Tuesday, June 19, 2012

நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கு கோத்தாவே பொறுப்பு – போர்க்கொடி தூக்குகிறது ஐதேக

சிறிலங்காவில் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் குற்றச்செயல்களின் மோசமான அதிகரிப்புக்கு சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவே பொறுப்பு என்று ஐதேக குற்றம்சாட்டியுள்ளது.

அம்பாந்தோட்டையில் ஜேவிபி உறுப்பினர்கள் இருவர்
சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினரும், ஐதேகவின் தொடர்பாடல் பிரிவுக்குப் பொறுப்பானவருமான மங்கள சமரவீர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நீதிக்குப் புறம்பான படுகொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமற்போதல்கள், எதிர்ப்புத் தெரிவிப்போர் கொல்லப்படுவது, பெண்கள் மற்றும் சிறார்கள் மீதான பாலியல் குற்றச்செயல்கள் என்பன சிறிலங்காவில் மோசமாக அதிகரித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

“நாட்டில் அதிகரித்துள்ள நீதிக்குப்புறம்பான கொலைகள், பாலியல் குற்றச்செயல்கள் மற்றும் குற்றங்களுக்கு சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவே முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும்.

அவரது கட்டுப்பாட்டின் கீழேயே காவல்துறை திணைக்களம் உள்ளிட்ட, பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு சார்ந்த துறைகள் அனைத்தும் உள்ளன.

முக்கியத்துவம் மிக்க அமைச்சு ஒன்றை திறமையற்ற - நிர்வாகசேவையில் இல்லாத அதிகாரி ஒருவர் நிர்வகிக்க அனுமதிக்க முடியாது.

இதனைத் தொடர்ந்து அனுமதித்தால், நாட்டில் குழப்பங்களும், அராஜகங்களுமே மேலோங்கும்.

அம்பாந்தோட்டை கொலைகள் குறித்து சுதந்திரமான முறையில் விசாரிக்கப்பட வேண்டும்.

கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலராக இருக்கும் வரை அது சாத்தியமாகப் போவதில்லை.

எனவே உடனடியாக கோத்தாபய ராஜபக்சவைப் பாதுகாப்புச் செயலர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, பொருத்தமான நிர்வாக அதிகாரி ஒருவரை அந்தப் பதவிக்கு நியமித்து, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
 

No comments:

Post a Comment