Tuesday, February 21, 2012

இந்தியா குறித்த அச்சுறுத்த​லும், ஈழத் தமிழர்களது விடுதலைப் போராட்டமும்​

   நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு. ருத்திரகுமாரன் அவர்கள் குறித்த சர்ச்சை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் அடிக்கடி உச்சம் பெறுவது வழக்கம். மாவீரர் தினத்தை அண்டிய காலத்தில் ருத்திரகுமாரனது நடவடிக்கைகள் குறித்த வாதம் ஊடகவியலாளாகள் மத்தியில் காரசாரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.

ருத்திரகுமாரன் எந்தப் பின்புலத்தில் இருந்துகொண்டு, இத்தகைய தமிழ்த் தேசிய சிதைவு முயற்சியில் ஈடுபடுகின்றார் என்ற தேடலில் ஊடகவியலாளர்கள் பக்கம் பிரிந்து நின்று வாதிட்டுக்கொண்டதில் வருத்தம் இருந்தாலும், தமிழீழ விடுதலைக்குத் தேவையான ஆரோக்கியமான பட்டி மன்றமாக அது அமைந்திருந்தது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக ருத்திரகுமாரனை நகர்த்துவது யார்? என்ற வாதம் சூடு பிடித்தது. ருத்திரகுமாரன் கே.பி. ஊடாக சிங்கள அரசால் வழிநடாத்தப்படுகின்றார் என ஒரு சாராரும், இல்லை, அவர் இந்தியாவால் வழிநடாத்தப்படுகின்றார் என ஒரு சாராரும், இல்லை, அவர் அமெரிக்காவால் வழி நடாத்தப்படுகின்றார் என்று மூன்றாவது சாராரும் தங்கள் தங்கள் நியாயங்களை முன்வைத்து வாதிட்டார்கள்.

ருத்திரகுமாரன் கே.பி.யால் உருவாக்கப்பட்டு சிங்கள தேசத்தால் வழிநடாத்தப்படுகின்றார் என்ற கருத்தைப் பாதி அளவுக்கே ஏற்றுக்கொள்ள முடிந்தது. சிங்கள தேசத்தின் நேரடி வழிநடாத்தல் அதன் நோக்கத்தைச் சிதைத்துவிடும் என்பதை சிங்கள ஆட்சியாளர்கள் நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்கள். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கவர்ச்சிகரமான சொல்லாடலின் ஈர்ப்பு சக்தியைப் பயன்படுத்தி, இப்போதும் சில தேசிய செயற்பாட்டாளர்களைத் தன்னுடன் இணைத்து வைத்திருக்கும் ருத்திரகுமாரனுடன் நேரடித் தொடர்பைப் பேணுவது அவரை அம்பலப்படுத்துவதாக அமைந்துவிடும் என்பதால், இதில் மூன்றாவது சக்தி ஒன்றின் கைகள் இருக்கும் என்பதே பலரது கணிப்பாகவும் இருந்தது.

ருத்திரகுமாரனது பலமும், பலவீனமும் அமெரிக்காவுக்குப் புரியாத விடயமல்ல. அதனாலேயே, அமெரிக்காவிலேயே அடைபட்டுக்கிடக்கும் ருத்திரகுமாரனை அமெரிக்க ஆட்சியாளர்களோ, அதன் புலனாய்வுத் துறையோ கண்டுகொள்வதில்லை. உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளாருக்குச் சமமான கௌரவத்தையோ, வாய்ப்பினையோ அமெரிக்க அரசு ருத்திரகுமாரனுக்கு வழங்கவில்லை. தென்னாபிரிக்காகூட ருத்திரகுமாரனைக் கண்டுகொள்ளவில்லை. கருணாநிதி பாணியில், ருத்திரகுமாரனால் கடிதம் எழுத மட்டுமே முடியும், அவரைப் புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை பி.பி.சி. தமிழோசைகூட ஒரு தடவை தெரிவித்திருந்தது. அமெரிக்கா பயன்படுத்தும் அளவுக்கு அவர் ஒரு முக்கியமான மனிதர் இல்லை என்பதால், அமெரிக்கா அவரை வழிநடாத்துகின்றது என்ற கருத்து அங்கே அடிபட்டுப் போனது.

சிங்கள தேசத்தின் விருப்பங்களைத் தனது நோக்கங்களுடன் பொருத்திப்பார்த்துச் செயற்படுவதை இந்தியா தனது யுக்தியாகத் தொடர்கின்றது. கருணாவை விடுதலைப் புலிகளிடமிருந்து பிரித்து எடுப்பதில் சிங்களப் புலனாய்வாளாகள் திறமையாகச் செயல்பட்டிருந்தாலும், கருணாவைப் பாதுகாத்து, அதன்மூலம் தமிழீழ விடுதலைப் போர்க் களத்தை முள்ளிவாய்க்கால்வரை நகர்த்தி அழிக்கும் தந்திரத்தை வகுத்துக் கொடுத்தது இந்தியா என்பது சிதம்பர இரகசியமல்ல.

முள்ளிவாய்க்காலின் பின்னரும் சிறிலங்கா போலவே, இந்தியாவும் விடுதலைப் புலிகளது புலம்பெயர் கட்டமைப்புக்களைச் சிதைப்பதில் அதிக கவனத்தை எடுத்துக்கொண்டது. மேலோட்டமாகப் பார்த்தால், இது நம்ப முடியாத, நகைச்சுவையான தகவலாகக் கூடத் தோன்றும். இந்தியா புலம்பெயர் தமிழர்கள் குறித்து அச்சம் கொள்கின்றதா? என்ற கேள்வியும் எளக்கூடும். அதை அச்சம் என்று சொல்வதிலும் பார்க்க, தமது சுய பாதுகாப்புக் குறித்த அக்கறை என்றும் சொல்லாம்.

இது குறித்து, மாமனிதர் சிவராம் அவர்கள் ஒரு தடவை எழுதியுள்ளார். அவரது நீண்ட கட்டுரை ஒன்றில், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட நேர்ந்தால், அதன் விழைவுகள் எப்படி இருக்கும் என்ற கோணத்தில் ஆராயப்பட்டிருந்தது.

'இலட்சிய உறுதியும், விடுதலை வேட்கையும், அர்ப்பணிப்பும் கொண்ட விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டால், அவர்கள் பெற்றுள்ள ஆயுதப் பயிற்சியும், வெடிபொருள் ஆற்றலும் திசை மாறிப் போகலாம். அவர்களது ஆயுதப் போராட்ட ஆற்றலை சில தீவிரவாதக் குழுக்கள் தமக்காகப் பயன்படுத்த முயற்சிக்கலாம். அந்தக் குழுக்கள் ஊடாக விடுதலைப் புலிகள் தமது பழிவாங்கும் எண்ணத்திற்குப் பயன்படுத்த முயற்சிக்கலாம்' என்ற கோணத்தில் அவர் தனது ஆய்வைத் தொடர்ந்திருந்தார். அதாவது, குளவிக் கூட்டில் கல் எறிந்த நிலமை உருவாகும் என எச்சரிந்திருந்தார். அவரது உள்ளுணர்வு வழங்கிய எச்சரிக்கையை இந்திய - சிங்கள தேசங்கள் பலமாக உள்வாங்கியும் உள்ளன.

இறுதிப் போர்க் களத்திலிருந்து பல ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிப் போராளிகள் சிங்கள - இந்தியக் கூட்டு முயற்சியை முறியடிக்குத் தப்பிச் சென்றுள்ளார்கள். களத்திலிருந்து வெளியேறிய விடுதலைப் புலிகள் எப்படியும், புலத்தைச் சென்றடையவும், அங்காங்கு மீளிணைவு கொள்ளவும் உள்ள வாய்ப்பினை இந்த இரு நாடுகளாலும் நிராகரிக்க முடியவில்லை. இதனால், சிங்கள ஆட்சியாளர்களது தேவையையும், தனது தேவையையும் பொருத்திப் பார்த்து இந்தியா ருத்திரகுமாரனை வழிநடாத்துவதற்கான சாத்தியமே அதிகம் என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.

விடுதலைப் புலிகளுக்கு 'செக்' வைப்பதற்கு எப்படி வரதராஜப்பெருமாள் வட-கிழக்கு மாகாணசபையின் பிரதமராக ஆக்கப்பட்டாரோ, அதே நோக்கத்தோடும், அதே திட்டத்தோடும் இந்தியா ருத்திரகுமாரன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு 'செக்' வைக்கப் பெரும் முயற்சி மேற்கொள்கின்றது என்ற கருத்தையே அந்த வாதத்தின் முடிவில் ஊடகவியலாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

அதற்காக, அங்கே ஒரு ஊடகவியலாளர் முன்வைத்த கருத்து கொஞ்சம் சுவாரசியமானது. ருத்திரகுமாரன் திடீரென 'தமிழீழ தேசிய அட்டை' ஒன்றைத் தயாரித்து, அதனை வெளியீடும் செய்தார். அதன்போது, அவரே கூறிய ஒரு தகவல், அவரை அம்பலப்படுத்துவதற்குப் போதுமானதாக இருந்தது. இந்தியாவிலிருந்து தன்னைச் சந்திக்க வந்த மூவர், தன்னிடம் கடவுச் சீட்டுக்களை (பாஸ்போர்ட்) தயாரித்து வழங்கும் ஆலோசனையை முன் வைத்ததாகவும், அது சாத்தியமாகாத நிலையில், அடையாள அட்டை விநியோகிக்கும் முடிவைத் தான் எடுத்ததாகவும் தெரிவித்திருந்தார்.

தன்னிலை உணராமல் ருத்திரகுமாரன் வெளியிட்ட அந்தச் செய்தி புலம்பெயர் தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. அதாவது, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சார்பாக அடையாள அட்டை ஒன்றை விநியோகிக்கும் திட்டமும் இந்தியாவிலிருந்தே ருத்திரகுமாரனுக்கு வந்து சேர்ந்துள்ளது. அதாவது, பிரபாகரன் என்ற மந்திர சக்திக்குள் கட்டுண்டுகிடக்கும் புலம்பெயர் தமிழர்களை, ருத்திரகுமாரன் என்ற தந்திர சக்திக்குள் நகர்த்தும் திட்டத்தின் மூலம் இந்தியா என்பதைப் புரிந்து கொள்ள ருத்திரகுமாரனது முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான நகர்வுகளுடன் நாம் பயணிக்க வேண்டும்.

பயணம் தொடர்கின்றது...

- சிவகுரு பாலச்சந்திரன்
மக்கள் பிரதிநிதி

No comments:

Post a Comment