Tuesday, September 27, 2011

மக்கள் கொல்லப்பட்டது பற்றிக் கேட்டதற்கு ஏளனமாகப் பதிலளித்த கோத்தாபய - விக்கிலீக்ஸ்

வன்னியில் போரின் இறுதிக்கட்டத்தில் பாதுகாப்பு வலயத்தில் நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதலில் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் கூறியபோது, காலநிலை சரியில்லாததால் இரண்டு நாட்களாக ஜெட் போர் விமானங்கள் பறக்கவில்லையே என்று ஏளனமாகப் பதிலளித்துள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.



கொழும்பில் இருந்து அப்பேதைய அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் இதுபற்றி வொசிங்டனில் உள்ள இராஜாங்கத் திணைக்களம் மற்றும் தூதரகங்களுக்கு 2009 மார்ச் 12ம் நாள் அனுப்பி வைத்துள்ள தகவல் குறிப்பிலேயே இவ்வாறு கூறியுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவ்ல வெளியிட்டுள்ளது.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

2009 மார்ச் 10ம் நாள் பாதுகாப்பு வலயத்தில் பலத்த பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐ.நா அறிக்கை கூறுவதாகவும், இதில் 124 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 254 பேர் காயமுற்றதாகவும் ஐ.நா பிரதிநிதி தமக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து 2009 மார்ச் 12ம் நாள் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைச் சந்தித்து, பொதுமக்கள் தங்கியுள்ள பாதுகாப்வுபு வலயம் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று பலமுறை வலியுறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் பீரங்கி நிலைகள் இருந்தாலும் கூட பீரங்கித் தாக்குதலை நடத்த வேண்டாம் என்றும் கோத்தாபய ராஜபக்சவிடம் கேட்டுக் கொண்டதாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு கோத்தாபய ராஜபக்ச, சீரற்ற காலநிலையால் இரண்டு நாட்களாக ஜெட் விமானங்கள் பறக்கவில்லையே என்று தொடர்புல்லாமல், ஏளனமாகப் பதிலளித்ததுடன் பொதுமக்கள் கொல்லப்பட்டனரா என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியதாகவும் விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.

இதையடுத்து, பாதுகாப்பு வலயத்தில் நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதலில் தான் பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு வலயம் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று உள்ளூர் தளபதிகளுக்கு உத்தரவிடுமாறும் கூறிவிட்டு பிளேக் திரும்பியதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது.

No comments:

Post a Comment