Wednesday, September 17, 2014

சிங்கள ராணுவத்திற்கு கனடாவில் தடை அதிர்சி தகவல் வெளியாகியுள்ளது !



இலங்கையின் படையதிகாரிகள் கனடா செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் இராணுவம், விமானப்படை, கடற்படை உள்ளிட்ட முப்படையினர் கனடாவிற்கு பயணங்களை மேற்கொள்ள முடியாது என கனேடிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் இலங்கைப் படையினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் கனேடிய வீசா வழங்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை மற்றும் யுத்தக் குற்றச் செயல்களை காரணம் காட்டி இலங்கை படையதிகாரிகளுக்கு வீசா வழங்க முடியாது என கனடா நேரடியாகவே அறிவித்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மனித உரிமை மற்றும் யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் பங்கேற்காமை குறிப்பிடத்தக்கது. கனடாவில் நடைபெற்ற சர்வதேச சிறைச்சாலைகள் பேரவையின் அமர்வுகளில் பங்கேற்பதற்காக இலங்கை சிறைச்சாலை அதிகரிகள் இருவர், கனேடிய உயர்ஸ்தானிகரகத்தில் வீசாவிற்காக விண்ணப்பம் செய்திருந்தனர்.
எனினும் குறித்த இரு அதிகாரிகளினதும் வீசா விண்ணப்பங்களை கனேடிய உயர்ஸ்தானிகராலயம் நிராகரித்துள்ளது. மனித உரிமை மற்றும் யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இவ்வாறு வீசா நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த மாநாட்டில் இலங்கையினால் பங்கேற்க முடியவில்லை. இந்த மாநாடு தற்போது கனடாவில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, கனடாவின் இந்த நடவடிக்கைக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் எழுத்து மூலம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கை தொடர்பில் கனடா பிழையான கருதுகோள்களின் அடிப்படையில் செயற்பட்டு வருவதாகவும், ஆயிரக் கணக்கான தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளித்து சமூகத்துடன் மீள இணைத்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.
source:athirvu

No comments:

Post a Comment