Friday, September 23, 2011

கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பானது என்றால் விபத்து ஒத்திகை ஏன் நடத்தப்பட்டது? சீமான்


கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்றால் அங்கு எதற்காக விபத்து ஒத்திகை நடத்தப்பட்டது என்று நாம் தமிழர் கட்சித் தலவைர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தங்களுடைய வாழ்விற்கும் எதிர்காலத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறி கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூடிட வேண்டும் என்று இடிந்தகரையில் அப்பகுதி மக்கள் கடந்த 11 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டம் தமிழக முதல்வர் அளித்த உறுதிமொழியினால் நிறுத்தப்பட்டிருப்பது வர வேற்கத்தக்கது.


கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் வாழும் மக்களின் அச்சத்தை போக்கும் வரை, அந்த அணுமின் நிலையத்தை இயக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் விடுத்துள்ள கோரிக்கை நியாயமானது. அதனை நாம் தமிழர் கட்சி வரவேற்கிறது.

கூடங்குளம் மக்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து அச்சம் கொண்டுள்ள நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்று கல்பாக்கத்தில் இயங்கி வரும் இந்திரா காந்தி அணுசக்தி மையத்தின் இயக்குனர் எஸ்.சி.சேட்டல் கூறியுள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்றால், அங்கு விபத்து ஒத்திகை நடத்தப்பட்டது ஏன்?

கூடங்குளம் அணுஉலையில் விபத்து ஏற்பட்டால் அபாய சங்கு ஒலிக்கும், உடனடியாக மக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று கதவுகளையும், ஜன்னல்களையும் அடைத்துக் கொண்டு, ஈரத்துணியால் முகத்தை மூடிக் கொண்டு உள்ளேயே இருக்க வேண்டும் என்றும், குழந்தைகளுக்கும் அப்படி கட்டிவிட வேண்டும் என்றும், விபத்து பெரியதாக இருந்தால் கூடங்குளத்தில் இருந்து 5 கி.மீ.

தூரத்திற்கு அப்பால் வேகமாக மக்கள் இடம் பெயர வேண்டும் என்று கூறி அங்கு விபத்து ஒத்திகை நடத்தப்பட்டது ஏன்? இந்த ஒத்திகையின் காரணமாகத்தானே கூடங்குளம் அணுஉலை என்பது இத்தனை ஆபத்து நிறைந்ததா என்கிற வினாவும் அச்சமும் அங்கும் வாழும் மக்களுக்கு ஏற்பட்டது?

அதன் விளைவுதானே இத்தனை நாட்களும் லட்சக்கணக்கான மக்கள் இடிந்தகரையில் கூடி நடத்திய மாபெரும் போராட்டம்?

கூடங்குளம் பகுதியில் மட்டுமல்ல, கல்பாக்கம் அணுமின் நிலையப் பகுதியில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மாவட்ட நிர்வாகங்களின் ஒத்துழைப்புடன் விபத்து ஒத்திகை நடைபெற்றுக் கொண்டு தானே இருக்கிறது?

கல்பாக்கத்தில் வாழும் மக்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள உடல் பாதிப்பு பற்றியெல்லாம் வெளியான விவரங்களுக்கு இந்திரா காந்தி அணுமின்நிலைய நிர்வாகம் திருப்தியளிக்கக் கூடிய பதிலை ஒரு போதும் தந்ததில்லை.

எனவே, அணு உலைகள் பாதுகாப்பானவை தான் என்பதை ஐயத்திற்கிடமின்றி இந்திய அணுசக்தி ஆணையம் நிரூபிக்க வேண்டும்.

இல்லையெனில் அணு உலைகள் அனைத்தையும் மூடிட வேண்டும் என்கிற மக்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவி்ததுள்ளார்.

No comments:

Post a Comment