Wednesday, September 14, 2011

தயாநிதி மாறனிடம் விரைவில் சிபிஐ விசாரணை!



மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் குழுமத்துக்கு ஏர்செல் பங்குகள் விற்கப்பட்டது தொடர்பாக அந்தக் குழுமத்தின் உயரதிகாரி சிபிஐ அதிகாரிகள் முன்பு திங்கள்கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.


ஏர்செல் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகள் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் குழுமத்துக்கு நிர்பந்தத்தின் பேரில் விற்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக ஏர்செல் நிறுவனத்துக்கு உரிமம் வழங்குவது வேண்டுமென்றே தாமதம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக மேக்சிஸ் குழுமத்தைச் சேர்ந்த 'அஸ்ட்ரோ' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரால்ஃப் மார்ஷலிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை நடத்தினர்.

ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது, அதற்குக் கைமாறாக மாறன் குடும்பத்தினருக்குச் சொந்தமான சன் டி.வி.யில் முதலீடு செய்தது உள்ளிட்டவை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மார்ஷல் விளக்கமளித்தாகத் தெரிகிறது.

தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்துக்கு 'அனுமதிக் கடிதம்' வழங்குவது வேண்டுமென்றே தாமதம் செய்யப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்த விசாரணை நிலை அறிக்கையில் சிபிஐ குறிப்பிட்டிருந்தது.

மேக்சிஸ் குழுமத்துக்கு ஏர்செல் நிறுவன பங்குகள் விற்கப்பட்ட பிறகு, அந்த குழுமத்தைச் சேர்ந்த அஸ்ட்ரோ நிறுவனம் சன் டி.வி.யில் முதலீடு செய்ததாகவும் சிபிஐ கூறியிருந்தது.

அமைச்சரின் உத்தரவின் பேரிலேயே ஏர்செல் நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் சிவசங்கரன் சமர்ப்பித்த ஆவணங்களின் மீது முடிவெடுப்பது தாமதிக்கப்பட்டதாக தயாநிதி மாறனின் உதவியாளர்கள் சிபிஐயிடம் தெரிவித்திருப்பதாகவும் சிபிஐ வட்டாரங்கள் கூறியுள்ளன.

2005-06ல் தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது ரால்ஃப் மார்ஷல் பலமுறை அவரைச் சந்தித்துப் பேசியதாகவும் தெரியவந்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தம்மிடம் இருந்த பங்குகளை மேக்சிஸ் குழுமத்துக்கு விற்க வேண்டும் என்று நிர்பந்திப்பதற்காகவே, தொலைத் தொடர்பு உரிமங்கள் கோரி தாம் சமர்ப்பித்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக சிவசங்கரன் குற்றம்சாட்டியிருந்தது நினைவிருக்கலாம்.

மேக்சிஸ் குழுமத்துக்கு பங்குகள் விற்கப்பட்டபிறகு ஏர்செல் நிறுவனத்துக்குச் சொந்தமான டிஷ்நெட் வயர்லெஸ் நிறுவனத்துக்கு 14 தொலைத் தொடர்பு உரிமங்கள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சன் குழுமம் சார்பில் மேக்ஸிஸ் நிறுவனத்தில் பெரும் முதலீடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மேக்ஸிஸ் மூலம் ஏர்செல்லை சன் குழுமம் கட்டுப்படுத்தியதாகவும் புகார்கள் உள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் தயாநிதி மாறன் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

No comments:

Post a Comment