Tuesday, September 20, 2011

ஜெனீவா முன்றலில் கூடிய 9,000 தமிழர்கள்: அதிரவைத்த பொங்கு தமிழ் !


தமிழீழ மக்களின் வேணவாவை மீண்டும் ஒரு தடவை பன்னாட்டு சமூகத்திற்கு இடித்துரைக்கும் வகையில் மாபெரும் �பொங்குதமிழ்� எழுச்சிப் பேரணி நேற்று (19.09.2011) சுவிற்சர்லாந்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் முன்பாக உள்ள �ஈகப்பேரொளி முருகதாசன் திடலில்� இடம்பெற்றது. சுமார் 9,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக இதில் கலந்துகொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அலையெனத் திரண்ட தமிழர் கூட்டத்தில் எங்கு பார்த்தாலும் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் படம் காணப்பட்டது. தமிழீழ தேசியகொடிகளோடு மக்கள் திரண்டு நின்றனர்.


அங்கே வலியுறுத்தப்பட்ட விடையங்களும் நிகழ்வுகளும் பின்வருமாறு:

1. தமிழரின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்பவற்றின் அடிப்படையில் ஒரு தனிநாட்டை இலங்கைத் தீவிற்குள் அமைப்பதற்கான வெகுசன வாக்கெடுப்பை ஐ.நாவின் கண்காணிப்பில் நடாத்துவதற்கு ஆவன செய்ய வேண்டும்.

2. தற்காலிக முகாம்களில் உள்ள மக்களையும், சிறையில் உள்ள போராளிகளையும் உடனடியாக விடுதலை செய்வதுடன், நிபந்தனையின்றி சொந்த இடங்களில் உரிய அடிப்படை வசதிகளுடன் அவர்கள் குடியமர்த்த வேண்டும்.

3. தமிழரின் தாயகப் பிரதேசங்களில் இருந்து சிறீலங்கா படையினர் வெளியேற்றப்படுவதுடன், அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

4. சனல்- 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய �சிறீலங்காவின் கொலைக்களம்� என்ற ஆவணப்படத்தையும், மேலதிகமாகக் கிடைக்கப்பெற்ற ஆவணங்களையும், மற்றும் நேரடிச் சாட்சிகளையும் போர்க்குற்ற சாட்சியங்களாகக் கொண்டு, சிறீலங்கா அரசாங்கத்தினை அனைத்துலக நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த சகல நாடுகளும் ஆலோசனை வழங்க வேண்டும்.

5. முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையைக் குறைத்து அவர்களின் கருணை மனுவை இந்திய அரச அதிபர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

6. சர்வதேச நாடுகளின் ஆலோசனைகளைப் புறந்தள்ளும் சிறீலங்கா அரசாங்கத்துடனான நட்புறவை அனைத்துலகமும் துண்டிக்க வேண்டும்.

7. மேற்க்கூறப்பட்ட கோரிக்கைள் நடைமுறைப்படுத்தப்பட்டு தமிழர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை புலம்பெயர் நாடுகளில் ஏதிலித் தஞ்சம் கோரியவர்களை திருப்பி அனுப்புவதை நிறுத்த வேண்டும்.

போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இந்த �பொங்குதமிழ்� எழுச்சிப் பேரணி இடம்பெற்றது. சுவிற்சர்லாந்தில் உள்ள மக்கள் மட்டுமன்றி ஐரோப்பாவின் ஏனைய நாடுகளிலுள்ள மக்களும் பேருந்துகளிலும், விமானத்திலும் சென்று இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர். குறிப்பாக பிரித்தானியாவில் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 18வது கூட்டத்தொடர் தற்பொழுது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தருணத்தில் உலகத் தமிழினம் மீண்டும் ஒருங்கிணைந்து எழுச்சிகொண்டு தமது உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளது ஒரு வரலாற்றுப் பதிவாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment