Wednesday, April 11, 2012

இந்தியா ஆதரவளிக்க மறுத்ததன் பின்னணியில் ஏதோ ஒன்று நடந்திருக்க வேண்டும் – சந்திரிகா

chandrikaஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவளிக்க இந்தியா மறுத்ததன் பின்னணியில், இருநாடுகளுக்கும் இடையில் ஏதாவது தீவிரமாக நடந்திருக்க வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் சிஎன்என் – ஐபிஎன் தொலைக்காட்சியின் மூத்த ஆசிரியர் சுகாசினி ஹைதருக்கு வழங்கிய தனிப்பட்ட செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தச் செவ்வியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது-
சுகாசினி- ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது பற்றிய உங்களின் கருத்து…
சந்திரிகா- இது சிறிலங்காவுக்கு நல்லதல்ல. தனிப்பட்ட ரீதியாக, இந்த நிலை ஏற்பட்டது எனக்கு மிகவும் வருத்தம். ஆனால், இந்த நிலை ஏற்பட ஏன் விட்டிருக்க வேண்டும் என்பது குழப்பமாகவுள்ளது.
ஏனென்றால், 2009இல், கடைசியாக தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது இந்தியா எங்களுக்கு முழுமையாக ஆதரவளித்தது. எங்களுக்காக ஆதரவு தேடியது. அதனால் நாங்கள் வெற்றி பெற்றோம். தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
எங்களுக்கு எதிராக வாக்களித்ததற்கு, இந்தியாவுக்கு இடையில் ஏதாவது நடந்திருக்க வேண்டும். இந்தியா இந்த முடிவை சாதாரணமாக எடுத்ததாக நான் கருதவில்லை.
சுகாசினி– மனித உரிமைமீறல்கள் தொடர்பாக உலகத்தை திருப்தி கொள்ள வைக்கும் அளவுக்கு சிறிலங்கா அரசாங்கம் போதுமானளவில் செய்யவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள், உண்மையில் அங்கே களநிலைமைகள் என்ன?
சந்திரிகா– நல்லிணக்கத்துக்கு, பௌதிக மீள்கட்டுமானத்துக்கு இன்னும் அதிகமாகவே செய்ய முடியும். போர் முடிவுக்கு வந்து 3 ஆண்டுகளாகி விட்டன.
சுகாசினி- இந்தியாவின் வாக்கு இந்திய- சிறிலங்கா உறவுகளை வெட்டிப் போட்டுள்ளதாக அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். இந்த விடயத்தில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
சந்திரிகா- இந்தியா கடந்த காலத்தில் எந்தவொரு வழியிலும் சிறிலங்காவின் கொள்கைகள், திட்டங்களில் அல்லது அரசாங்கத்தில் தடைகளை ஏற்படுத்தியதில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு அது தெரியும்.
தமிழ்மக்களின் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண இந்தியா கேட்கிறது என்பது பகிரங்கமான விடயம். போரின் முடிவு தானாகவே அமைதியைக் கொண்டு வந்து விடாது என்ற கருத்தை நான் எப்போதும் கொண்டுள்ளேன்.
தீவிரவாதத்தில் இருந்து விடுபட அதுதான் முதலாவது அடி என்பது வெளிப்படை. ஆனால் அதன் பின்னர் நிறையவே மீளக்கட்டமைக்க வேண்டும்.
சுகாசினி- விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், நூறாயிரக்கணக்கான தமிழர்கள், பெரும்பாலும் சிறிலங்கா இராணுவத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் சித்திரவதைகள் பற்றி கூறுகிறார்கள். இது வடக்கு,கிழக்கு மக்கள் நல்லிணக்க நகர்வுகளை நோக்கில் செல்வது சாத்தியம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
சந்திரிகா- நிச்சயமாக, அரசாங்கம் தலைமை தாங்கினால், அது சாத்தியம். தென்னாபிரிக்காவில் என்ன நடந்தது என்று பாருங்கள்.
சுகாசினி- ,இந்தியாவின் பங்கு எப்படியிருக்க வேண்டும்?
சந்திரிகா- இந்தியாவின் பங்கு எமக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும். எமது அரசாங்கத்தை இந்த வழியில் முன்நோக்கிச் செல்வதற்கு ஊக்குவிக்கின்ற வகையில் இருக்க வேண்டும். இந்தியா அதை நன்றாகவே செய்கிறது. ஆனால், சொல்வதை நன்றாக கேட்க வேண்டும்.

No comments:

Post a Comment