Sunday, August 12, 2012

ஈழத் தமிழர்களைக் காயப்படுத்தியது யார்? டெசோவில் பதில் கிடைக்குமா?- சீறும் சீமான்!



seemannதிருப்பூரில் பொங்கித் தீர்த்துவிட்டார் சீமான். அதுவும் கருணாநிதி ஈழத் தமிழர்களுக்காக மாநாடு நடத்துகிறேன் எனக் கிளம்பி இருக்கும் நேரம் என்பதால், அனல் அதிகமாகவே இருந்தது!





நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீரன் சின்னமலை நினைவேந்தல் பொதுக் கூட்டம் திருப்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. முதலில் பேசியவர்கள் தி.மு.க., அ.தி.மு.க.வுடன் சேர்த்து ம.தி.மு.க-வையும் பாகுபாடு இல்லாமல் வறுத்து எடுத்தனர்.
தீரன் சின்னமலையின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் தகுதி தி.மு.க., அ.தி.மு.க, ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு இல்லை’ என்று பேசினார் கோவை மாவட்டப் பொறுப்பாளர் இளமாறன்.
போர் உக்கிரம் அடைந்த நேரத்தில் ஈழத்தில் இருந்து நடேசன் பேசினார். அப்போது பேச மறுத்தார் ராமதாஸ் என்று இப்போது சொல்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன்.
அவர் உண்மையானவராக இருந்திருந்தால், அப்போதே பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு வந்திருக்க வேண்டும். இப்போது இதனைச் சொல்வது ஈழத் தமிழர்களை வைத்து சம்பாதிப்பதற்குத்தான்’ என்றும் அவர் தாக்கினார்.
மாணவர் பாசறைச் செயலாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம், தமிழ்நாடு இப்போது வடநாட்டுக்காரன் கையில் இருக்கிறது. இரண்டு மலையாளிகள் சுடப்பட்டதற்கு இத்தாலியைச் சேர்ந்தவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இதுவரை தமிழ் மீனவர்கள் 500 பேருக்கும் மேல் சுடப்பட்டார்களே. ஏன் வாய் திறக்கவில்லை இவர்கள்? என்று கொந்தளித்தார்.
இறுதியாகப் பேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,
தீரன் சின்னமலை எந்த இலட்சியத்துக்காகப் போராடினாரோ. அதே லட்சியத் துக்காகத்தான் பிரபாகரனும் போராடினார். தீரன் சின்னமலையின் நேரடி வாரிசுதான் பிரபாகரன். அவரைப் போலவே மக்களுக்காக மக்களில் இருந்தே படை திரட்டி போராட வைத்தவர் பிரபாகரன்.
எங்கள் முன்னோர்களின் வரலாறுகள் பாடத்தில் இல்லை. அதனால் அவர்கள் வீரம் பற்றி நாங்கள் அறிந்துகொள்ள முடியவில்லை. அதனால்தான் பிரபாகரனிடம் ஒருமுறை யாரை முன்னோடியாக நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு ‘சுபாஷ்’ என்றார்.
வரலாறு மறைக்கப்படவில்லை என்றால் தீரன் சின்னமலை என்றுதான் சொல்லி இருப்பார். எந்த மண்ணுக்காக தீரன் சின்னமலை போராடினாரோ அந்த மண் இன்று கேரளா, ஆந்திரா, கர்நாடகாவுக்குச் செல்கிறது.
எங்கள் மணல் வளம் சுரண்டப்படுவதைப் பார்த்து ஒன்றுமே செய்ய முடியவில்லை. மணல்தானே என்று நினைக்கலாம். மனிதனுக்குத் தோல் எப்படியோ அதுபோல ஆற்றுக்கு மணல். ஆறு வடிகட்டும் திறனை இழந்துவிட்டால், அரிசி விளையாது. நஞ்சுதான் விளையும்.
ஓர் ஆண்டில் மணல் கொள்ளையர்களுக்குக் கிடைக்கும் வருமானம் 60 ஆயிரம் கோடி. ஆனால், மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற மொத்தமே 30 ஆயிரம் கோடிதான் தேவை. இதைத் தட்டிக்கேட்க நாதி இல்லை.
அரசாங்கம் மூலமாக நடத்த வேண்டிய மருத்துவமனை, பள்ளி போன்றவற்றை எல்லாம் தனியார் கையில் கொடுத்துவிட்டு, சாராயத்தை மட்டும் அரசு விற்கிறது.
உலக நாடுகள் துணையோடு எங்கள் ஈழக் கனவு வீழ்த்தப்பட்டது. ஆடு, மாடு களைக்கூட ஒரே இடத்தில் தொடர்ச்சியாகக் கட்டிப்போட்டால் தட்டிக் கேட்க ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால், மூன்று வருடங்களாக பொட்டல் காட்டில், கொளுத்தும் வெயிலில், கொட்டும் மழையில், முள்வேலியில் வாயில்லாப் பூச்சிகளாக இருப்பவர்களுக்காக ஏன் ஒருவரும் குரல் கொடுக்கவில்லை?
இந்த நிலையில்தான் கருணாநிதி டெசோ மாநாடு நடத்துகிறார். இந்த மாநாடு அவர்களின் காயத்துக்கு மருந்து போடும் என்கிறார். அவர்களைக் காயப்படுத்தியது யார்?
மூன்று வருடங்களாக ஒருவனுக்குக் காயம் இருந்தால், அவன் சீழ் பிடித்து இறந்துவிடுவானே? மூன்று வருடங்களாக என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்?
புலிகள் மீதான தடையை நீக்கும் வரை ஈழ மக்களுக்குத் தீர்வு இல்லை.
காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்குக்கூட 16 மாதங்களுக்கு மேல் தடை போடவில்லை. ஆனால் ராஜீவ் காந்தியைக் கொன்றதாகச் சொல்லி விடுதலைப் புலிகளுக்கு 21 ஆண்டுகளாகத் தடை இருக்கிறது.
அகதியாக வரும் நான்கு வயது சிறுவன்கூட கைது செய்யப்படுகிறான். டெசோ மாநாடு நடத்தத் துடிக்கும் கலைஞர் அன்று அவுஸ்திரேலியா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு அகதிகளாகப் போகத் தத்தளித்த மக்களுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை?
சிறிது சிறிதாகச் சேமித்து முள்ளிவாய்க்கால் மக்களின் மருத்துவத் தேவைக்காக அனுப்பிய இரத்தப் பொட்டலங்களை ஜாவ்பர் சேட் என்ற பொலிஸ் அதிகாரி காலால் மிதித்தபோது தடுக்கவில்லையே ஏன்?
இப்போது நீங்கள் போடப்போவதாகச் சொல்லும் தீர்மானத்தை ஏன் ஒன்றரை ஆண்டுகள் முன் சட்டமன்றத்தில் போடவில்லை? காரணம் தமிழன் இளிச்சவாயன். தமிழனின் வீழ்ச்சிக்குக் காரணம் நமக்குள் இருக்கும் சாதி, மதம், துரோகம்தான். மதத்தைக் காக்கத் துடித்த நாம் இனத்தைக் காக்கத் துடிக்கவில்லை என்று முடித்தார் சீமான்.
டெசோவில் பதில் கிடைக்குமா?
ஜூனியர் விகடன்

No comments:

Post a Comment