Friday, November 23, 2012

ஐ.நா மீளாய்வு அறிக்கை விவகாரம்: அனைத்துலக ஆணையம் நிறுவ வேண்டும்! – நா.க.த.அரசு கோரிக்கை

imageஇலங்கைத்தீவில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்த மீளாய்வு அறிக்கை தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளது.
ஐ.நாவின் உள்ளக அறிக்கை வழியே அனைத்துலக ஆணையம் ஒன்று நிறுவப்பட வேண்டியமை இன்றியமையாதுள்ளது.ஐ. நா பட்டயத்தின் பிரிவு 99 இன் கீழ் தரப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்திச் ஐ. நா பொதுச்செயலாளர் பான் கி மூன் அவர்கள் செயற்பட வேண்டும்.
• தமிழ் இன அழிப்புப் பற்றிய அறிக்கையை உடன் பகிரங்கப்படுத்துமாறு ஐநா அதிகாரி அடமா டீங் அவர்களைவலியுறுத்துகின்றோம்.
• விசாரணையில் இன அழிப்பையும் உள்ளடக்குமாறு வலியுறுத்துகின்றோம்.
• சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பாளர்களையும் பாதிப்புக்குள்ளான தமிழ் மக்களையும் ஒரேநோக்கில் மதிப்பிடல் தவறானது.

• ஐ நா அலுவலர்களைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்துவதற்கும் அவர்களின் செயற்பாடுகளை முடக்குவதற்கும் சிறீலங்கா மேற்கொண்ட முயற்சிகள் பற்றியும் விசனம் தெரிவிக்கிறோம். ஆகிய விடயங்களையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
‘ஐ.நா செயலாளர் நாயகத்தின் சட்ட ஆலோசகர்களின் பரிந்துரைக்கு ஏற்ப பட்டயத்தின் பிரிவு 99இன் கீழ் அவர் அனைத்துலக விசாரணை ஆணையம் ஒன்றை நியமிக்க வேண்டும் என நாம் அவரை வலியுறுத்துவதோடு, தமிழ் மக்கள் மீதான இன அழிப்புப் பற்றிய இந்த அறிக்கையைப் பகிரங்கப்படுத்துமாறு பிரான்சிஸ் டெங் அவர்களையும் கோருகின்றோம்’ என இன அழிப்பு விசாரணை, போர்க்குற்றங்கள், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் என்பவற்றுக்குப் பொறுப்பான நாடுகடந்த தமிழீழ அரசின் அமைச்சர் டிலக்ஷன் மொறிஸ் கூறியுள்ளார்.
இந் நிகழ்வுகள் பற்றி இதுகாணும் உலக அரங்கில் தொனித்து வந்துள்ள பாதிக்கப் பட்டவர் மீது பழிபோடும் மனோபாவம் இனியாவது ஒரு முடிவுக்கு வரும் என்று நம்புகின்றோம்.
ஆக்கிரமிப்பாளர்களையும் பாதிக்கப் பட்டவர்களையும் ஒரே தராசில் எடை போடுவதென்பது தார்மீக அடிப்படையில் ஒரு மாபெரும தப்பென்று நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளோம்’ என டிலக்ஸன் மொறிஸ் தெரிவித்துள்ளார்.
இனஒழிப்பு, போர்க்குற்றங்கள் குற்றவிசாரணைக்கும் தடுப்புக்குமான விவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம்:
2012ஆம் ஆண்டு கார்த்திகைத் திங்கள் 14ஆம் நாளன்று ஐ.நா செயலாளர் நாயகத்தின் உள்ளக மீளாய்வுகுழுவின் அறிக்கை வெளிவந்துள்ள இத்தருணத்தில் அவருடைய சட்ட ஆலோசகர்கள் ஏற்கனவே விதந்துரைத்துள்ளபடி ஐ.நா பட்டயத்தின் பிரிவு 99 இன் கீழ் அனைத்துலக விசாரணை ஆணையம் ஒன்றை ஐ.நா செயலாளர் நாயகம் திரு பான் கி மூன் உருவாக்க வேண்டும்.
அத்துடன், ஐ.நா செயலரின் கீழ் இயங்கும், இன அழிப்பைத் தடுப்பதற்கான சிறப்பு ஆலோசகர் திரு அடமா டீங் அவர்களை தமிழ் இன அழிப்புப் பற்றிய உள்ளக அறிக்கையை உடனடியாகப் பகிரங்கப்படுத்து வேண்டும்.
அது மட்டுமன்றி, சட்ட நடவடிக்கைகள் யாவும் போர்க்குற்றங்கள், மானுடத்துக்கு எதிரான குற்றங்களோடு மட்டும் நின்று விடாமல், இன அழிப்பையும் உள்ளடக்க வேண்டும்.
ஐ.நா உள்ளக மீளாய்வு அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளவாறு கற்றுக் கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரமே வழங்கப்பட்டுள்ளதாலும், நீதித்துறையின் மூலம் கண்காணிக்கும் சூழல் இல்லை என்பதனாலும் சிறிலங்காவில் நடக்கக் கூடிய பரிகாரங்கள் நிறைவடையும் வரை ஐ.நா செயலாளர் நாயகம் காத்திருக்கத் தேவையில்லை. நீதி வழங்குதலைப் பின் போடுதலானது நீதி மறுக்கப்படுதலுக்குச் சமமானதாகும்.
குறித்த இந்த உள்ளக அறிக்கையின் படி, 2009ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த யுத்தத்தின் போது இறுதி ஐந்து மாதங்களில் ஒரு இலட்சத்திற்கு மேலான அப்பாவித் தமிழ் மக்கள் கொன்றழிக்கப் பட்டது தொடர்பாக ஐ.நா செயலர் அவர்களுக்கு ஐ.நாவின் பட்டயத்தின் பிரிவு 99இன் கீழ், சிறிலங்காவுக்கு எதிரான அனைத்துலக விசாரணை ஆணையம்ஒன்றை நியமிப்பதற்கான அதிகாரம் உள்ளதாக, அவரது சட்ட ஆலோசகர்கள் அவருக்குப் பரிந்துரைத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மீளாய்வு அறிக்கை சிங்கள ஆக்கிரமிப்பாளருக்கும் அந்த ஆக்கிரமிப்பால் தம் நிலை குலைந்த தமிழ்க் குடிமக்களுக்குமிடையே தப்புக்களின் சமன்பாடு என்று ஒன்று கிடையாது என்ற கருத்தையே வலியுறுத்தி நிற்கின்றது.
ஐ.நா தரவுகளின் படி, ‘பெரும்பாலான உயிரிழப்புகள் அரசாங்கத்தின் தாக்குதல்களினாலேயே இடம்பெற்றன’ என இந்த மீளாய்வுக் குழுவின் அறிக்கை கூறுகின்றது. ‘விடுதலைப் புலிகள் இயக்கத்தின்மீது கூடிய குற்றத்தைச் சுமத்த முயலுவது தவறு. உண்மையில் நிலைமை அதுவல்ல எனத்தாம் ஐ.நா தலைமையகத்திற்கு எடுத்துக் கூறியதாக கொழும்பிலுள்ள சில ஐ.நா அதிகாரிகள் குறிப்பிட்டதாகவும்’ இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை வெளிவந்ததன் பின்னர் ஏப்ரல் திங்கள் 29, 2011 நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஐநா செயலாளர் நாயகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தது.
அதன்படி, ஐநா நிபுணர் குழுவில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகள் இன அழிப்புக்குள் அடங்கும் என அக் கடிதத்தில் தாம் தெளிவாகக் குறிப்பிட்டிருந்ததாகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இங்கு மேலும் குறிப்பிட விரும்புகின்றது.
தற்போது ஐ.நா மீளாய்வுக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:
மனித உரிமை. மனிதாபிமான சட்டங்களின் அடிப்படையில் இன அழிப்பைத் தடுப்பதற்கான கடமைப்பாடும் இன அழிப்பைத் தடுப்பதற்கான அதிகாரமும் உள்ள ஒருவர் யுத்தத்தின் போது இருந்த நிலைமையைப் பற்றி சிறிலங்கா அரசாங்கத்துக்கும் செயலாளர் நாயகத்துக்கும் தனது கரிசனையைத் தெரியப்படுத்தியுள்ளார்.
ஆனால், இரகசியம் பேணும் இராஜதந்திரத்தைப் பின்பற்றுவதால் ‘தான் எதையும் வெளியே கூற மாட்டேன்’ என அரசாங்கத்துக்குக் கூறியுள்ளார். பின்னர் அவரது பணிமனை பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட முன்வந்த போது அதனை ஐ.நா தலைமைப் பீடம் அனுமதிக்கவில்லை.
முன்னாள் ஐ.நா சிறப்புத் தூதுவர் பிரான்சிஸ் டெங் அவர்களின் மேற்குறித்த செயற்பாடானது, இரகசியம் பேணும் இராஜதந்திரத்தின் பாற்படுமா அல்லது சிறிலங்கா அரசாங்கத்தைத் திருப்திப் படுத்தும் முயற்சியா எனும் சந்தேகம் இங்கே எழுகின்றது.
இந்த இராஜதந்திரத்தின் மூலம் சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக் காலத்தில் பல்லாயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதைத் தடுக்க முடியவில்லை என்பது தெளிவாகின்றது. எனவே, வெளிப்படையான துணிகர இராஜதந்திரத்தைப் பின்பற்ற வேண்டிய காலம் இன்று வந்து விட்டதென நாம் உரத்துச் சொல்ல விரும்புகிறோம்.
அதனால், சிறிலங்காத் தீவில் நிகழ்ந்த தமிழின அழிப்புப் பற்றிய அறிக்கையினை தூதுவர் அடமா டீங் அவர்கள் பகிரங்கப் படுத்த வேண்டும் என நாம் கோருகின்றோம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment