Wednesday, September 12, 2012

கார்ட்டூனுக்காகக் கைது

இந்திய நாடாளுமன்றத்தையும் தேசியச் சின்னத்தையும் அவமதித்து கார்ட்டூன் வரைந்ததாக அசீம் திரிவேதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வரைந்த கார்ட்டூன்களை நான் இதுவரையில் பார்த்திருக்கவில்லை. கைது செய்தி கேட்டு இணையத்தில் தேடியதில், விக்கிபீடியாவில் இந்த இரண்டு கார்ட்டூன்களும் இருந்தன.

[விக்கிபீடியா படங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளதால் வரவில்லை. வேறு இடத்திலிருந்து லிங்க் கொடுத்துள்ளேன்.]
இப்படி கார்ட்டூன் போட்டதற்காகவெல்லாம் கைது செய்வார்களா என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் ஒருவகையில் சட்டத்தை ‘டெஸ்ட்’ செய்யவேண்டியது அவசியமாகிறது. இந்த வழக்கை வலுவான வக்கீல்கள் நடத்தி, வழக்கு தொடுக்கக் காரணமாக இருந்த மாநில அரசை சந்தி சிரிக்கவைத்து, கடுமையான அபராதம் விதிக்குமாறு செய்தால் நன்றாக இருக்கும்.

நாடாளுமன்றம், சட்டமன்றங்கள், பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள், அரசியல்வாதிகள் என அனைவர்மீதும் நாட்டில் உள்ள யாருக்குமே நம்பிக்கை இல்லை என்பது தெளிவு. அவர்களைக் கேலி செய்யும் விதமாக உருவாக்கப்படும் கார்ட்டூன், ‘தேசம்’, ‘தேசியச் சின்னம்’, ‘தேசியக் கொடி’ ஆகிய அருவங்களைக் கேலி செய்வதாக ஆக்கி, ஏதோ அரதப் பழசான சட்டங்களைக் கையில் எடுத்து தண்டனை தரும் அளவுக்கு ஓர் அரசு செல்லுமானால் அந்த அரசு தூக்கி எறியப்படவேண்டிய ஒன்று.

முதலில் இந்த அபத்தங்களை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளவேண்டும். அதற்காக அசீம் திரிவேதி போன்றோர் சில காலம் சிறையில் இருக்கவேண்டியுள்ளது. அவருக்கு என் வந்தனங்கள்.

No comments:

Post a Comment