Sunday, May 27, 2012

தமிழர் தாயகத்தில் இராணுவத்தினரின் அட்டகாசங்கள்! -தமிழீழத்திலிருந்து நீலவண்ணன்-


srilankan-armyபோர் முடிவடைந்து மூன்றாண்டுகள் மே மாதம் 18ஆம் திகதியுடன் முடிவடைந்து விட்டது. போரினால் ஏற்பட்ட வடுக்களும், உறவுகளின் உயிர் இழப்புக்களும், ஆறாத்துயர்களும் இன்னமும் அடிமனதை விட்டகலாத நிலையில,பேரினவாத அரசின் படையினர் வட, கிழக்கிலுள்ள மக்களுக்குப் பல்வழிகளிலும் நெருக்கடிகளையும் இன்னல்களையும் விளைவிக்கின்றனர்.
கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக உயிரழிவுகளையும் ,
சொத்துடமைகள் அழிவுகளையும் ஏதோ ஒரு விதத்தில் தாங்கிக் கொண்டு வாழ்கின்ற நம்மவர்கள் போர் முடிவடைந்து மூன்றாண்டுகள் கழிந்துவிட்ட நிலையிலும் கிடைக்கும் கஞ்சியையோ அன்றிக் கூழையோ அருந்திவிட்டுச் சற்று நிம்மதியாகவேனும் வாழலாமென்றால் அதற்கான வாய்ப்புக்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
எங்கும் மக்கள் ஓர்வித அச்ச உணர்வுடனும் அதுவும் இரவுவேளைகளில் பொழுது எப்போது விடியும் எனும் ஏக்கத்துடனும் தான் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
காவலரண்களைக் குறைப்பதாகவும் அகற்றுவதாகவும் கூறிக்கொண்டு இராணுவத்தினர் சந்திக்குச் சந்தி, வீதிக்கு வீதி எங்கும் ஒரே காவலரண்களையே நிறுவியுள்ளனர். ஆனால், ஒரு வித்தியாசம் அது என்னவெனில் இருக்கும் இடத்திலிருந்து சில காவலரண்களை அகற்றி அதனைப் பிறிதோரிடத்தில் காளான்கள் முளைப்பது போல அவற்றினைப் புதிதாக நிறுவும் பணியே இராணுவத்தினரால் தொடர்ந்தும் செய்யப்பட்டு வருகின்றது.
இதற்கிடையில் கடந்த வாரம் இராணுவப் பேச்சாளரான ருவன் வர்ண சூரிய தப்பியோடிய படையினரில் கடந்த மார்ச் மாதம் 31ம் திகதியுடன் முடிவடைந்த மூன்றாண்டு காலப் பகுதியில் 36308 பேர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இன்னும் கைது செய்யப்படாதோரின் எண்ணிக்கை 29092 பேர் எனவும் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அமோகமாக இயங்கிவரும் பாதாள உலகக் குழுக்கள், போதைவஸ்துக் கடத்தல் மற்றும் விற்பனைகளில் ஈடுபட்டுள்ள குழுக்கள் என்பவற்றில் எல்லாம் தப்பியோடிய இராணுவத்தினர் அடங்கியுள்ளனர் என்பது கடந்த காலங்களில் நடந்தேறிய சம்பவங்கள் மூலமாக அம்பலமாகியுள்ளமை சகலருமறிந்ததே.
இன்றைய நிலையில் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு வைத்திராத அமைச்சர்களோ அல்லது தென்னக அரசியல்வாதிகளோ இல்லை என்றாகிவிட்டது. இதனைவிட அண்மையில் யாழ்ப்பாணத்;தில் போதைவஸ்து வியாபாரக் கும்பல் ஒன்று கைதுசெய்யப்பட்டமையும் அத்துடன் மீண்டும் யாழ் நகரப்பகுதிகளிலும், கிளிநொச்சிப் பகுதிகளிலும் சற்று அதிகமாக நடக்கும் கொள்ளைச் சம்பவங்களையும் கவனிக்குமிடத்து வடபகுதிக்குள்ளும் தென்பகுதி பாதாள உலகக் குழுக்கள் ஊடுருவியிருப்பது போலக் காணப்படுகின்றது.
வடபகுதியில் போர் நடைபெற்ற சமயத்திலும் சரி போருக்குப் பின்னான காலத்திலும் சரி நடைபெற்ற ஆட்கடத்தல்கள், கொலைகள், கொள்ளைகள், திருட்டுச் சம்பவங்கள் போன்ற சிலவற்றில் இராணுவத்தினரும் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை அண்மையில் வெளிவந்த சில சம்பவங்கள் குறித்த உண்மைகள் உறுதி செய்கின்றன. தற்போதும் சிலது அம்பலமாகிக் கொண்டுவருகின்றன. உண்மைகள் என்றேனும் ஒரு நாளில் அவை வெளிவரத்தானே செய்யும்.
சமாதானத்தை நிலைநாட்டுவோம்! மக்களைப் பாதுகாப்போம்! நல்லிணக்கத்தை வளர்ப்போம் எனக் கூறித் திரியும் இ;ராணுவம் வேலியே பயிரை மேய்வது போல் செயற்பட்டால் நிலமை என்னவாகும்?
யாழ்ப்பாணம் சிறீதர் தியேட்டர் அருகில் அமைந்துள்ள காவலரணில் கோப்ரல் தரத்திலான இரு இராணுவத்தினரில் ஒருவர் மற்றவரைச் சுட்டுக் கொன்று விட்டு மற்றவர் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
திருகோணமலையில் கடந்தவாரம் கடற்படையினர் ஒருவர் தனது தரத்திலான பெண் கடற்படை வீராங்கனை ஒருத்தியைச் சுட்டுக் கொன்று விட்டு தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
இவ்விதமாக வன்னிப்பகுதியிலும், பூநகரி, வடமராட்சிப் பகுதியிலும் கடந்த வருடம் இறுதியில் பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.
இவை ஒருபுறமிருக்க, தீவகப்பகுதியில் அனலைதீவு மிகவும் சனநெருக்கடி குறைவான தீவாகும். அங்கு பணியிலிருந்த கடற்படைச்சிபபாய் ஒருவர் ஆண்களின்றிப் பெண்கள் வீடுகளில் தனித்திருக்கும் சமயங்களில் அவ்வீடுகளுக்குள் சென்று பெண்களுடன் சேட்டைகளில் ஈடுபட்டுள்ளார்.
அது மேலதிகாரிக்குத் தெரிவிக்கப்பட்டு அவர் வேலை இடமாற்றம் செய்யப்பட்டு வேறிடத்திற்கு அனுப்பப்பட்ட போதிலும் அதே நபர் மீண்டும் ஒருவாரத்திற்குள் அதே இடத்திற்கு மாற்றலாகி வந்து தொடர்ந்தும் பெண்களுக்குத் தொல்லை கொடுத்து வருகின்றாராம். அதுமட்டுமல்லாமல் மேலதிகாரிக்குத் தன்னைப் பற்றிப் புகார் செய்தது யாரெனத் துருவித் துருவி மிரட்டி விசாரித்தபடி திரிகின்றாராம். இதனால் மாற்றலாகிச் சென்றவர் மீண்டும் எவ்விதம் அதே இடத்திற்கு வந்துள்ளார் என மக்கள் கவலையும் அச்சமும் கொண்டுள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் பருத்தித்துறை நீதிமன்றத்தில் வைத்து வழக்கொன்றிற்காக நீதிமன்றத்திற்கு வந்திருந்தவரின் கைப்பையிலிருந்து ரூபா 10000 ஆயிரத்தை இராணுவச் சிப்பாய் ஒருவர் கையாடியதுடன் அவர் கையும் மெய்யுமாகப் பிடிபட்டு அவருக்குப் பணத்தைத் திருடியமைக்காகவும் அதேசமயம் நீதிமன்றத்தில் வைத்துத் திருடியமையால் நீதிமன்றத்தை அவமதித்தமைக்காகவும் 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
அதேபோன்று கடந்த மாதத்தில் யாழ்.பஸ் நிலையத்தில் வைத்து செல்லத்துரை சதீஸ்குமார் என்பவரின் பல்ஸர் ரக மோட்டார் சைக்கிளை யாழ்ப்பாணத்தில் கடமை புரியும் கண்டி கட்டுகஸ்தோட்டையைச் சேர்ந்த பிரேமகுமார என்ற இராணுவச் சிப்பாய் திருடிச்சென்று கட்டுகஸ்தோட்டையில் வைத்து எம்.எம்.புத்திக நிரோஷ பண்டாரசிங்க என்பவருக்கு விற்றுள்ளார். கிடைத்த தகவல்களின் மூலமாகப் பொலிசார் களவாடி விற்ற குறித்த இராணுவச் சிப்பாயையும் அதனை வாங்கியவரையும் கைது செய்து யாழ்ப்பாண நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய வேளையில் இராணுவச் சிப்பாய் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இது ஒருபுறமிருக்க வடபகுதியில் பல இடங்களிலும் இராணுவத்தினர் பொதுமக்களின் காணிகளைத் தம் இச்சைப்படி சுவீகரித்துக் கொண்டு அக்காணிகளில் புத்தர் சிலைகளை நாட்டுவதில் ஈடுபட்டுள்ளனர்.
அவ்வகையில் இந்துக்களின் புனித பிரதேசமாகக் கருதப்படும் மன்னார் மாவட்டத்திலுள்ள திருக்கேதீஸ்வரத் திருத்தலத்தின் தீர்த்தக் கரையான பாலாவியின் அருகேயுள்ள சேர் கந்தையா வைத்தியநாதனின் காணியொன்றில் படையினர் 1500 கிலோ எடையுள்ள புத்தரின் சிலையொன்றை நிறுவியுள்ளனர். இதுகுறித்து காணி உரிமையாளரின் வாரிசுகள் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகச் செய்திகள் வெளிவந்தன.
அதேபோன்று மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முருங்கன் கிராமத்தில் இரண்டு இடங்களில் இராணுவத்தினர் இரண்டு சிறிய முகாம்களை அமைத்து வருகின்றனர். மன்னார் மதவாச்சி வீதியில் உயிலங்குளத்தில் உள்ள 11ஆம் கட்டையிலும், செம்மந்தீவு எனும் இடத்திலும் இவை அமைக்கப்படுகின்றன. இவற்றுக்குள் விவசாயிகளின் குளக்காணிகளும் அகப்பட்டுக் கொண்டமையினால் எதிர்காலத்தில் விவசாயத்திற்கான நீரைப் பாய்ச்சுவதில் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என விவசாயிகள் கவலை கொண்டுள்ளனர்.
அத்துடன் அவ்வயற் காணிகளில் வேலைகளில் ஈடுபட்டுள்ள தமது கணவர்களுக்கு உணவு எடுத்துச் செல்ல பெண்கள்; அஞ்சுகின்றனர்.
வவுனியாவில் ஏற்கனவே பல ஏக்கர் விஸ்தீரமான நிலப்பரப்பில் விமானப்படை முகாம் ஒன்று இயங்கி வரும் நிலையில் வவுனியா தெற்குப் பிரதேசத்திலுள்ள பம்மைமடுவில் யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்திற்கு அருகில் உள்ள காணியைப் பலவந்தமாகச் சுவீகரித்து இராணுவத்தினர் அந்நிலத்தில் மேலும் ஓர் விமானப் படைத் தளத்தை நிறுவுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அந்நிலத்தில் கலாச்சார மண்டபம் ஒன்றினையும்இ விளையாட்டரங்கு ஒன்றினையும்இ நிறுவத்திட்டமிட்ள்ளனர். பிரதேச சபையினர் இராணுவத்தினரின் இவ்வாறான பலவந்தமான நடவடிக்கையினால் கவலை கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு மற்றும் கோம்பாவில் பகுதிகளில் அரசின் அபிவிருத்தித் திட்டங்களை ஒப்பந்தமெடுத்துச் செய்யும் ஒப்பந்தக்காரர்களுக்கும் படையினர் தலையிடிகளைக் கொடுத்து வருவதினால் ஒப்பந்த வேலைகள் தாமதமடைகின்றன. ஒப்பந்தகாரர்களின் கனரக வாகனங்களாகிய புல்டோசர்இ ரிப்பர் என்பவற்றைப் பயன்படுத்திப் படையினர் தமது முகாம்களின் வேலைகளைச் செய்து தருமாறு ஒப்பந்தக்காரர்களைப் நிர்ப்பந்திக்கின்றனர்.
வடபகுதியில் முதலில் இடம்பெயர்ந்தவர்கள் என்ற ‘பெருமைக்குரிய’ காங்கேசந்துறைஇ தையிட்டிஇ ஊறணிஇ மயிலிட்டி மற்றும் பலாலி போன்ற இடங்ளைச் சேர்ந்த மக்கள் இன்றுவரை தமது சொந்த இடங்களைக் கூடப் பார்வையிட முடியாதவர்களாக இருக்கின்றனர்.
உயர்பாதுகாப்பு வலயம் என்ற இரும்புக் கோட்டைக்குள் இம்மக்களின் இடங்களை, வாழ்வாதாரங்களை அமைத்து அச்சுறுத்தி வைத்துக் கொண்டிருக்கிறது அரசு. சொந்த நிலங்களிலிருந்தும் ஏதிலிகளாய் எங்கெங்கோ பிறரின் வளவுகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் அம்மக்கள்.
அதேவேளையில், மயிலிட்டியில் அமைந்திருந்த காசநோய் வைத்தியசாலை, முன்னர் காங்கேசன்துறையில் இருந்த தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை மற்றும் பலாலியில் உள்ள ஆசிரிய பயிற்சிக் கலாசாலை என்பவற்றினையும் கபளீகரம் செய்வதற்கான முயற்சிகள் மும்முரமாக நடைபெறுகின்றன.
ஆரம்பத்தில் மீளக் குடியமர்த்துவதற்குக் கண்ணிவெடிகள் அகற்றுவதைக் காரணம் காட்டி வந்த அரசு தற்போது கண்ணிவெடி அகற்றுப்பட்டு விட்டதாகச் சான்றிதழ் வழங்கப்பட்ட பகுதிகளைக் கூட இன்னமும் மீளக் குடியமர்விற்கு விடுவிக்க மறுக்கிறது. இதற்குப் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி மறுப்பே காரணமெனக் கூறப்படுகின்றது.
பொதுவில் வலிவடக்கில் மீளக் குடியமர்விற்கான முயற்சிகளை விட அப்பகுதிகளை விடுவிக்காது வைத்திருப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளே அதிகம்.
இதுமட்டுமா ‘மனிதாபிமான நடவடிக்கை’ ‘;சமாதானத்திற்கான போர்’ என வெளியுலகிற்குக் கூறிக்கொண்டு போரின் இறுதிகட்டமான ஒருமாத்திற்குள் ஈவிரக்கமின்றி குறைந்தது 40000 பேரைக் கொன்று குவித்தும் பெண்களைச் சுட்டுக் கொல்வதோடு நின்றுவிடாது அவர்களின் உள்ளாடைகளை அகற்றியும் மானபங்கப்படுத்திய மனிதாபிமானமென்பதே சற்றேனுமற்ற இராணுவத்தினரின் வீரத்தை மெச்சி வெற்றிவிழாக் கொண்டாடிய அரசு, அதே தினத்தில் முள்ளிவாய்க்காலின் போரின் இறுதியில் பறிகொடுத்த உறவுகளின் மூன்றாவது ஆண்டு நினைவாக யாழ்.பல்கலைக்கழகத்தில் நினைவு நிகழ்வு நடைபெறவிருக்கையில ;அதேதினத்தில் காலை 8 மணியளவில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரான 24 வயதுடைய கலைப்பீட இறுதியாண்டு மாணவர் அவரது வீட்டருகில் உள்ள வீதியில் வைத்து இனந்தெரியாதோரினால் இரும்புக்கம்பியினால தாக்கப்பட்டுக் கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. க
ைமுறிந்த நிலையிலும் தலையில் வெடிப்புக் காயங்களுடனும் அவர் யாழ்.போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வடக்கில் எட்டுப் பேருக்கு ஒரு இராணுவச் சிப்பாய் என்ற நிலைமைதான் உள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளதைக் கொண்டே வடபகுதியில் எந்தளவில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர் என்பது தெட்டத்தெளிவாகின்றது.
-தமிழீழத்திலிருந்து நீலவண்ணன்-


No comments:

Post a Comment