Tuesday, September 13, 2011

நவநீதம்பிள்ளையுடன் இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க கடும் மோதல்!

தடுப்புச் சட்டங்களை நீக்குவது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதனைப் போன்றே நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஏனைய பாதுகாப்பு சார் சட்டக்கெடுபிடிகளும் தளர்த்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இன்று ஜெனீவாவில் ஆரம்பமான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 18 ஆவது கூட்டத்தொடரில் ஆரம்ப உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 18 ஆவது கூட்டத்தொடரில் 47 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
அங்கு உரையாற்றிய நவநீம்பிள்ளை மேலும் தெரிவிக்கையில்,
மனித உரிமைகள் அமைப்பு மற்றும் சுயாதீன அமைப்புக்களின் செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மதிப்பதில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாட்டு மக்கள் மூன்று தசாப்தங்களாக பயங்கரவாத செயல்களின் கொடூரமான விளைவுகளுக்கும் மாத்திரம் முகங்கொடுக்கவில்லை. வெற்றி பெற்ற அரசாங்கங்கள் மனித உரிமைகள் மற்றும் அதனூடான சட்டங்களைப் பொருட்படுத்தாமையும் அவ்வாறான சம்பவங்களுக்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான தூதுக்குழுவினர் விஜயம் செய்துள்ள, இக்கூட்டத்தின் ஆரம்ப நாளான இன்று இலங்கை சார்பில் கலந்துகொண்ட அமைச்சர்களுள் மகிந்த சமரசிங்க, நிமால் சிறிபால டி சில்வா, அனுரபிரியதர்ஷன யாப்பா ஆகியோர் கலந்துகொண்டனர்.

நவநீதம்பிள்ளையின் நடவடிக்கைகள் குறித்து மஹிந்த சமரசிங்க கேள்வி?
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்  பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் செயற்பாடுகள் குறித்து இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
நிபுணர் குழு அறிக்கை மனித உரிமைகள் பேரவையிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக மூன்றாம் தரப்பு நாடொன்றின் மூலமே தமக்கு அறியக் கிடைத்தது. அதுவும் கடந்த 9ம் திகதியே இந்த தகவல் கிடைக்கப் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளுக்கு இடையில் வேறுபாடு காட்டக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகளினால் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மீதான நம்பிக்கை வலுவிழக்கும்.
நவநீதம்பிள்ளை ஐக்கிய நாடுகள் அமைப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளுக்கு புறம்பான வகையில் செயற்பட்டு வருகின்றமை துரதிஸ்டவசமானது என அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம்! நவநீதம்பிள்ளை சாட்டம்
பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை நாடுகள் உருவாக்குகின்றபோது, அவை மனித உரிமைகளைப் பற்றி கவலையே கொள்வதில்லையென்று இலங்கையைச் சுட்டிக்காட்டி ஐநாவின் மனித உரிமைகளுக்கான ஆணையர் நவநீதம்பிள்ளை கருத்து தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் நடைபெறும் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 18 வது அமர்வில் உரையாற்றிய நவநீதம்பிள்ளை, அரசுகளின் இவ்வாறான நடவடிக்கைகளே உரிமைகள் பறிக்கப்படவும் வன்முறைக் கலாசாரம் தலையெடுக்கவும் காரணமாவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இலங்கையை உதாரணத்துக்கு காட்டிய நவிபிள்ளை, அங்கு தொடர்ந்தும் அமுலில் உள்ள பாதுகாப்புடன் தொடர்புடைய அனைத்து வகையான சட்டங்கள் பற்றியும் விரிவான மீளாய்வொன்றை அரசு செய்ய வேண்டுமென்று கடுமையாக கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இலங்கை மூன்று தசாப்தங்களாக பயங்கரவாதத்தின் கொடுமையான பாதிப்புகளுக்கு முகங் கொடுக்க வேண்டியேற்பட்டது என்றாலும்இ அந்நாட்டில் அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்களின் பதில் நடவடிக்கைகள் சுயாதீனமான நிறுவனங்களின் பணிகளையும் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியையும் மழுங்கடிங்கும் விதத்திலேயே அமைந்ததாகக் நவநீதம்பிள்ளை கூறினார்.
இதன்போது, சில அவசரகால ஒழுங்கு நடவடிக்கைகளை நீக்குவதற்கு ஜனாதிபதி எடுத்த முடிவை சுட்டிக்காட்டிய ஐநாவின் மனித உரிமைகள் ஆணையர், இலங்கையில் நடைமுறையிலுள்ள எல்லாவகையான பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் மற்றும் தடுப்புக் காவல்கள் பற்றி விரிவான மீளாய்வொன்றை அரசு செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

இலங்கையின் அமைச்சர் மகிந்த சமரசிங்க விளக்கம்
இதனையிடையே, ஐநாவின் மனித உரிமைகள் ஆணையரின் கருத்துக்கு பதில் கூறிய இலங்கையின் முன்னாள் மனித உரிமைகள் அமைச்சரும் ஐநாவின் மனித உரிமைகள் கவுன்சில் அமர்வில் கலந்துகொண்ட இலங்கைக் குழுவின் தலைவருமான மகிந்த சமரசிங்க, இலங்கையில் ஏற்படுகின்ற கள நிலைமை மாற்றங்களுக்கேற்ப தமது நடவடிக்கைளில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இப்போது முன்னேற்றமடைந்துள்ள சூழல் அவசரகால ஒழுங்குவிதிகளை முற்றாக நீக்கும் நிலையை ஏற்படுத்தியதாகவும் ஏதேனும் அவசரகால நிலைமை ஏற்பட்டால் அவற்றைக் கையாள்வதற்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் மற்றும் TRO போன்ற அமைப்புகளை தடை செய்யவும் கைதிகளையும் தடுப்புக் காவலில் இருப்பவர்களையும் தொடர்ந்தும் தடுத்துவைப்பதற்காகவும் சரணடைந்தவர்களின் புனர்வாழ்வுக்காகவும் இவ்வாறான சட்ட ஏற்பாடுகள் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, ஐநா தலைமைச் செயலர் பான் கீ முனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான நிபுணர் குழு அறிக்கை, இப்போது மனித உரிமைகள் கவுன்சிலுக்கு மாற்றப்படுவதாக தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாமல், பகலுணவு போசனமொன்றின் போதே தெரியவந்ததாக கூறிய மகிந்த சமரசிங்க, அதனை ஐநாவின் இரட்டை நிலைப்பாடு என்று வர்ணித்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment