Wednesday, November 16, 2011

விடுலைப் புலிகள் மீதான நோர்வேயின் குற்றச்சாட்டை நிராகரிக்கிறார் ருத்ரகுமாரன்

சிறிலங்காவில் நோர்வேயின் சமாதான முயற்சிகள் தோல்வி கண்டதற்கு, விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசும் தமது கொள்கையில் கடைப்பிடித்த இறுக்கமான நிலைப்பாடே காரணம் என்று நோர்வேயின் மீளாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ள கருத்தை நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.ருத்ரகுமாரன் நிராகரித்துள்ளார்.நோர்வேயின் நிலையுடன் சிறிலங்கா அரசுடன் நடத்தப்பட பேச்சுகளின் போது விடுதலைப் புலிகளின் சட்டஆலோசகராக பங்கேற்ற அவர், பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலே இந்தக் கருத்தை நிராகரித்துள்ளார்.

“விடுதலைப் புலிகள் இந்தப் பேச்சுக்களில் உளச்சுத்தியுடனேயே ஈடுபட்டனர்.

பேச்சுக்கள் நடக்கும்போதே, விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதம் என்ற கண்ணாடியின் ஊடாகப் பார்த்து, அவர்கள் கொண்டிருந்த சமபல நிலையைக் குலைத்த, அனைத்துலக சமூகம் தான் இந்தப் பேச்சுக்கள் தோல்வியடைந்ததற்குக் காரணம்.

விடுதலைப் புலிகள் இந்தப் பேச்சுக்களின் போது, பல விட்டுக் கொடுப்புகளைச் செய்தனர்.

போர்நிறுத்த மீறல்கள் விவகாரத்திலும், சிறிலங்கா அரசே பாரிய மீறல்களில் ஈடுபட்டது.

போர்நிறுத்த மீறல்கள் விடயத்தில், சிறிலங்கா போர்நிறுத்தக் கண்காணிப்பு குழு கூட,மீறல்கள் குறித்த எண்ணிக்கையை மேலோட்டமாகப் பார்க்கக் கூடாது, அதன் கீழுள்ள தார்ப்பரியத்தைப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.“ என்று அவர் கூறியுள்ளார்.

இனப்பிரச்சினை விவகாரத்தில் புலம்பெயர் தமிழர்கள் முன்னணி நிலையை எடுக்காமல், தலைமைத்துவத்தை,சிறிலங்காவில் வசிக்கும் தமிழர்கள் எடுக்க வேண்டும் என்று நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டதைப் பற்றிக் கருத்து தெரிவித்துள்ள வி.ருத்திரகுமாரன்,

" புலம்பெயர் தமிழர்கள், உள்நாட்டில் களத்தில் வாழும் தமிழர்கள் என்ற பேதம் உண்மையானதல்ல.

சிறிலங்காவில் வாழும் தமிழர்களுக்கு தங்களது கருத்துக்களை சுதந்திரமாகக் கூறவும் செயல்படவும் தேவையான அரசியல் வெளி, இருக்கவில்லை.

சிறிலங்கா ஒரு ஜனநாயக ரீதியாகத் தோல்வியடைந்த நாடு என்று இந்த அறிக்கையே கூறுகிறது.

எனவே புலம்பெயர் தமிழர்கள், சிறிலங்கா பிரச்சினையில் குரல் கொடுப்பதில் தவறில்லை," என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment