Wednesday, August 08, 2012

பிரிட்டிஷ் கொடிக்கு சரிசமமாக லண்டனில் பறந்த தமிழீழத் தேசியக் கொடி! கடும் அதிருப்தியில் இலங்கை


லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகளின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரின் பிரசாரச் செயற்பாடுகள் முன்னெடுக்கப் படுவதற்குப் பிரிட்டன் இடமளித்திருப்பது தொடர்பில் இலங்கை கடும் அதிருப்திக் குள்ளாகியிருப்பதாகத் தெரியவருகிறது.

அத்துடன் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடங்களில் தமிழீழத் தேசியக் கொடி தாராளமாகப் பறப்பது குறித்தும் இலங்கை அரசு கடும் விசனம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும் காலப்பகுதிக்குள் இங்கிலாந்தில் வசிக்கும் எந்தவொரு நபரும் அரசியல் கருத்துகளையோ வேறெந்த நாடுகளின் பிரச்சினைகளை முன்னிறுத்திச் செயற்படவோ அனுமதிக்கப் போவதில்லை யென முன்னதாகப் பிரிட்டன் அறிவித்திருந்தது.


ஆனால் நேற்றுமுன் தினம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் ஒலிம்பிக் கிராமம் ஒன்றிற்கருகில் ஸ்ட்ராட் பேர்ட் என்னுமிடத்தில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கியிருந்தனர். அத்துடன், பிரிட்டிஷ் தேசியக் கொடிக்கருகில் தமிழீழத் தேசியக் கொடியை ஏற்றியிருந்த எதிர்ப்பாளர்கள், ஒலிம்பிக் நிகழ்வில் இலங்கை வீரர்கள் பங்கு பற்றுவதைத் தடைசெய்ய வேண்டுமெனவும், போர்க்குற்றங்களை விசாரிப்பதுடன், லண்டனில் அகதிகளாக இருப்பவர்களைத் திருப்பி அனுப்பக்கூடா தென்றும் கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் இவ்வாறான சுதந்திரமான செயற்பாடுகளுக்குப் பிரிட்டிஷ் அரசு அனுமதி வழங்குவது தொடர்பில் கடும் அதிருப்தியடைந்துள்ள இலங்கை அரசு இது தொடர்பான தனது ஆட்சேபத்தை இராஜதந்திர ரீதியில் வெளிப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மேலும் அறியமுடிகின்றது.

இலங்கை அரசின் இந்த அதிருப்தியை இலங்கை வெளிவிவகார அமைச்சு கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதரகத்திடம் வெளிப்படுத்துமென மேலும் தெரியவருகிறது.

No comments:

Post a Comment