Thursday, June 07, 2012

பொதுநலவாய மாநாட்டு மண்டபம், மல்பரோ ஹவுஸ் முன்பாக ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் பேரெழுச்சி [Wednesday, 2012-06-06 22:28:25]


சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கெதிராக தமிழ் மக்கள் கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வந்த தொடர் போராட்டங்கள் காரணமாக இன்று பொதுநலவாய பொருளாதார பேரவையின் மாநாட்டில் மகிந்த ராஜபக்ஸ ஆற்றுவதற்கு இருந்த உரை ரத்து செயப்பட்டிருக்கின்றது.
பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் மாநாடு நடைபெறும் மான்சன் ஹவுஸ் முன்பாக ஜன சமுத்திரமாக நிறைந்து நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் காலை 9.30 மணியளவில் ஊர்வலம் ஒன்றை லண்டன் மாநகர வீதிகளினூடாக மேற்கொண்டு தற்சமயம் லண்டனின் பிரசித்தி பெற்ற மால்பரோ ஹவுசின் முன்பாக அலையென திரண்டு நிற்கின்றனர்.
இந்த மல்போரோ ஹவுசில் ராஜபக்ஸ உட்பட பொதுநலவாய நாடுகளின் தலைவர்களும் பிரதானிகளும் மகா ராணியுடன் மதிய உணவு உண்ண ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதால், அதனை தமிழ் மக்கள் சாரி சாரியாக முற்றுகை இட்ட வண்ணம் இருக்கின்றனர்.
பல்லாயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்களால் இந்த மல்போரோ ஹவுசின் முன்பாக ராஜபக்சவின் கொடும்பாவி ஒன்றும் சிறிலங்காவின் தேசிய கொடியும் எரிக்கப்பட்டுள்ளது.


மான்சன் ஹவுஸ் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் 2 மைல்கள் தொலைவில் உள்ள மல்போரோ ஹவுசிற்கு மிகவும் பிரசித்தி பெற்ற கனொன் வீதி, ப்ளீட் வீதி, ஸ்ராண்ட் வீதி ஆகியவற்றினூடாக மிக நீண்ட ஒரு ஊர்வலத்தை மேற்கொண்டு மல்போரோ ஹவுசை நோக்கி சென்றதால் பல மணி நேரங்களுக்கு லண்டன் மாநகரில் பாரிய வாகன நெரிசல் காணப்பட்டது. நிலக்கீழ் தொடரூந்து புகையிரதங்களிலும் நெரிசல் அதிகமாக இருக்கிறது.
சிறீலங்கா அரசாங்கத்தின் போர் குற்றம், மனித உரிமை மீறல்கள் மற்றும் அடக்குமுறைகளை கண்டிக்கும் நூற்றுகணக்கான பதாதைகள் மற்றும் சுலோக அட்டைகளை தாங்கியும் கோசங்களை எழுப்பியும் காலை 8 மணி முதல் தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டம் மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ளது.

உலக தலைவர்கள், ராஜதந்திரிகள் மற்றும் பிரதானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் பல வெளிநாட்டு ஊடகங்களின் கவனத்தையும் பெற்றிருக்கிறது.
மல்போரோ ஹவுசின் முன்பாக ஆர்ப்பாட்டத்தை நடத்தி விட்டு தற்சமயம் லண்டன் ஹில்டன் ஹவுசில் முடங்கியிருக்கும் ராஜபக்ஸ பிற்பகல் 4.30 மணியளவில் சிறிலங்காவிற்கு பயணம் செய்ய இருப்பதால் ஹில்டன் ஹோட்டலை முற்றுகை இட தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர். பறை முரசுகள் மற்றும் ஊதுகுழல்கள் மூலம் பாரிய எழுச்சி ஒலிகளையும் ஆர்ப்பாட்டகாரர்கள் எழுப்பி வருகின்றனர். இதேவளை, உரை ரத்து செயப்பட்டுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ஸ லண்டன் ஹில்டன் ஹோட்டலில் தங்கியிருப்பதால் தற்சமயம் ஹிடன் ஹோட்டலை தமிழ் மக்கள் முற்றுகை இட்ட வண்ணம் இருக்கின்றனர்.

ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்தும் பிரித்தானியாவின் பல்வேறு பாகங்களில் இருந்தும் தொடர்ந்தும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்த வண்ணம் இருக்கின்றனர். நூற்றுக்கணக்கான பிரித்தானிய பொலிசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் இதர புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் ஒருங்கிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தன.
-பிரித்தானிய தமிழர் பேரவை-






  

No comments:

Post a Comment