மன்னார் மாவட்டம் முசலி
பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த 2007
ஆம் ஆண்டு யுத்தத்தின் காரணமாக இடம் பெயர்ந்து மன்னார் மாவடடத்தின் ஏனைய
பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.இம்மக்கள் இடம் பெயர்ந்து 4 வருடங்கள் கடந்துள்ள போதும் தங்களை இது வரையில் தமது சொந்த இடங்களில் மீள் குடியமாத்தாமை குறித்து கவலைத் தெரிவிக்கின்றனர்.
தங்களை மீள் குடியேற்றம் செய்யப்படாமல் உள்ளதையும் மீண்டும் தமது சொந்த இடத்தில் மீள் குடியமர்த்துமாறு கோரி நேற்று செவ்வாய்க்கிழமை முள்ளிக்குளம் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து காலை மௌன ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.என். வேதநாயகன் அவர்களிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
மன்னார் மறை மாவட்ட ஆஜர் மேதகு இராயப்பு யோசப்பு ஆண்டகையின் ஆசிர்வாதத்துடன் நேற்றுக் காலை 10.30 மணியளவில் ஆரம்பமான இந்த மௌன ஊர்வலத்தில் முள்ளிக்குளம் கிராமத்திலுள்ள 1500 இற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
இவ் ஊர்வலத்தின் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை, அருட்தந்தையர்கள், முள்ளிக்குள கிராம மக்கள், திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஊர்வலமாகச் சென்று, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகனி்டம் மகஜர் கையனிக்கப்பட்டது. இது குறித்து கிராம மக்கள் தெரிவிக்கையில்..
தாங்கள் முள்ளிக்குளம் கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்து 4 வருடங்களைக் கடக்கின்றது. தற்போது முள்ளிக்குளம் கிராம மக்கள் மாவட்டத்தின் பல பாகங்களிலும் அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
எமது மீள் குடியேற்றத்தில் எந்த அதிகாரிகளும் அக்கறை இன்றி செயற்படுகின்றனர். குறிப்பாக அமைச்சர்கள் எங்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர். நாங்கள் தொழில் இன்றி உணவுக்காக நாளாந்தம் போராடி வருவதாகவும் ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்தார்.






No comments:
Post a Comment