Friday, June 01, 2012

டசின் கணக்கான தமிழர்களை இன்று இரகசியமாக நாடு கடத்துகிறது பிரித்தானியா

பிரித்தானியாவில் புகலிடம் தேடிய டசின் கணக்கிலான தமிழ் அகதிகள் இரகசிய விமானம் ஒன்றின் மூலம் இன்று சிறிலங்காவுக்கு கட்டாயமாக நாடு கடத்தப்படவுள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி இன்டிபென்டன்‘ நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழ் அகதிகளை ஏற்றிய - PTV030 என்ற இலக்கமுடைய, வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் லண்டன விமான நிலையத்தின்- வெளிப்படுத்தப்படாத இடம் ஒன்றில் இருந்து கொழும்புக்குப் புறப்படவுள்ளது. 

பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்படும் தமிழ் அகதிகள் சிறிலங்காவில் கைது செய்யப்படவும், சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படவும் வாய்ப்புகள் இருப்பதற்கான நம்பகமான சான்றுகள் உள்ள போதும் இந்த நாடுகடத்தல் இடம்பெறுவதாக ‘தி இன்டிபென்டன்‘ நாளேடு குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானிய மகாராணியின் முடிசூட்டு விழாக் கொண்டாட்டங்களுக்காக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச லண்டன் வரவுள்ள சூழலில், இந்த நாடுகடத்தல் இடம்பெறுவதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

ஐரோப்பாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் சிறிலங்காவில் சித்திரவதை செய்யப்பட்ட 13 சம்பவங்களை மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் ஆவணப்படுத்தியுள்ளது.

இருந்தபோதும் சிறிலங்கா அகதிகளை நாடுகடத்துவதில் பிரித்தானியா பிடிவாதமாக உள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் நான்கு வாடகை விமானங்களில் சிறிலங்காவுக்குத் தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment