அடுத்த
வருடம் மார்ச் மாதம் சுவிற்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் நடைபெறும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக
மற்றொரு முக்கிய தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான முன்னேற்பாடுகளை
அமெரிக்கா தீவிரப்படுத்தியிருக்கிறது என இராஜதந்திர வட்டாரங்கள் “உதயன்’
பத்திரிகைக்குத் தெரிவித்தன.
சர்வதேச சமூகத்திற்கு கடந்த கூட்டத்
தொடரில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றும் விடயத்தில் இலங்கை அரசு
அசமந்தப் போக்கை கடைப்பிடித்து வருவதன் காரணமாகவே அமெரிக்கா மீண்டும்
களத்தில் குதிக்க முடிவெடுத்துள்ளது.
இதற்காகத் தனது இராஜதந்திரிகளை உஷார்ப்
படுத்தியுள்ள வோஷிங்டன், நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது என அந்த
வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
அமெரிக்காவின் புதிய பிரேரணை மனித
உரிமைகள் சபையில் நிறைவேறினால் அதனை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு கொண்டு
செல்லவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா. மனித
உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக
அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணையை 24 நாடுகள் ஆதரித்தன. கடுமையான இராஜதந்திர
சமருக்கு மத்தியிலேயே அதை அமெரிக்கா நிறைவேற்றியது.
சீனா, ரஷ்யா, கியூபா போன்ற நாடுகள்
இலங்கைக்குப் பக்கபலமாக இருந்து அந்தப் பிரேரணையை எதிர்த்தன. எட்டு
நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்தன. பிரேரணையை 15
நாடுகள் எதிர்த்தன.
இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின்
அறிக்கையிலுள்ள சிபாரிசுகளை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறே அந்தத்
தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது. நல்லிணக்க ஆணைக்குழுவின்
அறிக்கையை நடைமுறைப்படுத்தும் போது ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் ஆலோசனை,
தொழில்நுட்ப உதவிகளை இலங்கை பெறவேண்டும் என்றும் தீர்மானம்
வலியுறுத்தியது.
ஜெனிவாத் தீர்மானத்தில் முன்வைக்கப்பட்ட
சிபாரிசுகளை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு ஒரு வருட கால அவகாசம்
வழங்கப்பட்டது. ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 8 மாதங்கள் கடந்த
நிலையில், ஜெனிவாத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் இலங்கை அரசு
கரிசனை காட்டவில்லை என்றும் அது மனித உரிமைகளுக்கோ கடந்த கால
சம்பவங்களுக்கோ பொறுப்புக்கூறும் கடப்பாட்டிலிருந்து விலகிச் செல்கிறது
என்றும் அமெரிக்கா கருதுகின்றது. இதனாலேயே மற்றுமொரு பிரேரணையைக் கொண்டுவர
அது முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment