Friday, December 31, 2010

எம் மீனவர்களைப் கொன்ற சிங்கள கடற்படைக்கு பயிற்சியா?: செந்தமிழன் சீமான் அறிக்கை

இலங்கை-இந்திய உறவை மேம்படுத்தும் வகையில் 2011ம் ஆண்டு இரு நாட்டுக் கடற்படையினர் இணைந்து இலங்கை கடற்பரப்பில் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர். இந்தியப் பாதுகாப்புச் செயலாளரின் இந்த அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்திய பின்பு இருநாட்டு கடற்படை உறவை மேம்படுத்தும் வகையில் 2011ம் ஆண்டு இலங்கை – இந்திய கடற்படையினர் இணைந்து இலங்கை கடற்பரப்பில் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர் என்றும் இலங்கை பாதுகாப்பு பிரிவினருக்கு மேலும் பயிற்சிகள் அளிக்கப்படும் எனவும் இந்திய பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பாதுகாப்புச் செயலாளரின் இந்த அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

இலங்கையில் கடந்த ஆண்டு சிங்கள இராணுவம் தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலை தொடர்பாக ராஜபக்‌ஷேவை இனப்படுகொலையின் சூத்திரதாரியாகவும், இலங்கையின் மீது விசாரணை நடத்தவும் உலகம் ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் நிலையில், இது தொடர்பாக ஐ.நா.குழு. இலங்கைக்கு செல்ல உள்ள நிலையில் இலங்கை கடற்படைக்கு பயிற்சி என்ற இந்திய பாதுகாப்புச் செயலாளரின் இந்த அறிவிப்பு உலகின் கவனத்தை திசை திருப்பும் உத்தியாகும். இலங்கை நிகழ்த்திய இனப்படுகொலையை அருகாமையில் இருந்து தொடர்ந்து மறைக்கும் முயற்சியாகும்.

இங்கோ தமிழ்நாட்டில் இதுவரை 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டபொழுதும் இந்தியக் கடற்படை இதுவரை கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் மீனவன் படகிலும், இந்தியக் கடற்படையின் கப்பலிலும் ஒரே இந்திய தேசியக் கொடி பறந்தாலும் தமிழ் மீனவன் கொல்லப்படும் பொழுதோ இந்தியக் கடற்படை செயலற்று உல்லாசமாக இருக்கிறது. இதோ இன்று கூட தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது.

ஆனால் நம் மீனவனைக் காப்பாற்ற எதிர்தாக்குதலோ, இலங்கை இராணுவத்திற்கு ஒப்புக்குக் கூட கண்டனமோ தெரிவிக்காத கடற்படை பிறகு யாரைக் காப்பாற்ற ரோந்துப் பயிற்சியை இணைந்து மேற்கொள்ளப் போகிறது?
ஏற்கனவே ஈழத்தமிழர்களைக் கொன்றதற்கு மறைமுகமாக ஆயுதங்கள் உட்பட அனைத்து உதவியையும் செய்த இந்திய அரசு இன்னும் மீதமிருக்கும் அங்குள்ள தமிழர்களையும், இங்குள்ள தமிழ் மீனவனையும் கொல்வதற்கு சிங்கள இராணுவத்திற்கு தொடர்ந்து ஆலோசனை வழங்கப் போகின்றதா?என்று தெரியவில்லை.

இந்தியக் கடற்ப்டையின் தமிழர் விரோதப்போக்கு வெந்த எமது புண்ணில் வெந்நீரைப் பாய்ச்சுவதாக இருக்கிறது.அதற்கு எமது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

No comments:

Post a Comment