Sunday, October 28, 2012

இலங்கையில் காணாமல் போனவர்களின் 22 வது தேசிய ஞாபகார்த்த தினம் இன்று அனுஷ்டிப்பு

missing_people_memorial_001கொழும்பின் புறநகர்ப்பகுதியான சீதுவ ரத்தொலுவ பிரதேசத்தில் காணாமல்போனவர்களின் 22 வது தேசிய ஞாபகார்த்த தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வானது, காணாமல்போனவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு முன்பாக, காணாமல்போனவர்களுக்கான அமைப்பின் தலைவர் பிரிட்டோ பெர்ணாண்டோ தலைமையில் நடைபெற்றது.
வடக்கு கிழக்கு மற்றும் கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் பல பிரதேசங்களில் கடந்த காலங்களில் காணாமல்போனவர்களின் உறவுகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு தொடர்பாக, தலைவர் பிரிட்டோ பெர்ணாண்டோ கருத்துத் தெரிவிக்கையில்,

அரசாங்கம் காணாமல்போனவர்களுக்காக பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தவேண்டும். அந்தக் காலத்தில் ஐநாவுக்கு சென்று, சர்வதேசத்துக்கு சென்று, வீதிகளில் பேரணி சென்றுதிரிந்த மகிந்த ராஜபக்ஷ காணாமல்போனவர்களுக்காக நீதி வழங்குவதாகவும் அப்படி இனிமேல் நடக்காது என்றும் உறுதிமொழிகளை வழங்கியிருந்தார்.
ஆனால் அவர் மறந்துபோன அந்த உறுதிமொழிகள் தான் எங்களிடம் தற்போது உள்ளன. இன்று அதற்காக குரல் கொடுப்பவர்கள் துரோகிகள் ஆக்கப்பட்டுள்ளனர்.
நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்களாக முத்திரைக் குத்தப்பட்டுள்ளனர். இந்த நாடு எல்லோருக்கும் சொந்தமானது என்பதை நாங்கள் தான் நிலைநாட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.
இதேவேளை, இந்த ஞாபகார்த்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக மட்டக்களப்பிலிருந்து சென்றிருந்த பெண்கள் சிலர் கருத்துத் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தில் அரச படைகளாலும் விடுதலைப் புலிகளாலும் கடத்தப்பட்டதாக முறையிடப்பட்டிருக்கின்ற பலர் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
இராணுவத்தின் சிறப்பு அதிரடிப் படையினராலும் இராணுவ புலனாய்வுப் பிரிவினராலும் கைதுசெய்யப்பட்டதாக முறையிடப்பட்டுள்ள பலர் இன்னும் காணாமல்போனவர்கள் என்ற நிலைமையிலேயே பதியப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் 2000-களின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டதாக முறையிடப்பட்டிருப்பவர்கள் தொடர்பில், அக்காலத்தில் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் தான் பொறுப்புக்கூற வேண்டும்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகள் இன்று அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் இருக்கின்றனர். அதனால் அவர்களின் காலத்தில் நடந்த விடயங்களுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment