Tuesday, July 03, 2012

இந்த வருட இறுதியில் இலங்கை இன்னும் மோசமான நிலையைச் சந்திக்கலாம்!

  ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு (UNHRC) என்ற பெயரில் இயங்கிய அந்த நிறுவனம் 2006 ஆம் ஆண்டில் புதிய கட்டமைப்பு மாற்றத்தை உள்வாங்கிச் செயற்படத் தொடங்கியது.
அத்துடன் 2006 ஆம் ஆண்டு முதல் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை என்ற பெயருடன் (UNHRC) அனைத்து உறுப்பு நாடுகளின் மனித உரிமைகள் குறித்து விசேட கவனம் செலுத்தும் விதத்தில் புதிய விதிமுறைகளையும், நடைமுறைகளையும் வகுத்துச் செயற்பட ஆரம்பித்தது.

இந்தப் புதிய கட்டமைப்பு மாற்றங்களுள் உலகளாவிய ரீதியில் காலத்துக்குக் காலம் உறுப்பு நாடுகள் குறித்து மீளாய்வு செய்யும் (Universal Periodic Review) நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும்.
உலகின் சகல நாடுகளிலும் நடைபெற்றுவரும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை அவதானித்து வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின், இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்த ஆய்வு எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதியன்று இடம்பெறவுள்ளது.
அரச வளங்களையும், சட்டத்தையும், அதிகாரத்தையும் தமது கைகளிலெடுத்து நாட்டு மக்களது மனித உரிமைகள் மற்றும் ஏனைய உரிமைகளை அப்பட்டமாக மீறும் தான்தோன்றித்தனமான அரசுகளை ஏதோ ஒரு விதத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும், தேவையேற்படின் சட்டத்தின் முன் அவற்றை மண்டியிட வைப்பதற்கும் சர்வதேச மட்டத்திலான பொறிமுறையொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்துவது நாடுகளில் நல்லாட்சியை நிலை நிறுத்த இன்றியமையாததொரு கருவியாகிறது.
இன்றைய உலகில், சர்வதேச ரீதியில் அத்தகைய பணியை மேற்கொண்டு வரும் நிறுவனமே ஐக்கிய நாடுகள் சபையாகும். இன்று சுயாதீனமாகச் செயற்பட்டு வரும் உலகின் 193 நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன.
ஐ.நா.சபையின் ஐந்து அங்கங்களான உப நிறுவனங்களில் ஒன்று, ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு. உலக நாடுகளில் வாழும் பொது மக்களது மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பது அதனது முக்கிய குறிக்கோளாகும்.
தனது பணியை உரிய முறையில் மேற்கொள்வதற்காக அது வகுத்துள்ள மனித உரிமைகள் பிரகடனத்திலும், அதன் அனைத்து உறுப்பு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. முன்னைய காலகட்டத்தில் ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு, பலம் வாய்ந்த வல்லரசு நாடுகளுக்கு ஆதரவாக, பக்கச்சார்பாகச் செயற்படுவதாகக் குற்றஞ் சாட்டப்பட்டதுண்டு.
அதன் காரணமாக ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு (UNHRC) என்ற பெயரில் இயங்கிய அந்த நிறுவனம், 2006 ஆம் ஆண்டில் புதிய கட்டமைப்பு மாற்றத்தை உள்வாங்கிச் செயற்படத் தொடங்கியது. அத்துடன் 2006 ஆம் ஆண்டு முதல் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை என்ற பெயருடன் (UNHRC) அனைத்து உறுப்பு நாடுகளின் மனித உரிமைகள் குறித்து விசேட கவனம் செலுத்தும் விதத்தில் புதிய விதிமுறைகளையும், நடைமுறைகளையும் வகுத்துச் செயற்பட ஆரம்பித்தது.
இந்தப் புதிய கட்டமைப்பு மாற்றங்களுள் உலகளாவிய ரீதியில் காலத்துக்குக் காலம் உறுப்பு நாடுகள் குறித்து மீளாய்வு செய்யும் (Universal Periodic Review) நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும்.
இந்த நடைமுறை மூலம் ஐ.நா.மனித உரிமைகள் சபையால் காலத்துக்குக் காலம் அதன் உறுப்பு நாடுகளின் மனித உரிமைகள் நிலவரம், நுணுக்கமான ஆய்வுக்கும் கண்காணிப்புக்கும் உட்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில் இந்த யூ.பி.ஆர். நடைமுறைக்கமைய அதன் உறுப்பு நாடுகள் ஏற்கனவே முதல் சுற்றுக் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு விட்டன. இந்த ஆண்டு முதல் இடம் பெறவிருப்பது அதன் இரண்டாவது சுற்று ஆய்வாகும்.
கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதத்தில் இடம்பெற்ற யூ.பி.ஆர். குழுவின் முதலாவது சுற்றுப் பொது ஆய்வின் போது, இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
தற்போது இந்த விடயம் தொடர்பான இரண்டாவது சுற்று ஆரம்பமாகியுள்ளதால் இதிலும் இலங்கை தொடர்பாகவும் மீளாய்வு செய்யப்படும். இத்தகைய யூ.பி.ஆர்.குழுவின் பொது ஆய்வு இந்த ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையான நான்கு ஆண்டுகள் காலம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
அந்த வகையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள யூ.பீ.ஆர். குழுவின் 14 ஆவது அமர்வுத் தொடரின் போது, இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்த பரிசீலனை நவம்பர் மாதம் முதலாம் திகதியன்று இடம்பெறுமென நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஏற்கனவே அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட பிரேரணை, கடந்த மார்ச் மாதத்தில் இடம்பெற்ற ஐ.நா.மனித உரிமைகள் சபையில் நிறை வேற்றப்பட்டுள்ளதன் காரணமாக, நவம்பர் மாதத்தில் இடம்பெறவுள்ள யூ.பி.ஆர்.குழுவின் பொது மீளாய்வுக்கு இந்த விடயம் உட்படும் வேளை இலங்கை அரசு பாரதூரமான இக்கட்டு நிலையை எதிர்கொள்ள நேரக்கூடும்.
ஐ.நா.மனித உரிமைகள் சபையின் குறிப்பிட்ட நாடொன்றுக்கு எதிராகப் பிரேரணையொன்று நிறைவேற்றப்படுமானால் அந்த நாடு தொடர்ச்சியாக சர்வதேச சமூகத்தின் விசேட கவனத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படுவது வழமையே.
அதே சமயம் உலகளாவிய ரீதியில் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் நிறுவனங்களின் பார்வையும் குறிப்பிட்ட அந்த நாட்டின் மீது பதிவதும் வழமையே.
இத்தகைய பின்னணியில் எதிர்வரும் நவம்பரில் இடம்பெறவுள்ள யூ.பி.ஆர் குழுவின் பொது மீளாய்வு அமர்வில், ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 19 ஆவது கூட்டத் தொடரில் தனக்கெதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் அடங்கியிருந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக செயற்பாட்டு அறிக்கையொன்றை இலங்கை அரசு சமர்ப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆயினும் ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 22 ஆவது கூட்டத் தொடரிலேயே இலங்கையின் அறிக்கை கோரப்படவுள்ளதால் யூ.பி.ஆர்.குழுவின் நவம்பர் மாத பொது மீளாய்வுக் குழுவில் இலங்கை அத்தகைய அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்க வேண்டிய தேவை எழாது. ஆனாலும் இலங்கையின் இன்றைய மனித உரிமைகள் நிலைமை குறித்து யூ.பி.ஆர்.குழு தனது நவம்பர் மாத அமர்வின் போது கவனத்தில் எடுத்துச் செயற்படும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
யூ.பி.ஆர் குழுவின் இலங்கை குறித்த பொது மீளாய்வுச் செயற்பாட்டின் போது, இறுதிப் போர் வேளையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஏராளமான கேள்விக்கணைகளுக்குப் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் இலங்கை அரசுக்கு ஏற்படலாம்.
அது கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட தனக்கெதிரான பிரேரணைக்கு முகம் கொடுக்க நேர்ந்த இக்கட்டான நிலையை விட மோசமானதாக அமையக் கூடும்.

No comments:

Post a Comment