Wednesday, June 20, 2012

ஐ.நா குழுவை அனுமதிக்க மறுத்தால் இலங்கை கடும் நெருக்குதலுக்கு உள்ளாகும்?

navaneethampilai_001ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியக அதிகாரிகள் குழுவை இலங்கை அரசாங்கம் அனுமதிக்க மறுத்தால், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அடுத்தகட்டமாக கடும் நடவடிக்கைகளில் இறங்கக் கூடும் என்று ஜெனிவா தகவல்கள தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளத் தயாராகி வருவதாக ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஏற்கனவே இலங்கை அரசுக்குத் தகவல் அனுப்பியிருந்தார். அத்துடன் சிறப்புக் குழுவொன்றையும் அனுப்பப் போவதாகவும் அவர் இலங்கை அரசுக்கு அறிவித்திருந்தார்.
ஆனால், நவநீதம்பிள்ளையின் கடிதத்துக்குப் பதில் அனுப்புவதில்லை என்று இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதுடன், இந்த விவகாரம் குறித்து மௌனத்தை கடைப்பிடிக்கவும் முடிவு செய்துள்ளது. இருந்தாலும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமற்ற பதில் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், நவநீதம்பிள்ளையின் பயணத்தை தாம் எதிர்க்கவில்லை என்றும், ஆனால் சிறப்புக்குழுவை அனுமதிக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், நவிபிள்ளை இலங்கை அரசாங்கத்தின் இந்த அதிகாரபூர்வ கடிதத்துக்கு பதில் அனுப்பவில்லை என்று ஜெனிவா வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நவிபிள்ளையுடன் சிறப்புக்குழுவை இலங்கை அனுமதிக்க மறுத்தால், அவர் அடுத்த கட்டமாக நடவடிக்கை எடுப்பதற்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த இலங்கை அரசாங்கம் தவறி விட்டதால், ஹேக்கில் உள்ள அனைத்துலக போர்க்குற்ற தீர்ப்பாயத்தின் முன்பாக இந்த விவகாரத்தைக் கொண்டு செல்லும்படி அடுத்த ஐ.நா மனிதஉரிமைகள் பேரைவைக் கூட்டத்தொடரில் அவர் முன்மொழியக் கூடும்.
அல்லது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான சிறப்பு அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதுடன் இலங்கைக்கு எதிரான புதியதொரு தீர்மானத்தை அவர் முன்மாழியலாம்.
நவிபிள்ளையின்தும் அவரது குழுவினதும் பயணத்துக்கு இலங்கை அரசாங்கம் தொடர்ந்து முட்டுக்கட்டை போடுமேயானால், இந்த இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை அவர் தெரிவு செய்யக் கூடும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment