Wednesday, March 07, 2012

கூட்டமைப்பின் காரணங்கள் வேடிக்கையானவை – சிவாஜிலிங்கம் அறிக்கை!

ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளாமல் போனதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் கூறப்பட்ட காரணங்களும் கூறப்படுகின்ற விளக்கங்களும் வேடிக்கையானவை’ என்று த.தே.கூ.வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
,

‘ஜனீவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதில்லை என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட அறிவிப்பை கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் கூடிய அதன் நாடாளுமன்றக்குழு அங்கீகரித்திருக்கின்றது.

தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும் அபிலாசைகளுக்கும் எதிராகச் செயற்பட கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு துணிந்து நிற்கின்றது என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், ஜெனீவாவுக்கு கூட்டமைப்பு போகப்போவதில்லை என்று விடுத்த அறிக்கை தமிழ் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த சூழ்நிலையில், நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்தை அவர் மீண்டும் கூட்ட முன்வந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த கூட்டத்தில் நல்லதோர் முடிவு எடுக்கப்படும் என்றே தமிழ் மக்கள் அனைவரும் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால், சம்பந்தன் விடுத்திருந்த அறிவிப்பை இந்த நாடாளுமன்றக் கூட்டமும் அங்கீகரித்து ஆமோதித்திருக்கிறது.

தமிழ் மக்களின் உணர்வுகளை விட சில வெளிச் சக்திகளின் செல்வாக்கு நாடாளுமன்றக் குழுவில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருப்பதை இதன் மூலம் எவரும் தெரிந்துகொள்ள முடியும்.

ஜெனீவாவுக்குப் போகாமல் இருப்பதற்கு கூட்டமைப்பினால் கூறப்பட்ட காரணங்களும், கூறப்படுகின்ற விளக்கங்களும் வேடிக்கையானவை. ஓட்டுமொத்த தமிழ் மக்களும் அரசியல் முட்டாள்கள் என்ற ரீதியில் விசித்திரமான காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு, எவரின் நலன்களுக்காகச் செயற்படுகின்றது என்ற கேள்வியை நாம் இச்சந்தர்ப்பத்தில் எழுப்ப நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். தமிழ் இனத்தின் துன்ப, துயரங்களை உலக அரங்கில் எடுத்துச் சொல்வதற்கு கிடைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பத்தினை வேண்டும் என்றே தவறவிட்டவர்கள் யாரைக் காப்பாற்றப் பார்க்கின்றார்கள்?

ஒற்றுமையின் பெயரால் சுயநல – சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுத்து நிற்கும் கூட்டமைப்பின் சில பெருந்தலைவர்களுக்கு கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் துணை போயிருப்பது மிகவும் வேதனைக்குரியது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எதிர்காலம் தொடர்பில் விரைந்து முடிவெடுக்க வேண்டிய தேவை இப்பொழுது எங்கள் அனைவரின் முன்னாலும் உள்ளது. எம் இனத்தின் நலனின் பெயரால் அரங்கேறிக்கொண்டிருக்கும் துரோக நாடகங்களை நாம் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது’.

No comments:

Post a Comment