்சி வெளியிட்டிருந்தது. 

தற்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணையக் கூடும் என்றுவெளியாகியுள்ள தகவல்கள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிய வருகிறது. 

அதேவேளை, நரேந்திர மோடி – ஜெயலலிதா சந்திப்பில், மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளுக்கும் அப்பாற்பட்ட விவகாரங்கள் குறித்தும் பேசப்படவுள்ளதாகவும் புதுடெல்லி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment