சனல் - 4 தொலைக்காட்சியால் இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பில் வெளியிடப்பட்ட ‘இலங்கையின் கொலைக்களம்’ என்ற காணொளியின் திரையிடலும் ‘காணொளி வெளிப்படுத்திய துயரமும் சமகால இலங்கையில் அதன் அர்த்தப்பாடும்’ என்ற தலைப்பிலான கலந்துரையாடலும் கடந்த 10 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை பேரண் மாநகரில் நடைபெற்றது.


அச்சுறுத்தப்பட்ட இனங்களுக்கான அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் சுவிஸ் ஈழத் தமிழரவையின் தலைவி செல்வி தர்சிகா பகிரதன், லுற்சன் மாநிலப் பாராளுமன்ற உறுப்பினர் லதன் சுந்தரலிங்கம், பசுமைக் கட்சியின் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் லாங், ஜேர்மனிக்கான சிறி லங்காவின் விசேட தூதுவர் சரத் கொங்ககாகே ஆகியோர் கருத்துரை வழங்கினர். அச்சுறுத்தப்பட்ட இனங்களுக்கான அமைப்பின் திட்டமிடல் பிரிவுத் தலைவி அஞ்சலா மற்லி அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட சிறி லங்கா அரசு தொடர்பிலான விமர்சனங்களுக்குப் பதிலளிக்கத் திணறிய தூதுவர் சரத் கொங்ககாகே அழையா விருந்தாளியாக நிகழ்வுக்கு வருகை தந்திருந்த சிறி லங்காவிற்கான முன்னாள் சட்டமா அதிபர் மொகான் பீரிஸைத் துணைக்கழைத்துக் கொண்டார். அவரும் கூட முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்குப் பதிலளிக்காமல் சுற்றி வளைத்துப் பேசி பார்வையாளர்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டார்.

சனல் - 4 காணொளியினைப் போலியாகத் தயாரிக்கப்பட்டவை என மறுதலித்த சிறி லங்காத் தூதுவர் இதற்குப் பதிலடியாக இலங்கை அரசினால் தயாரிக்கப்பட்ட காணொளியை ஒளிபரப்ப வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் குறைப்பட்டுக் கொண்டார்.

தமிழர்கள் சுவிஸ் சமூகத்தில் நன்றாக இணைந்து வாழ்வதாகத் தெரிவித்த யோசப் லாங்,  போர்க் குற்றவாளியெனக் குற்றஞ்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் ஜேர்மனி மற்றும் சுவிஸ் நாடுகளுக்கான துணைத் தூதுவராகக் கடமையாற்றுவதற்கு சுவிஸ் மத்திய அரசாங்கம் தனது ஆட்சேபணையைத் தெரிவித்திருந்த போதிலும், ஜேர்மனுக்கான இலங்கைத் தூதுவராலயத்திலிருந்து கிடைத்த கடிதம் ஒன்றில் ஜெகத் டயஸின் கையொப்பம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

தமிழ்த் தரப்பில் கருத்துத் தெரிவித்தோர் இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்களைப் போன்று சம உரிமை பெற்ற மக்களாக வாழ வழி செய்யப்பட வேண்டும் எனவும் போர்க் குற்றங்களை இழைத்தோர் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் கூறினர்.

பார்வையாளர்களின் கேள்விகள் யாவும் இலங்கை அரசாங்கத் தரப்பினரை நோக்கியதாகவே அமைந்திருந்தன. சனல் - 4 காணொளி போலியானது என்பதை நம்ப மறுத்த பார்வையாளர்கள் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதை உணர்ந்தவர்களாகவும், தமிழர்கள் மீது அனுதாபம் மிக்கவர்களாகவும் விளங்கியமை குறிப்பிடத்தக்கது.

பார்வையாளர்களுள் ஒருவரான சுவிஸ் நாட்டவர்      ‘ராஜபக்ச – அடுத்த கடாபி’ என்ற வாசகங்களைத் தாங்கிய பதாதையொன்றினை வைத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

சிறி லங்கா அரசு தரப்பும் தமிழீழக் கோரிக்கையைக் கொண்ட ஈழத் தமிழரவைப் பிரதிநிதிகளும் முதன்முறையாக இந் நிகழ்வில் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகக் கருதப்படுகின்றது.