Friday, June 01, 2012

பாரதி அன்பர்கள் - என்கிற பெயரில் கொழும்புக்குச் சென்றிருக்கும் தமிழறிஞர்களுக்கு, வணக்கம்.

பாரதி விழா என்கிற பெயரில், தேமதுரத் தமிழோசையை உலகமெலாம் பரப்பப் போவதாகத் தெரிவித்திருக்கிறீர்கள். உலகம் உங்களுக்குக் கொழும்பிலிருந்து ஆரம்பிக்கிறது.
பாரதி அன்பர்கள் - என்கிற பெயரில் கொழும்புக்குச் சென்றிருக்கும் தமிழறிஞர்களுக்கு, வணக்கம்.


பாரதி விழா என்கிற பெயரில், தேமதுரத் தமிழோசையை உலகமெலாம் பரப்பப்போவதாகத் தெரிவித்திருக்கிறீர்கள். உலகம் உங்களுக்குக் கொழும்பிலிருந்து ஆரம்பிக்கிறது.


முள்ளிவாய்க்கால் வரை விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழ்ச் சொந்தங்களின் மரண ஓலம், சனல் 4 முதலான ஊடகங்கள் மூலம் உலகின் செவிகளில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிற இந்த நேரத்தில், தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ வேண்டும் - என்கிற பதாகையுடன் நீங்கள் புறப்பட்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

உணர்வே இல்லாத ஜடங்களைப் போல் நடமாடும் தமிழ்ச் சனங்களைச் சாடுவதில் நமக்கு வழிகாட்டியாக இருக்கிற ஒரே மகாகவி - பாரதி தான் என்பது, உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். பாரதிக்கு இருந்த தார்மீகக் கோபம், உங்களுக்கு இல்லாது போக வாய்ப்பேயில்லை. ஏனென்றால், நீங்கள் 'பாரதி அன்பர்கள்.' பாரதியைக் கரைத்துக் குடித்திருப்பீர்கள்.
"தாய் பிறன் கைப்படச் சகிப்பவனாகி
நாயென வாழ்வோன் நமரில் இங்குளனோ?
தாய்த் திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை
மாய்த்திட விரும்பார் வாழ்வுமோர் வாழ்வுகொல்?"

என்று முதுகலை வகுப்பில் படித்த பாரதியின் வரிகளை என்னாலேயே இன்னும் மறக்க முடியவில்லை. பாரதி அன்பர்களாகிய நீங்கள் எப்படி மறந்திருக்க முடியும்?
அதற்காக மனித வெடிகுண்டாக மாறி ராஜபக்ஷ மீது நீங்கள் பாயவேண்டிய அவசியமில்லை. இலங்கையின் அதிபர் என்று சொல்லிக் கொள்கிற ஒரு மனிதனும் அவனது தம்பியரும் சேர்ந்து செய்த இனப்படுகொலையைக் கண்டித்து, பாரதி விழாவில் ஒரு தீர்மானம் நிறைவேற்றுங்கள். அவர்கள் சர்வதேச குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வையுங்கள். அது போதும். அதுதான், இன்றைக்கு அந்த கொலை வெறியர்களுக்கு அச்சத்தையும் நடுக்கத்தையும் தருகிற வலுவான வெடிகுண்டு.
புத்தரின் பெயரால் இனப்படுகொலை செய்த கொலை வெறியர்களை காந்தியின் பெயரால் காப்பாற்ற முயலலாமா - என்று பாரதி விழாவுக்கு வரும் இந்தியத் தூதரக அதிகாரியிடம் முகத்திலடித்ததைப் போல் கேளுங்கள். உங்களால்தான் அப்படிக் கேட்கமுடியும். ஏனென்றால், நீங்கள் 'பாரதி அன்பர்கள்'. வெடிப்புறப் பேசு - என்று போதித்த அந்த மகாகவியின் மாணவர்கள்.
அந்த மகாகவிக்கு இருந்த துணிச்சலும், அவன் குறிப்பிட்ட ஆண்மையும் எப்படி உங்களுக்கு இல்லாமல் இருக்கும்! "மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்ய, பேதைகள் போல் உயிரைப் பேணியிருந்தாரடீ" என்று பாரதி சாடிய நடிப்புச் சுதேசிகளா நீங்கள்? இல்லை... நீங்கள் 'பாரதி அன்பர்கள்'.
ராஜபக்ஷவின் இ ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்ட ஆயிரமாயிரம் குழந்தைகளைப் பற்றியோ, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட ஆயிரமாயிரம் தமிழ்ச் சகோதரிகள் பற்றியோ - பாரதி விழாவில் நாலுவரி கவிதை படியுங்கள்... உலகத் தழிழர்களின் நாடி நரம்பெல்லாம் உங்கள் பெயரை உச்சரிக்கும். அது தான் - பாரதியின் அன்பன் - என்று சொல்லிக் கொள்ளும் உங்களால் பாரதிக்குச் சேர்கிற பெருமையாகவும் இருக்கும்.
ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்ததுடன் நில்லாது, 3 ஆண்டுகள் முடிந்த பிறகும் அதைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது கொழும்பு. அந்த இனவெறியர்களின் மண்ணில் நின்று பாரதியின் பெயரைக் கொண்டாடுவதை விட பாரதியின் துணிச்சலுடன் அவர்களைப் பந்தாடுவதுதான் 'பாரதி அன்பர்கள்' என்று சொல்லிக் கொள்ளும் தகுதியை உங்களுக்குத் தரும்.
இரத்தக் கறை படிந்த புத்தனின் மண்ணில் நிற்கிறீர்கள். அங்கே நின்று அநீதியைத் தட்டிக் கேட்காமல், இங்கே வந்து ஆவேசக் கவிதை படித்தீர்களென்றால், அங்கே உண்ட விருந்துக்கு இங்கே வந்து ஏப்பம் விடுகிறீர்கள் என்கிற இழிபெயரைத் தான் தாங்க வேண்டியிருக்கும்.
நகைச்சுவைப் பட்டிமன்றம், குதூகலிக்கவைக்கும் கவிதைகள் மற்றும் சொற்பொழிவுகள் மூலம், தமிழை வைத்து தங்களை வளர்த்துக் கொள்ளும் கூலிப்படைகளுக்கு இங்கே பஞ்சமேயில்லை. அச்சம் தவிர்த்து, ஆண்மை தவறாமல் உண்மையைப் பறைசாற்றுவதன் மூலம் தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் தன்மானப் படைதான் தேய்ந்துபோய் விட்டது. "கொழும்பு நகரில், கொலைகார ராஜபக்ஷவிற்கு எதிராக முழங்கிய பாரதி அன்பர்களால் இந்தக் குறை தீர்ந்தது" - என்று நாளைய வரலாறு உங்களைப் போற்றிப் புகழ வேண்டும். நீங்கள் நிச்சயம் வரலாறு படைப்பீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஏனென்றால், நீங்கள் - 'பாரதி அன்பர்கள்'.
குன்றென நிமிர்ந்து நில்லுங்கள்!
கொடுமையை எதிர்த்து நில்லுங்கள்!
பாதகஞ் செய்வாரைக் கண்டால்
மோதி மிதியுங்கள்... முகத்தில் உமிழுங்கள்!


நன்றி!

என்றும் அன்புடன்
புகழேந்தி தங்கராஜ்.

No comments:

Post a Comment