Wednesday, May 30, 2012

தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரி வெலிக்கடை சிறை முன்பு தமிழ் சிங்கள அரசியல் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்


velikkadai-frontஎன்ன குற்றம் என்பதே தெரியாமல் பல்லாண்டுகளாகச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி இன்று பகல் 12மணியளவில் வெலிக்கடை சிறைச்சாலையின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ்.க.பிரேமச்சந்திரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், தமிழ் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த
செல்வராசா கஜேந்திரன், ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னா, நவசமசமாஜக்கட்சியினர் உள்ளிட்ட ஏராளமான அரசியல் பிரமுகர்களும், சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் உறவினர்களும், காணாமல்போன தமது உறவுகளைத் தேடி அலைபவர்களும் நாட்டின் பலபாகங்களிலிருந்தும் வந்து கலந்துகொண்டனர்.
எங்கு சென்றால் தமது உறவினர் மீண்டும் கிடைப்பார் எங்கு சென்றால் எமது பாசத்திற்கும் நேசத்திற்குமுரியவர்கள் விடுதலை பெற்று எம்முடன் இணைவார்கள் என்ற ஏக்கத்தில் வந்திருந்த உறவினர்களில் சிலர், அழுவதற்குக்கூட சக்தியற்றவர்களாக வாழ்க்கையில் வெறுமையை அனுபவிப்பவர்களாக இருந்தனர். அவர்களிடம் நம்பிக்கையைத் தவிர வேறுஎதையும் காணமுடியவில்லை.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று சிங்களத் தலைமைகளும் தமிழ்த் தலைமைகளும் ஒரே குரலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தது நிச்சயம் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கைக்கு மேலும் வலுவூட்டியிருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த ஒற்றுமையும் ஆதரவும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதிலும் தொடரவேண்டும் என்பதே தமிழ் மக்களின் அவா.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
விடுதலை செய்! விடுதலை செய்! அரசியல் கைதிகளை விடுதலை செய்! விசாரணையும் இல்லை விடுதலையும் இல்லை இதுவே ஆசியாவின் அதிசயம்!
போராடுவோம் போராடுவோம் விடுதலையாகும்வரை போராடுவோம்! மதகுருமாருக்கு மன்னிப்பும் இல்லை மகிந்த சிந்தனையில் அதற்கு இடமுமில்லை!
கே.பி., கருணா, அரசமாளிகையில் அப்பாவித் தமிழர் சிறைச்சாலையில் குற்றம் இருந்தால் வழக்கைத் தொடர் இல்லை என்றால் விடுதலை செய்!
அவர்கள் செய்தது அரசியல் அதனால்தானா சிறைவாசம்!
போன்ற முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ். பிரேமச்சந்திரன்,
ஐந்து, பத்து, பதினைந்து ஆண்டுகளாக தமிழ் அரசியல் கைதிகள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். அவர்கள்மீது என்ன வழக்கு போடுவது என்றே இன்னமும் அரசாங்கத்திற்குத் தெரியவில்லை. அவர்கள் பயங்கரவாதிகள் என்றால் என்ன பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்பதை இந்த அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். அவர்கள்மீது எத்தகைய குற்றச்சாட்டைச் சுமத்துவது என்றே தெரியாமல் தவிக்கும் இந்த அரசாங்கத்திற்கு அவர்களைத் தொடர்ந்தும் சிறைகளில் வைத்திருப்பதற்கு உரிமையில்லை. அனைத்து அரசியல் கைதிகளையும் மனிதாபிமான அடிப்படையில் விடுவித்தால் அவர்கள் தமது எஞ்சிய காலத்தையாவது தமது குடும்பத்துடன் கழிப்பார்கள். அவர்களது குடும்பங்கள் சின்னபின்னமாகியுள்ளது. இனியாவது இலங்கை அரசாங்கம் அவர்களை விடுவிக்க முன்வரவேண்டும். அதனூடாக தனது நல்லெண்ணத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும். ஒருவருக்கு தனது குற்றம் என்பதே தெரிவிக்கப்படாமல் இருப்பது அடிப்படை மனித உரிமைமீறல் ஆகவே இந்த அரசாங்கம் மீண்டும் மீண்டும் தவறுகளை இழைக்காமல் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு உடனடியாக முன்வரவேண்டும் என்று கூறினார்.
சாந்த மைக்கேல் தேவாலயத்தைச் சேர்ந்த அருட்தந்தை உரையாற்றுகையில்,
இந்த அரசு சிறையில் இருப்பவர்களை பயங்கரவாதிகள் என்று குற்றம் சுமத்துகிறது. ஆனால் பயங்கரவாதத்தைத் தூண்டியவர்கள் இந்த ஆட்சியாளர்களே. இந்த ஆட்சியாளர்கள்தான் அவர்களிடம் ஆயுதங்களை அளித்தனர். ஆகவே குற்றவாளிகள் இந்த ஆட்சியாளர்களே அன்றி, சிறையில் இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகள் அல்ல. ஆகவே தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுவிக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.



No comments:

Post a Comment