Monday, September 26, 2011

மீள்குடியேற்றம் என்கின்ற போர்வையில் மக்கள் வீதியில்; முகாம்கள் விரிவாக்கம்; ஜனாதிபதியின் ஐ.நா. உரைக்கு சிவசக்தி ஆனந்தன் பதிலடி

மீள்குடியேற்றம் என்ற போர்வையில் மக்கள் நடுத்தெருவில் இறக்கிவிடப்பட்டுள் ளனர்; இராணுவ முகாம்கள் துரித கதியில் விஸ்தரிக்கப்படுகின்றன; தமிழர் தாயகப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றம் அரங்கேற்றப்பட்டு வருகின்றது. இதுதான் வடக்கு மாகாணத்தின் இன்றைய உண்மையான நிலைமைகள் என்பதை சர்வதேச சமூகத்திற்குத் தெளிவாக எடுத்துக்காட்ட விரும்பு கின்றோம். இவ்வாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நேற்று அறிவித்துள்ளது.


நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 66ஆவது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் இன்றைய நிலைமை கள் தொடர்பாக சர்வதேச சமூகத்துக்குத் தெளிவுபடுத்தினார்.

ஜனாதிபதியின் உரையில் குறிப்பாக வடமாகாணத்தில் பயங்கரவாதிகள் கடந்த 30 வருட காலமாக அழித்த உட்கட்டமைப்பு வசதிகளைப் பாதுகாப்புப் படையினர் நிகழ்காலத் தில் மேம்படுத்தி வருகின்றனர். ஆயுதம் தாங்கிய இராணுவம் வடக்கில் அதிகளவில் ஈடு படுத்தப்படவில்லை. அங்கு குறைந்தளவிலான படையினரே உள்ளனர். இடம்பெயர்ந்த மக் களுள் 95 சதவீதமானோர் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்’’ போன்ற விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்டிருந்தன.

இந்த விடயங்கள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:
இடம்பெயர்ந்த மக்களுள் 95 சதவீதமானோர் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்று சர்வதேச சமூகத்திடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். மீள்குடியேற்றம் என்பதன் அர்த்தம் இன்னும் இலங்கை அரசுக்குப் புரியவில்லை என் பதையே ஜனாதிபதியின் கூற்று எடுத்துக்காட்டுகின்றது என் பதை எம்மால் உணரக்கூடியதாக உள்ளது.

மீள்குடியேற்றம் என்ற போர்வையில் மக்கள் நடுத்தெரு வில் இறக்கிவிடப்பட்டுள்ள னர். அவர்கள் மீளக் குடியமர்த் தப்பட்டுள்ள இடங்களில் அடிப்படை வசதிகள் கூட அரசால் செய்துகொடுக்கப்படவில்லை. மக்கள் சொல்லொணாத் துன்பங்களைஅனுபவிக்கின்றனர்.வீடுகள் இல்லாமல் மக்கள் கொட்டில்கள் அமைத்தே வாழ் கின்றனர். மலசலகூட வசதி கூட இல்லை. காட்டுப் பிரதே சங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளதால் பாம்புக்கடி உட்படப் பல்வேறு அவலங்களை இன்று மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவிக்கும் நிலை யில் அது தொடர்பில் அரசு கவனம் செலுத்தாமல் தமிழர் தாயக பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றங்களைத் திட்டமிட்டு அரங்கேற்றி வருகின்றது.வடக்கில் குறைந்தளவு படையினரே நிலைகொண்டுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது. அப்படியானால் எதற்கு இராணுவ முகாம்கள் துரிதகதியில் விஸ்தரிக்கப்படுகின்றன? ஏன் பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன?  என்ற கேள்விகளைக் கேட்க நாம் விரும்புகின்றோம்.

உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துகின்றோம் என்ற போர்வையில் இராணுவ முகாம்களே வடக்கில் விஸ்தரிக்கப்படுகின்றன. இவைதான் இன்று வடக்கின் உண்மையான நிலைமைகள் என்பதைத் தெளிவாக வெளியுலகுக்குக் கூறிக் கொள்ள விரும்புகின்றோம் என்றார் சிவசக்தி ஆனந்தன் எம்.பி.

No comments:

Post a Comment