Saturday, September 24, 2011

சர்வதேச விசாரணை வேண்டும் என்று தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை!


இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியாவில் உள்ள தமிழ் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை அடையாறில் ஐ.நா.சபையின் ஓர் அங்கமான யுனிசெப் அமைப்பில் நேற்று முன்தினம் காலை பல்வேறு தமிழ் அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் ஐ.நா. பிரதிநிதிகளிடம் மனு ஒன்றைக் கையளித்துள்ளனர்.

அந்த மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:

இலங்கையில் தொடர்ந்து முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களையும், அங்குள்ள சித்திரவதைச் சிறைகளில் உள்ள இளைஞர்களையும் விடுவித்து அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும்.
அவர்கள் அங்கு கௌரவமான வாழ்க்கையை ஆரம்பிக்க உரிய நடவடிக்கையை ஐ.நா. எடுக்க வேண்டும். தமிழர் பகுதி களில் உள்ள ராணுவத்தைத் திரும்பப் பெறவேண்டும்.

தமிழர் பகுதிகளில் குடியமர்த்தப்பட்ட சிங்களவர்களை வெளியேற்ற வேண்டும். அங்கு நடந்த யுத்தக் குற்றங்களை அந்த நாட்டு அரசே விசாரித்தால் நீதி கிடைக்காது.

சர்வதேச நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்த வேண்டும். சனல் 4 மற்றும் சுதந்திரமான ஊடகங்கள் வெளியிட்ட ஆதாரங்களை இந்த விசாரணைக்கு உரிய ஆதாரங்களாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பலத்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இலங்கைத் தலைவரை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும். தமிழர் பகுதிகளில் வாழும் மக்களின் கருத்துக்களை அறிவதற்கு அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையில் இந்தப் பணிகள் நடைபெற வேண்டும்.

மேற்கண்ட இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள தமிழர்களை இலங்கைக்கு வெளியேற்றாதபடி, ஐ.நா.சபை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment