தமிழர்கள்
பாரம்பரியமாக வாழ்ந்து வந்த வரலாற்றுப் பூமியில் ஜனநாயக வழியில் மக்களால்
தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் சிறிய ஒரு அலகைக்கொண்ட ஆட்சி முறையைக் கூட
நடத்த முடியாத அளவிற்கு அரசாங்கத்தின் பயங்காரவாத செயற்பாடு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
யாழ் பேரூந்து நிலையம் முன்பாக இன்று
புதன்கிழமை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே
அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மகிந்த சிந்தனை, ஆசியாவின் ஆச்சரியம்
என்று கூறிக்கொள்ளும் அரசாங்கம், தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வை வழங்க
வேண்டும் என்ற சிந்தனை எண்ணத்தில கூட இல்லை.அத்துடன் பல்வேறு அரசியல்
கட்சிகள் கொள்கை ரீதியில் பிரிவடைந்திருந்தாலும் தமிழ் மக்களுக்குரிய
அரசியல் தீர்வு கிடைக்கும் வரை அனைத்துக் கட்சிகளும் ஒன்று திரண்டு
போராடுவோம் என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிவாஜிலிங்கம்,வன்னி யுத்தத்தின் போது
கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் மரணம் தொடர்பாக பக்கச்சார்பற்ற சர்வதேச
விசாரணை வேண்டும். குடாநாட்டில் தொடர்ந்தும் காட்டாட்சியை நடத்த அனுமதிக்க
முடியாது.சிவில் ஆட்சியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடக்கில் இன்று தொடர்ச்சியாக படைத்தரப்பினரால் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஒரு கிராம அலுவலர் பிரிவில் ஒரு இராணுவ
முகாம் என்று ரீதியில் அரசின் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதோடு பௌத்த
மயமாக்கல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.தமிழ் மக்களுக்கு
அரசியல் தீர்வை வழங்கும் நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை. இதன்
வெளிப்பாடாகவே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் கருத்து
அமைந்துள்ளது என்றார்.
No comments:
Post a Comment