Tuesday, June 12, 2012

வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழம் சார்பாக பங்கேற்ற அணியினருக்கு அவர்கள் வாழும் நாடுகளில் பலத்த வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

seithy.com gallery newsவீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழம் சார்பாக பங்கேற்ற அணியினருக்கு அவர்கள் வாழும் நாடுகளில் பலத்த வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. உலகளாவிய தமிழ் இளையேர் அவையின் ஏற்பாட்டில், சர்வதேச அரங்கில் இடம்பெறும் இந்த காற்பந்தாட்ட போட்டியான வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழ அணியும் பங்கு பற்றி விளையாடி இருந்தது.

குருதிஸ்தானில் (வட இராக்) இடம்பெற்ற இந்த உலகக்கிண்ணப் போட்டியில், தமிழீழம் அணி சார்பாக கனடா, சுவிற்சர்லாந்து, மற்றும் பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழ் விளையாட்டு வீரர்கள் விளையாடி இருந்தனர்.

இவ்வாறு தமிழீழ அணிக்காக பிரித்தானியாவில் இருந்து சென்று விளையாடிய வீரர்கள் இரவு (10-06-2012) லண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையத்திற்கு வந்தபோது, அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. FIFA உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் அனுமதி பெறாத மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகாரம் பெறப்படாத தேசிய இன மக்களுக்காகவே வீவா சுற்றுக்கிண்ணப் போட்டி New Federation Board ஆல் நடாத்தப்படுகிறது.

காற்பந்தாட்டதில் தங்கள் திறமைகளை தமிழீழ விளையாட்டு வீரர்கள் புலம்பெயர் நாடுகளில் வெளிப்படுத்தியுள்ளனர். வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் கலந்து கொள்வதன் மூலம் இவர்களுக்கு தாங்கள் தமிழீழத்தைச் சேர்ந்த காற்பந்தாட்ட வீரர் என்னும் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
தம் தாய் நாட்டின் சார்பாக ஒரு சர்வதேச போட்டியில் கலந்து கொள்ளவது என்பது பெருமைப் படக்கூடியதொன்றாகும். இவ்வாறான ஒரு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி தமிழீழ அணியில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவரும் பெருமகிழ்ச்சியும் பெருமையும் கொள்கின்றனர்.

இவ்வாண்டு வீவா சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழம், டார்பூர், இராக்கி குருதிஸ்தான், வட சைபிரசு, ரேடியா, ஒக்சிரான்ரியா, புரோவென்சு, மேற்கு சகாரா மற்றும் சான்சிபார் ஆகிய ஒன்பது அணிகள் மோதியிருந்தன.இவ்வணிகள் நெல்சன் மண்டேலா வெற்றிக் கிண்ணத்துக்காக கடுமையாக போட்டியிட்டன. தென் ஆபிரிக்காபின் முன்னால் அரச அதிபர் நெல்சன் மண்டேலா தன் மக்களின் விடுதலைக்காக விடாமுயற்சியுடன் போராடினார். அவரின் நினைவாகவே இவ்வெற்றிக் கிண்ணத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.
இச்சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழ அணி பங்கு பற்றியமை, தமிழர் வரலாற்றில் இடம்பெற்ற மற்றொரு ஒரு பதிவாகும்.தமிழீழ அணியைச் சேர்ந்த விளையாட்டுவீரர்கள் தங்கள் கைகளில் தமிழீழ தேசிய கொடியை ஏந்தி போட்டியில் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment