அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், அடுத்த மாதம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். வரும், ஜூன் 6ம் நாள் தொடக்கம், 9ம் நாள் வரை புதுடெல்லியில் தங்கியிருக்கும் அவர், இந்தியாவின் புதிய அரசின் அதிகாரிகளைச் சந்தித்து, இருதரப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடுவார் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் மட்ட அதிகாரி ஒருவர் அங்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.
நிஷா பிஸ்வால் தமது பயணத்தின் போது, பிராந்திய விவகாரங்கள் குறித்து, இந்திய அரசதரப்புடன் பேசவுள்ளார்.
இதன்போது சிறிலங்கா விவகாரம் குறித்தும் அவர் முக்கியமாக கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மன்மோகன்சிங் அரசாங்கம் பதவியில் இருந்த போது, கடந்த மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானம் மீதான வாக்கெடுப்பில், இந்தியா நடுநிலை வகித்திருந்தது.
இந்த தீர்மானத்துக்கு அமைய, சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால், இன்னும் சில நாட்களில் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
நிஷா பிஸ்வாலின் புதுடெல்லிப் பயணத்துக்கு முன்னதாகவோ- அதனை ஒட்டியதாகவோ இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதால், இதுகுறித்து இந்திய அதிகாரிகளுடன் அவர் முக்கியமாக ஆலோசிப்பார் என்று நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment