Tuesday, August 07, 2012

அம்பாறை - பாணமை பகுதியில் ஆலயத்துள் புகுந்து பிள்ளையார் விக்கிரகத்தை எடுத்துச் சென்றார் பிக்கு

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாணமை பகுதியில் வசிக்கும் 200க்கு மேற்பட்ட இந்து குடும்பங்களின் வழிபாட்டு தலமாக பாணமை சித்தி விநாயகர் ஆலயம் விளங்கியது. ஆனால் இவ்வாலயம் அண்மையில் கும்பாபிடேகம் செய்யப்பட்டமையால் இங்கு ஆரம்பகாலமாக வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் விக்கிரகத்தை முன் மண்டபத்தில் வழிபாட்டுக்கு வைத்ததுடன் புதிய விநாயகர் விக்கிரகத்தை பிரதிஷ்டை பண்ணி உள்ளனர்.

இவ்வேளை இங்கு நீண்டகாலமாக வழிபடப்பட்டு வந்த விநாயகர் விக்கிரகத்தை தங்களது பௌத்த விகாரைக்கு கொண்டு செல்ல ஒரு பௌத்த பிக்கு நடவடிக்கை எடுத்த போது இவ்விடயமாக இந்து மக்கள் பாணமை பொலிஸ் மற்றும் அங்கிருந்த இராணுவ முகாம் அதிகாரிகளிடம் இதை தடுக்குமாறு முறையிட்டனர்.
இவ்விடயம் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்களின் கவனத்துக்கு வந்த போது அவர் தொலைபேசி மூலம் பாணமை இராணுவ பொறுப்பதிகாரியிடம் தொடர்பு கொண்டு பிக்குவின் இச்செயற்பாட்டை தடுக்குமாறு கூறியிருந்தார்.
இவ்வேளை இப்பௌத்த பிக்கு தொடர்ச்சியாக இந்து மக்களுக்கும் ஆலயத்தினருக்கும் தொந்தரவு கொடுத்ததுடன் இருநூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் எதிர்த்து நின்று தமது இந்து ஆலய பிள்ளையாரை பாதுகாக்க முற்பட்டுக் கொண்டிருந்த வேளையிலும் 06.08.2012 இன்று திங்கட்கிழமை பௌத்த பிக்கு சிங்கள காடையர்களுடன் ஊர்காவல் படையினருடன் வந்து இந்து மக்களை தாக்கி இந்துக்களின் பிள்ளையார் விக்கிரகத்தை ஆலயத்துள் புகுந்து எடுத்துச் சென்றுள்ளனர்.
இவ்வியடமாக கிழக்கு இந்து ஒன்றியமும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையும் வன்மையாக கண்டிப்பதாக இதன் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
அத்தோடு பிக்குவின் இச்செயற்பாட்டுக்கு அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன் இந்துக்களின் வழிபாட்டு உரிமையை பாதிக்கும் வகையில் நடாத்தப்படும் செயற்றிட்டங்களை சுட்டிக்காட்டி இந்துக்களின் மத உரிமையை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மதவிவகார அமைச்சரும் பிரதமருமான திசாநாயக்க முதியன்சேலாகே ஜயரத்ன அவர்களை அவசரமாக சந்திப்பதற்காக சென்றுள்ளதாக கூறினார்.
சில பௌத்தர்களினதும் பௌத்த பிக்குகள் சிலரினதும் காட்டுமிராண்டித்தனமாக நடவடிக்கைகளுக்கு நாங்கள் இனியும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.




  

No comments:

Post a Comment