Thursday, January 19, 2012

இலங்கை ஜனாதிபதி பண்புள்ளவராம் புகழ்ந்த அமைச்சர் கிருஸ்ணா!


இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணா இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவை ஒரு நல்ல பண்பாளர் என்று தெரிவித்துள்ளார். அதனைத் தான் ஒரு சம்பவம் மூலம் புரிந்து கொண்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

நேற்று காலையில் அலரி மாளிகையில் பொங்கல் விழா நடைபெறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்த போதிலும் தான் மாலையில் தான் கொழும்பு வந்து சேருவேன் என்பதை அறிந்து கொண்ட ஜனாதிபதி அந்த விழாவை நானும் கலந்து கொள்வதற்கு வகை செய்வதற்காக மாலை வரையில் ஒத்திவைத்தார் என்றும், இதனால் நான் மனம்நெகிழ்ந்து ஜனாதிபதியை பாராட்டினேன் என்றும் கூறினார்.

மீனவர் பிரச்சினை பற்றி பிரஸ்தாபித்த இந்திய அமைச்சர், மீனவர்களும் மனிதர்கள் என்பதை உணர்ந்து இலங்கை, இந்திய தரப்பினர் இரு சாராரும் அவர்களை மனிதாபிமான முறையில் நடத்த வேண்டுமென்றும், சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை, இந்திய கடற்றொழில் பற்றிய கூட்டத்தொடரில் நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பது குறித்து மனமகிழ்ச்சியடைவதாகவும் அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா மேலும் தெரிவித்தார்.

இந்திய வெளியுறவு அமைச்சரின் விஜயத்தை முன்னிட்டு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

இலங்கையும், இந்தியாவும் வரலாற்று காலம் முதல் ஆரம்பகால நாகரீக யுகத்தில் இருந்து நட்புறவுடன் இருந்து வரும் இரண்டு நெருங்கிய நாடுகளாக விளங்குகின்றன.

எனவே, எங்கள் நாடுகளுக்கிடையில் தோன்றக்கூடிய பிரச்சினைகளை நாம் எங்களுக்கிடையிலான நட்புறவுக்கு முக்கியத்துவமளித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதன் மூலம் தீர்த்து வைக்கமுடியும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருக்கிறோம் என்று இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம்.

கிருஷ்ணாவும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸும் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டின் போது ஒரே விதமான இந்தக் கருத்தை வலியுறுத்தினர்.

பத்திரிகையாளர் மாநாட்டின் போது ஒரு பத்திரிகை ஆசிரியர் இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக ஒரு காலக்கெடு இருக்கிறதா? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், இதுபோன்ற உணர்வுபூர்வமான அரசியல் தீர்வுகளை தீர்த்து வைப்பதற்கு காலக்கெடு விதிப்பது கடினமான விடயமென்று கூறினார்.

நாம் இந்த விடயம் தொடர்பாக சகல தரப்பினருடனும் மனம் விட்டு பேச வேண்டும். அந்த பேச்சுவார்த்தைகளின் மூலம் தெரிவிக்கப்படும் கருத்துக்களை அடிப்படையாக வைத்து, நாம் சில யோசனைகளை முன்வைத்து, உரையாடுவதன் மூலம் ஒரு நிரந்தர தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு உதவ முடியுமென்பதில் நாம் அசையாத நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்று கூறினார்.

பாராளுமன்ற தெரிவுக்குழுவே இனப்பிரச்சினைக்கு தீர்க்கமான முடிவை காணக்கூடிய ஒரு சிறந்த மேடையாக விளங்குகிறது. எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்த வாய்ப்பை நழுவ விடாமல் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தங்கள் உறுப்பினர்களின் பெயரை முன்மொழிய வேண்டும்.

இதன் மூலமே எங்கள் நாட்டின் நீண்டகாலம் தொடர்ந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை காணமுடியும் என்று பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

இந்தியா இலங்கையின் ஒரு நெருக்கமான நட்பு நாடு. கடந்த காலத்தில் எத்தனையோ சந்தர்ப்பங்களில் இந்தியா எங்களுக்கு உதவி செய்திருக்கின்றது. இந்த நட்புறவை எதிர்காலத்திலும் பாதுகாத்து நீடிக்க முடியுமென்று நாம் அசையாத நம்பிக்கை கொண்டிருக்கிறோம் என்று அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் இலங்கை இந்திய மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர் முன் உரையாடுகையில் கூறினார்.

No comments:

Post a Comment