Wednesday, October 17, 2012

இலங்கை பிரச்சினைக்கு விரைவாக அரசியல் தீர்வு காண வேண்டும்!– பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்து

samarasinghe_moon-1இலங்கையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போருக்கு அடிப்படைக் காரணமான பிரச்சினைக்கு, விரைவாக அரசியல்தீர்வு காணவேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின்  மனித உரிமை விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவரான அமைச்சர் மகிந்த சமரசிங்க, நேற்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை நியுயோர்க்கில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இதன்போதே, இலங்கை அரசாங்கம் விரைவாக அரசியல்தீர்வு ஒன்றை காண வேண்டும் என்று பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.
முழுமையான பொறுப்புக்கூறலுக்கான சட்டக் கடமைகளை நிறைவேற்றத் தேவையான, நம்பகரமான  அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும், சகல இலங்கையர்களுக்கும் நீதியையும், சமத்துவத்தையும்,
பொறுப்புக்கூறலையும், நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்த சுதந்திரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பான் கீ மூன் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
இந்தச் சந்திப்பில் மகிந்த சமரசிங்கவுடன், ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கோஹனவும், ஐ.நா பொதுச்செயலருடன் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் நியுயோர்க் பிரதிநிதி ஐவன் சிமோனோவிக் கும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment