Wednesday, July 04, 2012

தமிழ் மக்களுக்கான போர் தற்போதுதான் முழு அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது:பேராயர் இராயப்பு

Mannar---Bishop_3போர் முடிந்து விட்டதாகக் கூறப்பட்ட போதும் தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு முழுமையான போர் தற்பொழுது தான் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது என்பதை தற்போது நடைபெறும் நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன என்று மன்னார் மறை மாவட்ட பேராயர் இராயப்பு யோசேப் ஆண்டகை தெரிவித்தார்.
மன்னார் ஆயர் ஊடகங்களுக்கு அண்மையில் வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தனது செவ்வியில் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் தாம் திறந்தவெளிச் சிறைச்சாலையில் வாழ்வதாகத் தெரிவித்த கருத்துடன் நூற்றுக்கு நூறு வீதம் தாமும் உடன்படுவதாகத் தெரிவித்த பேராயர், தமிழ் மக்களுக்கு எதிரான தற்போதைய போரானது தமிழ் மக்களின் இன அடையாளத்தை அழித்து ஒழிப்பதும், அவர்களின் சுய கௌரவத்தை, பாதுகாப்பை, அரசியல் இருப்பை சிதைத்து விடும் நோக்குடனேயே இந்தப் போர் தமிழ் மக்களுக்கு எதிராக உத்தியோகப் பற்றற்ற முறையில் பிரகடனப்படுத்தப்பட்டு முன் நகர்த்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் இன்று தமிழ் மொழியையே அறியாது சிங்கள மயமாகியுள்ளதை சுட்டிக்காட்டும் பேராயர், இது போன்றதொரு நிலையை வடக்கு,கிழக்கில் உருவாக்குவதற்கான திட்டங்களே முன் நகர்த்தப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.
இது சர்வதேச நியமங்கள், நீதி இவற்றிற்கு மாறான இனச் சுத்திகரிப்பே என்பதில் எவ்வித கருத்து வேறுபாடுகளுக்கும் இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
01.பாரம்பரியமாக வாழ்ந்து வரும் மக்களை அவர்களுடைய பிரதேசத்தில் சிறுபான்மையினராக மாற்றும் திட்டத்தை அனுமதிக்க முடியாது.
02.சமாதான காலத்தில் படைத்தரப்பைப் பலப்படுத்த வேண்டிய தேவை அதிகளவில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
03.சமாதானம் வந்துவிட்டதாகக் கூறுகின்றனர். ஆனால் சமாதானத்தை தமிழ் மக்களால் பார்க்க முடியாதிருக்கின்றது.
04.முள்ளிக்குளத்திலும், பேசாலை 50 வீட்டுத் திட்டத்திலுமிருந்து மக்களைப் படைத்தரப்பு ஏன் விரட்டியடித்தது?
05.மக்கள் மீளக் குடியமர முடியாதுள்ளது. காடுகளிலும், கூடாரங்களிலும் எவ்வளவு காலத்துக்கு வாழ்வது? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இது தனியொருவரின் கருத்தல்ல. ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின் ஒருமித்த கருத்தென்பதே உண்மையாகும் என ஆயர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment