Wednesday, May 23, 2012

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 3 ஆம் ஆண்டு நினைவு கூரல் லண்டன் ரவல்கர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கெடுப்பு.

லண்டன் ரவல்கர் சதுக்கத்தில் நேற்று சனிக்கிழமை மாலை  அளவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 3 ஆம் ஆண்டு நினைவு கூரல் நிகழ்வில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் பிரித்தானியாவின் பல பாகங்களிலும் இருந்து கலந்து கொண்டனர்.
அதேவளை, பிரித்தானியாவின் சகல அரசியல் கட்சிகளையும் சேர்ந்த ஏராளமான பாராளுமன்ற உறுப்பினர்களும் மனித உரிமை செயற்ப்பாட்டாளர்களும் நிகழ்வில் கலந்து கொண்டதுடன், இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான மனித உரிமைகள் மீறல்களுக்கு இனியும் இடமளியாமல் முற்றுப்புள்ளி இட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி குரல் கொடுத்திருக்கிறார்கள்.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர் குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச ரீதியான சுயாதீன விசாரணை ஒன்றை துரிதமாக ஆரம்பித்தல், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துதல், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிரித்தானிய வருகையினை தடுத்து நிறுத்துதல் மற்றும் அடுத்த வருடம் இலங்கையில் நடைபெற இருக்கும் பொதுநலவாய நாடுகளின் மகா நாட்டை பிரிட்டன் பகிஷ்கரித்தல் ஆகிய நான்கு விடயங்களை வலியுறுத்தி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்ப்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 5000 இற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். பிரிட்டிஷ் தொழிட்கட்சி தலைவர் எட் மிலிபான்ட் உட்பட தமிழ்நாட்டில் இருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொது செயலாளர் வை.கோபாலசாமி, தமிழர் தேசிய பாதுகாப்பு இயக்க தலைவர் பழ.நெடுமாறன், நடிகர் சத்யராஜ், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், தமிழக சட்டசபை முன்னாள் உறுப்பினர் ஆர்.மகேந்திரன், பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி மற்றும் மே 17 இயக்க ஒருங்கமைப்பாளர் திருமுருகன்பல பிரமுகர்கள் செய்திகளை இந்த நிகழ்விற்கு அனுப்பியிருந்தனர்;. இத்துடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கமைப்பாளர் சீமானின் உரையும் இந்தியாவில் இருந்து நேரடியாக ஒலிபரப்பு செய்யப்பட்டது.
எட் மிலிபான்ட் தனது செய்தியில், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர் குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வேதேச ரீதியான சுயாதீன விசாரணை ஒன்றை ஆரம்பிப்பது குறித்த தனது கட்சியின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதுடன், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் சிபார்சுகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் ஐ.நா. வுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், 2013 இல் இலங்கையில் நடைபெற இருக்கும் பொதுநலவாய நாடுகளின் மகா நாட்டை பிரிட்டன் பகிஷ்கரிப்பதற்கு நிர்ப்பந்திக்கப்படும் என்று எச்சரித்தார்.
பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர்களுக்கான சர்வ கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவருமான லீ ஸ்காட், தொழில் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாரி கர்டினர், தாராள ஜனநாயக கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சைமன் கியூஸ், கவுன்சிலர் அலன் வேயன்பேர்க், தேசிய ஆசிரியர் சங்க நிறைவேற்று உறுப்பினர் மார்டின் பவல் டேவிஸ், மனித உரிமைகள் நிபுணர் ஓவென் ஒபே, கிங்க்ஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி. அன்று ஹிகின்போட்டொம், லண்டன் மாநகர பிரதி மேயர் விக்டோரியா போர்விக் மற்றும் பல பிரமுகர்களும் முக்கியஸ்தர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களும் தாயகத்திடல் இருந்து வருகை தந்து கலந்து கொண்டு நிகழ்வில் சிறப்புரைகள் ஆற்றினார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் லீ ஸ்காட் மற்றும் பாரி கார்டினர் ஆகியயோர் தமதுரையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர் குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச ரீதியான சுயாதீன விசாரணை கால தாமதம் இன்றி மேற்கொள்ளப் பட வேண்டும் என்றும் அதற்காக தொடர்ந்து பாடுபடப் போவதாகவும் கூறினர். சைமன் கியூஸ் பாராளுமன்ற உறுப்பினர்தனதுரையில், சர்வதேச சமூகம் தமிழ் மக்கள் கீழே விழுவதற்கு செய்து விட்டதாகவும், அவர்களுக்கு நீதியை பெற்று கொடுப்பதற்கான பொறுப்பினை அவர்கள் கொண்டிருப்பதாகவும் கூறினார். மனித உரிமைகள் தொடர்பில் ஆக்கபூர்வமான முன்னேற்றம் எதுவும் நடைபெறாத பட்சத்தில் மகிந்த ராஜபக்ஸ லண்டன் வருவதனையோ அன்றி 2013 இல் பொதுநலவாய நாடுகளின் மகா நாடு பிரிட்டனில் நடைபெறுவதனையோ அனுமதிக்க முடியாது என்று பாரி கர்ட்னேர் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
சுய நிர்ணய உரிமைக்கான தமிழ் மக்களின் போராட்டம் மிகவும் நியாயமானது என்றும் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை இலங்கையின் சமாதானத்திற்கு அவசியமான ஒன்று என்றும் கலாநிதி. அன்று ஹிகின்போட்டொம் தனதுரையில் தெரிவித்தார்.
கன்சர்வேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கிரான்ட் சேப்ஸ் அனுப்பிய செய்தியில், இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதனை பிரித்தானிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைபடுத்தவிட்டால் 2013 இல் இலங்கையில் நடைபெற்ற உள்ள பொதுநலவாய நாடுகளின் மகா நாட்டை பிரிட்டன் புறக்கணிக்க வேண்டி வரும் என்று எச்சரித்தார்.
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை, யூகோசிலாவியாவில் நடை பெற்றது போன்ற சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நிகழ்வு ஒன்று இலங்கை தொடர்பில் நடை பெறுவதற்கு இட்டுச் செல்லும் என்று தாரள ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நம்பிக்கை வெளியிட்டார் லண்டன் நகர மேயர் கென் லிவிங்க்ஸ்டன் தனது செய்தியில், இலங்கையில் நடைபெற்றதை இனப்படுகொலை என்று குறிப்பிட்டதுடன், சர்வதேச விசாரணை ஒன்றுக்கான ஒரு முதல் படியாக, ஐ.நா.மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை குறிப்பிட்டார்.
'சர்வதேச ரீதியான சுயாதீன விசாரணை மிகவும் அவசியமானது' என்று ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஜின் லம்பேர்ட் தனது செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார். தொழில் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கரத் தோமஸ் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் ஹமொண்ட் ஆகியோரும் சர்வதேச ரீதியான சுயாதீன விசாரணை நடைபெறுவதன் அவசியத்தை வலியுறுத்தி தமிழ் மக்களுக்கான தமது ஆதரவு தொடர்ந்;தும் இருக்கும் என்று செய்தி குறிப்பு அனுப்பியிருக்கிறார்கள்.
நினைவு கூரல் மிகவும் உணர்ச்சி பூர்வமாக நடைபெற்ற அதேவேளை, நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் இலங்கை அரசாங்கத்தின் தமிழ் இன படுகொலைகளை சித்திரிக்கும் படங்களை தாங்கியும், பதாகைகள் மற்றும் சுலோக அட்டைகளை ஏந்தியும் தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினர்.

No comments:

Post a Comment