மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களை மத்திய அரசுக்கு வழங்க முடியாது. சிறுபான்மை மக்கள் எவர் பாதிக்கப்பட்டாலும் அதனை எதிர்ப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.
அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய உதவி உத்தியோகத்தர்
சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்
பொன். செல்வராசாவை நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து திவிநெகும
சட்டவரைபுக்கு ஆதரவளிக்குமாறு கோரியுள்ளனர். இதன் போதே அவர் இவ்வாறு
கூறினார்.
திவிநெகும சட்டவரைபை எதிர்ப்பதாக நாங்கள் முடிவெடுத்துள்ளோம்.
மாகாணசபைகளுக்குரிய அதிகாரங்களை மத்திய அரசுக்குத் தாரைவார்க்க முடியாது.
13 ஆவது திருத்தச் சட்ட வரைபிலுள்ள மாகாண அதிகாரமும் குறைக்கப்படுகிறது.
கிராமிய மட்டத்திலான அபிவிருத்தி மாகாண மட்டத்திலிருந்து மத்திய
அரசுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
ஆதரவளிக்காது.
சட்டவரைபில் திருத்தங்கள் கொண்டுவரப்படுமிடத்து ஆதரவளிப்பது குறித்து பரிசீலிப்போம். என்றார்.
இந்தச் சந்திப்பின் போது, திவிநெகும சட்டவரைபு நிறைவேற்றப்படுவதால்
சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் தொடர்பில்
சங்கத்தினரால் தெளிவுபடுத்தப்பட்டது.
இலங்கை சமுர்த்தி அதிகாரசபையையும் இலங்கை தெற்கு அபிவிருத்தி
அதிகாரசபையையும் இணைப்பதன் மூலம் திவிநெகும திணைக்களம் உருவாக்கப்பட்டு
அனைத்து ஊழியர்களும் ஓய்வூதியத் திட்டத்துக்குள் உள்வாங்கப்படுவர். இதனால்
ஊழியர்கள் மிகவும் நன்மையடைவர் என்று சமுர்த்தி உத்தியோகத்தர்களால்
விவரிக்கப்பட்டது.
இலங்கை முர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய உதவி உத்தியோகத்தர்
சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள், தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கருணாகரனையும் சந்தித்தனர்.
அதேவேளை திவிநெகும சட்டவரைபு தொடர்பான விடயங்கள் அடங்கிய பிரதியொன்றும்
சங்கத்தினருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசாவினால்
வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment