கற்றுக்கொண்ட
பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை துரிதமாக
செயல்படுத்துமாறு இலங்கை அரசை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் நிரந்தரத் தீர்வை எட்டுவதற்கான தனது பங்களிப்புத் தொடரும் எனவும்
அது அறிவித்துள்ளது.
இந்திய சுதந்திர தினத்தையொட்டி கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் அசோக்
கே.காந்தா விடுத்துள்ள செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை துரிதமாகச் செயற்படுத்துவதானது தேசிய நல்லிணக்கத்தை மீளக்கட்டியெழுப்பும்
செயற்பாட்டின் முன்னோக்கிய பாதையில் மிகப் பெரிய படிக்கல்லாக அமையும்.
இனப்பிரச்சினைக்கு காலதாமதமின்றி அரசியல் தீர்வொன்று காணப்படும்
முயற்சியில் இந்தியா தொடர்ந்தும் ஆதரவளித்துவரும். அத்துடன் சமத்துவமான
வாழ்வியல், நீதி, சுயகௌரவம் மற்றும் சகல பிரஜைகளுக்குமான மதிப்பு
ஆகியவற்றைப் பாதுகாக்கும் ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் முன்
முயற்சிகளுக்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்.
ஆயுத மோதலுக்கு முடிவு கட்டப்பட்டதானது இலங்கையர்கள் அனைவருக்குமான
சிறந்ததொரு எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை
வழங்கியுள்ளது.
இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தும் விடயத்தில் குறிப்பிட்டளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment