சனல் 4வின் ஆவணப் படத்தினைப் பார்க்கும் போது கருத்திலெடுக்கக்கூடிய குறித்த சில வன்முறைகள் இடம்பெற்றிருக்கக்கூடும் என பாலித கோகன்ன ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார். நியூயோர்க்கில், சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட “இலங்கையின் கொலைக்களம்” ஆவணப்படம் திரையடப்பட்ட பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இந்தக் ஆவணப் படத்தினைப் பார்க்கும் போது கருத்திலெடுக்கக்கூடிய குறித்த சில வன்முறைகள் இடம்பெற்றிருக்க்கூடும் என பாலித கோகன்ன ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்.
இவ்வாறு அனைத்துலக மன்னிப்பு சபையின் இணையத் தளத்தில் அதன் ஐநாவுக்கான பணியகத்தின் தலைமை அதிகாரி ‘Sri Lanka’s Killing Fields’ – shocking the UN into action' எனும் தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள விடயங்கள்,
‘இலங்கையின் கொலைக்களம்' என்ற சனல் 4 தொலைக்காட்சியின் விபரணப் படத்தினை நியூயோர்க்கில் அமைந்திருக்கும் அனைத்துலக மன்னிப்புச்சபையின் ஐ.நா பணியகத்தில் திரையிடுவதற்கு நாங்கள் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் அங்கு அதனைப் பார்ப்பதற்காகக் கூடியவர்களது அளவுக்கு அதிகமான எண்ணிக்கைதான் எங்களுக்குக் கவலையினைத் தந்தது.
ஐ.நா தலைமையகத்தில் ஊடகவியலாளர்களுக்காக இந்த ஆவணப்படம் திரையிடப்படுவதற்கு ஏற்பாடாகியிருந்தபோதும் ஐ.நா பொதுச் சபையில் பான் கீ மூனின் இரண்டாவது பதவிக்காலம் தொடர்பான வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் இந்த நிகழ்வு நிறுத்தமானது.
மன்னிப்புச்சபையின் நியூயோர்க் செயலகத்தில் இந்த ஆவணப் படத்தினைப் பார்ப்பதற்காக திரண்டிருந்த பெருந்திரளான பார்வையாளர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் இவ்வளவு காத்திரமான விடயங்கள் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கவில்லை.
2009ம் ஆண்டு இலங்கையினது இறுதிப் போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் இந்த ஆவணப்படத்தில் சிறப்பாக ஆவணப் படுத்தப்பட்டிருக்கிறது.
கடந்த வாரம் பிரித்தானியாவில் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய இந்த ஆவணப்படம் பின்னர் அதனது இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டிருந்தது.
இருப்பினும் இந்த ஆவணப் படத்தினைப் பார்ப்பதற்குத் திரண்டிருந்தவர்களில் எவருமே நெஞ்சைத் தொடுகின்ற, பயங்கரமான, தாங்கவே முடியாத காட்சிகளைத் பார்ப்பதற்குத் தயாராக இருக்கவில்லை.
பொதுமக்கள் வேண்டுமேன்றே இலக்கு வைக்கப்படும், கைதிகள் சுட்டுக் கொலை செய்யப்படும் இந்தக் காட்சிகளை பாதிக்கப்பட்டவர்களும் ஏன் இந்தக் குற்றங்களைப் புரிந்தவர்களும்தான் ஒளிப்பதிவு செய்து வைத்திருந்தனர்.
ஆவணப்படம் திரையிடப்பட்டபோது இராசதந்திரிகள், மனித உரிமைப் பணியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை உள்ளடக்கிய இந்தப் பார்வையாளர்கள் மத்தியிலிருந்து எந்தச் சத்தமும் எழவில்லை, ஏன் இதன்போது எவருமே தங்களது கைத்தொலைபேசி மீதான விரல் விளையாட்டிலும் ஈடுபடவில்லை.
ஐ.நாவிற்கான சிறிலங்காவினது தூதுவரும் அவரது துணைத் தூதுவரும்தான் இந்த ஆவணப்படம் தொடர்பாகப் பதிலளிப்பதற்குப் பதிலாக ஏதோ குறிப்பெடுத்துக்கொண்டிருந்தார்கள். இவர்களது கிறுக்கல் சத்தம்தான் கேட்டுக்கொண்டிருந்தது.
கலாநிதி பாலித கோகன்ன மற்றும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையிலான 15 உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று இந்த ஆவணப்படத்தினை பார்ப்பதற்காக வந்திருந்தனர்.
போர் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் தளபதியாகச் செயற்பட்ட சவேந்திர சில்வாவின் படமும் இந்த ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
சரணடைவதற்கு வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களைச் சுட்டுக்கொலைசெய்தாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.
இந்த ஆவணப்படத்திற்காக இலங்கை அரசாங்கத்தின் பதில் விசித்திரமானது. லிபியாவிலும் சூடானிலும் இடம்பெற்றதைப் போலல்லாமல் இலங்கையினது விடயத்தில் பொறுப்புச் சொல்லும் செயன்முறையினை முன்னெடுப்பதற்காக அனைத்துலக சமூகம் இதுவரை எந்த நடவடிக்கையினையும் எடுக்காதமையானது இலங்கையில் எந்தப் பிரச்சினையும் இடம்பெறவில்லை என்பதையே காட்டுகிறது என இலங்கை அரசாங்கத்தின் இந்தப் பிரதிநிதிகள் வாதிடுகிறார்கள்.
ஆனால், கையடக்கத் தொலைபேசிகள் வாயிலாகவும் ஒளிப்படக்கருவிகள் ஊடாகவும் எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை, அனைத்துலக மன்னிப்புச்சபை உள்ளிட்ட அமைப்புகளினால் வெளியிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் என்பன உண்மையில் அங்கு இடம்பெற்றது என்ன என்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது.
குறிப்பிட்ட இந்த ஆவணப்படம் திரையடப்பட்ட பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இந்தக் ஆவணப் படத்தினைப் பார்க்கும் போது கருத்திலெடுக்கக்கூடிய குறித்த சில வன்முறைகள் இடம்பெற்றிருக்கக்கூடும் என பாலித கோகன்ன ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்.
இங்கு இவர் சற்று விட்டுக்கொடுப்புடன் செயல்பட்டிருக்கிறார் போலத் தெரிகிறது. இருப்பினும் இலங்கையினது வரலாற்றில் ஏற்படுத்தப்பட்ட போலியான விசாரணை ஆணைக்குழுக்கள் மற்றும் 'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு' ஆகியவற்றின் பின்னணியில்தான் கோகன்னவின் இந்தக் கருத்தினை நாம் நோக்கவேண்டும்.
இது இவ்வாறிருக்க, ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனது இரண்டாவது பதவிக்காலத்தினை ஆரம்பித்திருக்கிறார். இந்த நிலையில் இலங்கையில் போரின் இறுதி நாட்களில் இடம்பெற்றது எதுவோ அதற்கான பொறுப்புச்சொல்லும் பொறிமுறை தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக பான் கீ மூன் அமைத்திருந்த வல்லுநர்கள் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த பரிந்துரைகளை இனியாவது நடைமுறைப்படுத்துவார் என நம்புவோம்.
வல்லுநர்கள் குழுவின் அறிக்கையினை பல்வேறுபட்ட நாடுகளும் வரவேற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment