Wednesday, May 30, 2012

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவேந்தி அமெரிக்காவில் மரநடுகை

அமெரிக்காவி​ன் இலினொய்ஸ் மாநிலத்தில், சிகாகோ பெரு நகரிற்கு அண்மையில் உள்ள போலிங்புறூக் நகரில் முள்ளிவாய்​க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது உயிர்நீத்த தமிழ் மக்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியதோடு, நினைவு நாளுக்கு வந்த நூற்றுக்கு மேலான சிறார்களும், பெரியவர்களும் மலர் தூவி வழிபாடும் செய்து கொண்டனர்.

கலாநிதி ஸ்கந்தகுமார் தலைமையில், பல்கலைக் கழக மாணவி செல்வி தர்ஷிகா விக்னேஸ்வரனின் அமெரிக்க தேசிய கீதத்துடனும், வரவேற்புரையுடனும் ஆரம்பித்த நிகழ்வில், பல சிறுவர், சிறுமிகள் இந்த நினைவு நாள் சம்பந்தப்பட்ட தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் இந்த மனித அவலத்தின் நினைவுச் சின்னமாக இங்கு நாட்டப்பட்டுள்ள மரத்தின் அத்தியாவசியத்தைப் பற்றி இளம் தலைமுறையின் பிரதிநிதியாக ஒரு மாணவனும், தமிழர்களால் எடுத்துக் கொள்ளப்படும் பல்வேறு செயல் திட்டங்கள் பற்றியும் இலங்கையில் நடைபெறும் தற்போதைய நிலைப்பாட்டிற்கு அகில உலகத்தின் பல்வேறு நடவடிக்கைகளும் என்ற தலைப்பில் கலாநிதி ஸ்கந்தகுமாரும், மனித அவலங்கள் நினைவு படுத்தப்பட்டு இனிமேலும் அவை நடைபெறாது தவிர்க்கப்பட வேண்டும் என்று வரன் ராஜசிங்கமும் உரை நிகழ்த்தினார்கள்.
இந்த நினைவு நாளின் சிறப்பம்சமாக அமெரிக்கக் காங்கிரஸ் பிரதிநிதியான திருமதி ஜுடி பிக்கெட்டும், போலிங் புறூக் நகரின் மேயரான திரு ராஜர் க்லாரும் கலந்து கொண்டனர்.
திருமதி ஜுடி பிக்கெட், இலங்கையில் மனித உரிமை மீறல் என்ற தலைப்பில் உரையாற்றுகையில், ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள தமிழர்கள் அந்தந்த தொகுதியில் உள்ள காங்கிரஸ் பிரதிநிதிகளோடு தொடர்பு கொண்டு அவர்களின் கவனத்தை ஈர்ப்பதோடு தன்னைப் போன்றவர்கள் செய்யக் கூடிய செயற்திட்டங்களுக்கு பெரும் உதவியாகவிருக்கும் என்று தனது உரையின் போது தெரிவித்தார்.
சிவகடாச்சத்தின் நன்றி உரையின் பின்பு அனைவரும் தமிழர்களுக்கு நடைபெற்ற இரத்தம் தோய்ந்த வரலாற்றுச் சின்னமாக நடப்பட்டுள்ள மரத்தின் அடியில் ஒன்று கூடி, அந்த துயரம் தோய்ந்த நாளை நினைவிற் கொண்டு மனதில் சுமையோடும், கண்ணில் நீரோடும் மலர் அஞ்சலி செலுத்தி, இந்த மாதிரியான மனித அவலம் உலகில் எந்த தேசத்திலோ எந்த இனத்திலோ நடைபெறக் கூடாது. நாம் ஒன்றாக இணைந்து இனிமேலும் நடைபெறாது தவிர்க்கப்பட ஆவண செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் நினைவு நாளை நிறைவு செய்தனர்.

No comments:

Post a Comment