Wednesday, May 30, 2012

இயல்பு வாழ்வுக்கு திரும்பமுடியாமல் தவிக்கும் முன்னாள் போராளிகள்


tiger-cadreசிறிலங்காவில் 26 ஆண்டுகாலமாகத் தொடரப்பட்ட உள்நாட்டுப் போரானது நிறைவுக்கு கொண்டு வரப்பட்டு மூன்று ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் போராளிகளுக்கு .. . புனர்வாழ்வளிக்கும் முயற்சிகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட போதிலும் கூட, இவர்கள் மீண்டும் தமது வாழ்வைக் கட்டியெழுப்புவதில் மிகக் கடினமான பிறிதொரு சூழலை எதிர்கொள்கின்றனர்.
“நான் பொருளாதார ரீதியாக பல்வேறு இன்னல்களுக்கு
முகங்கொடுக்கிறேன். விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர் என்பதில் நான் கவலை கொள்ளவில்லை. ஆனால் எங்களைப் போன்றவர்களுக்கு மிகச் சிறந்த வாழ்வாதார முறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்” என சிறிலங்காவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயதாக ராஜா என்பவர் இவ்வாறு தெரிவித்தார்.
2005 தொடக்கம் 2008 வரை புலிகள் அமைப்பில் பணியாற்றிய ராஜா தற்போது சிறிலங்கா அரசாங்கத்தால் வழங்கப்படும் புனர்வாழ்வுப் பயிற்சியை நிறைவுசெய்துள்ளார். “கடந்;த மூன்று ஆண்டுகளில் நான் நிறைய துன்பங்களைச் சந்தித்துள்ளேன். தற்போது நான் பிரகாசமான ஒரு எதிர்காலத்தை மட்டுமே வேண்டி நிற்கிறேன்” என ராஜா தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் ஆறு கட்டங்களாக புனர்வாழ்வுப் பயிற்சிகளை நிறைவு செய்து கொள்ள வேண்டும். இதற்கு இரு ஆண்டுகள் வரை தேவைப்படுகின்றன. இவர்களுக்கு பொதுமன்னிப்பு கிடைக்க வேண்டும் என்றால் முன்னாள் புலி உறுப்பினர்கள் இவ்வாறான புனர்வாழ்வுப் பயிற்சிகளைப் பெற வேண்டும். இல்லாவிட்டால் இவர்கள் பயங்கரவாதிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தமானது மே 18, 2009 அன்று நிறைவுக்கு வந்ததிலிருந்து 10,000 இற்கும் அதிகமான முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டதாகவும், இதில் 300 பேர் மட்டும் தற்போதும் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் புலிகளின் பலாத்கார ஆட்சேர்ப்பில் இணைக்கப்பட்டவர்கள் எனவும் சிறிலங்கா அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழில் சார் பயிற்சி நெறிகள், உள சமூக மேம்பாட்டு பயிற்சிநெறிகள் போன்றன இப் புனர்வாழ்வுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன. “சமூகத்தின் பல்வேறு துறைகளில் பணிபுரியும், கல்விமான்கள் மற்றும் வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் போன்றோர் தாம் எவ்வாறு தமது துறைகளில் வெற்றி பெற்று மேல்நிலையை அடைந்தமை தொடர்பாகவும், அவர்களது அனுபவங்கள் தொடர்பாகவும் முன்னாள் புலி உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கேற்ற வகையில் நாம் ஒழுங்குபடுத்தல்களை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு இவற்றைப் பகிர்ந்து கொள்ள விரும்புபவர்கள் முன்னாள் புலி உறுப்பினர்களிடம் தமது தொழில் சார் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்” என புனர்வாழ்வு அமைச்சுக்கான உளவியல் ஆலோசகரான மல் கெற்றியராச்சி தெரிவித்துள்ளார்.
“புனர்வாழ்வு முகாமில் வழங்கப்பட்ட பயிற்சித் திட்டமானது எனது வாழ்வில் மாற்றத்தை உண்டுபண்ணியுள்ளது. வாழ்வின் மறுபக்கத்தை அறிவதற்கு இப்பயிற்சி எனக்கு உதவியுள்ளது. எனது மனதில் நீண்ட காலமாகப் பதிந்திருந்த வெறுப்புணர்வு நீங்கியுள்ளது. இந்நிகழ்ச்சித் திட்டத்தின் போது, எனது இனமக்களுக்கு அப்பால் வேறு இனத்தவர்களைச் சந்திக்கின்ற சந்தர்ப்பத்தை பெற்றுக் கொண்டேன்” என தனது 21 ஆவது வயதில் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயதான மாறன் தெரிவித்துள்ளார். இவர் தற்போது வவுனியா வடக்கில் இசைக் கலைஞராக செயற்படுகின்றார்.
இப் புனர்வாழ்வுப் பயிற்சித் திட்டத்தை நிறைவு செய்ததன் மூலம், தேசிய மீள்கட்டுமானத்துக்கு தன்னாலான பங்களிப்பை வழங்கமுடியும் என கிளிநொச்சியைச் சேர்ந்த முன்னாள் புலி உறுப்பினரான 24 வயதுடைய மாலதி கூறுகின்றார். “நிச்சயமாக, நான் மீண்டும் ஆயுதம் தூக்க ஒருபோதும் நினைக்கமாட்டேன்” என்கின்றார் மாலதி. தமிழ்ப் புலி உறுப்பினராக இருந்த தனது மூத்த சகோதரனின் மரணத்தைத் தொடர்ந்து, தனது 17வது வயதில் அதாவது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்ததன் பின்னர் மாலதி புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டார்.
ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஏனையோர் நம்பிக்கை கொள்ளவில்லை. “30 ஆண்டு கால யுத்தத்தில் பெற்றுக் கொண்ட வடுக்களை ஆற்றுவதற்கு பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை திசைதிருப்பி அவர்களை ஆற்றுப்படுத்துவதென்பது முக்கியமானதாகும். ஆனால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் முதன்மைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என யாழ்ப்பாணத்தில் செயற்படும் தமிழ் சமூக அமைப்பொன்றின் தலைவரான விக்ரர் கருணைராஜன் தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வுப் பயிற்சிகளை நிறைவு செய்து மீண்டும் சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் தமது வாழ்வைக் கட்டியமைப்பதற்கு இவர்களுக்கு வழங்கப்பட்ட சிறிலங்கா அரசாங்கத்தின் பயிற்சித் திட்டங்கள் மட்டும் போதுமானதல்ல என சில ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
“புனர்வாழ்வுப் பயிற்சியை நிறைவு செய்து சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்களுக்கு பொருளாதார மேம்பாட்டுக்கான சந்தர்ப்பங்களை வழங்க வேண்டிய தேவை உள்ளது” என புனர்வாழ்வுப் பயிற்சி பெற்று தற்போது வவுனியாவில் வாழும் 24 வயதான சுமதி தெரிவித்துள்ளார். சமூகத்துடன் ஒன்றிணைவதில் பொருளாதாரப் பிரச்சினைகள் பலவற்றுக்கு முகங் கொடுக்க வேண்டுமென தற்போது தோட்டத்தில் கூலி வேலைசெய்யும் சுமதி தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும், சிறிலங்கா அரசாங்கத்தால் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் புனர்வாழ்வுப் பயிற்சிகளுக்கு அப்பால், சமூகத்தில் இவ்வாறானவர்கள் மீளவும் ஒன்றிணைந்து வாழ்வதில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய தேவையுள்ளது என்பதே உண்மையானதாகும்.
சிறிலங்காவில் வாழும் சிறுபான்மைத் தமிழ் மக்கள் அடக்கப்பட்டமை மற்றும் சமூகத்தில் சமமற்ற குடிமக்களாக நடாத்தப்பட்டமை போன்றவையே புலிகள் அமைப்பு தோன்றுவதற்கான அடிப்படைக் காரணிகளாக அமைந்திருந்ததால், மீண்டும் இவ்வாறான அழிவுகள் தலைதூக்காது இருப்பதற்கு தமிழ்மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
“வடக்கு, கிழக்கில் இராணுவமயப்படுத்தல்கள் தொடர்வதால் சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் மீளிணக்கப்பாடானது தோல்வியைச் சந்திக்கின்றது. இவ்வாறு இராணுவமயப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படும் வடக்கு மற்றும் கிழக்கிலேயே புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களும் மீளவும் தமது வாழ்வை ஆரம்பிக்கின்றனர். பொதுமக்களின் அன்றாட வாழ்வில் இராணுவத் தலையீடுகள் காணப்படுகின்றன. அத்துடன் கட்டட புனரமைப்புப் பணிகள், உணவு விடுதி நடாத்துதல் போன்ற பொதுமக்கள் ஈடுபடவேண்டிய பல்வேறு சமூகப் பணிகளில் தொடர்ந்தும் சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபடுகின்றனர். இதுவும் பிரச்சினையை ஏற்படுத்தக் காரணமாக அமைந்துள்ளது” என சிறிலங்கா தேசிய சமாதானப் பேரவையின் இயக்குனர் ஜெகன் பெரேரா தெரிவித்துள்ளார்.
“புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் மீண்டும் இராணுவமயப்படுத்தப்பட்ட சூழலுக்குள் வாழவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாவதால் சிறிலங்காத் தீவில் மேற்கொள்ளப்படும் மீளிணக்கப்பாட்டு முயற்சிகள் பயனற்றதாகக் காணப்படுகின்றன” என ஜெகன் பெரேரா தெரிவித்துள்ளார்.
பிரதான தமிழ்க் கட்சிகளின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட அரசியற் தீர்வு ஏற்றுக் கொள்ளப்படாமை, தமிழ் மக்களின் உரிமை தொடர்ந்தும் மறுக்கப்படுகின்றமை போன்றன நாட்டில் மீளிணக்கப்பாடு உருவாவதில் தடையாக உள்ளதாகவும் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
“‘நீண்ட கால அடிப்படையில் நோக்கில், தமிழர் பிரதேசங்களில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தின் பிரசன்னத்தை முடிவுக்கு கொண்டு வருதல் மற்றும் தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வொன்றை முன்வைத்தல் போன்றன இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் முன்னாள் புலி உறுப்பினர்களை சமூகத்துடன் இணைப்பதற்கு மிக முக்கியாமான காரணிகளாகும்” என பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment