Thursday, March 01, 2012

'ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவளிக்க கியூபா, பிலிப்பைன்ஸ், ஈக்குவடோர் உறுதி'



(றிப்தி அலி)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரேரணைக்கு ஆதரவளிக்க பல நாடுகள் உறுதியளித்துள்ளது என தற்போது ஜெனீவாவிலுள்ள வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
இதன் மூலம் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத் தொடரில் முன்வைக்கப்படும் பிரேரணை முறியடிக்கப்படும் என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக வருகை தந்துள்ள பல நாடுகளுடன் இலங்கை பேச்சு நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த பேச்சுவார்த்தையில் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகள் உள்ளடங்களாக பல நாடுகள் கலந்துகொண்டதாக அமைச்சர் றிசாட் தெரிவித்தார்.
இதன்போது, இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரேரணைக்கு எதிர்த்து வாக்களிப்பதாக பல நாடுகள் உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பெருந்தோட்ட மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கை தூதுக்குழுவினர் இச்சந்திப்பில் கலந்துகொண்டதாக அமைச்சர் றிசாட் பதியுதீன்  தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பது என அணிசேரா நாடுகளின் அமைப்பு தீர்மானித்துள்ளது என ஜெனீவாவிலுள்ள பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்

சுவிட்ஸர்லாந்தின் தலைநகரான ஜெனீவாவில் இன்று புதன்கிழமை நடைபெற்ற அனிசேரா நாடுகளின் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்போம் என கியூபா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஈக்குவடோர் ஆகிய நாடுகள் இக்கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 19ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக  முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு ஈரான், கட்டார், சவூதி அரேபியா, மலேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் எதிராக வாக்களிக்கும் என  ஏற்கனவே உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment