Monday, June 11, 2012

“மகிந்த - கமரூன் சந்திப்பு மகிழ்ச்சியானது அல்ல” – பிரித்தானிய பிரதமர் செயலகப் பேச்சாளர்


சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் மகிழ்ச்சியான சூழலில் உரையாடியதாக சிறிலங்கா ஊடகங்களில் வெளியான தகவல்களை பிரித்தானிய பிரதமரின் பேச்சாளர் ஒருவர் நிராகரித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, போர்க்குற்றங்கள் தொடர்பாக பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் சிறிலங்கா அதிபரிடம் வலியுறுத்திக் கேட்டுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

கமரூனும், மகிந்த ராஜபக்சவும் மகிழ்ச்சியாக உரையாடியதாகவும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பிரித்தானியப் பிரதமருக்கு தமது நாட்டின் நிலைமைகள் குறித்து விளக்கமளித்தாகவும் ‘டெய்லி மிரர்‘ நாளேட்டில், சிறிலங்கா அதிபரின் பேச்சாளர் பந்தல ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

அதேவேளை கொழும்பு கசெற் ஊடகத்துக்கு பந்துல ஜெயசேகர வழங்கிய செவ்வியில், கமரூனும் ராஜபக்சவும் தனித்தனியாக சந்தித்ததாக கூறப்பட்டுள்ளது.

இவர்களின் கலந்துரையாடல் பற்றிய விபரங்கள் உடனடியாக அதிபர் செயலகத்துக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

ஏன் அந்த விபரங்கள் கிடைக்கவில்லை என்பது இப்போது தெளிவாகியுள்ளது.

அவர்கள் தனித் தனியாக சந்தித்தனர் என்பதை பெரும்பாலான மக்கள் நட்புரீதியானது என்றே கருதுவார்கள்.

ஆனால், இந்தச் சந்திப்பின் போது சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக முறைப்படியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற பிரச்சினையை பிரித்தானிய பிரதமர் எழுப்பினார் என்று, பிரிதானியப் பிரதமர் செயலகப் பேச்சாளர் கிராக் ஒலிவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பந்துல ஜெயசேகரவுடன் சனல் 4 தொடர்பு கொள்ள முயன்றது. ஆனால் அவர் தொடர்புக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment