இலங்கையில் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் பணிகள் கிரமமான முறையில் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இலங்கையில் மேற்கொண்டு வந்த செயற்பாட்டு ரீதியான பங்களிப்பினை குறைத்துக்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் உயர்ஸ்தானிகர் என்டனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கும், இடம்பெயர் இலங்கைர்கள் சொந்த இடங்களில் மீள் குடியேறுவதற்கும் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் 63ஆம்
அமர்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றூம் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, யுத்தத்தின் பின்னர் நாடு அடைந்துள்ள அபிவிருத்தியை சிலர் குறைத்து மதிப்பீடு செய்துள்ளதாக ஐ.நாவின் ஜெனீவாவிற்கான இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆசியசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் 63ஆம் நிறைவேற்றுக் குழு அமர்வுகளில் கலந்து கொண்ட உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில தரப்பினர் இலக்குகளை மாற்றி மாற்றி அறிவிப்பதாகவும் இதனால் இலங்கைக்கு மட்டுமன்றி உறுப்பு நாடுகளுக்கும் அசௌகரிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகளாக நீடித்த யுத்தத்தின் பின்னர் நாடு அடைந்து வரும் அபிவிருத்திகளை அங்கீகரிக்காது, குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் பல நாடுகளில் மனிதாபிமான நெருக்கடிகள் இடம்பெற்று வருவதாகவும், இவ்வாறான நாடுகளுக்கு இலங்கை நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர் மக்கள் மீள்குடியேற்றம், முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு, உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தல், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தல் போன்ற பல்வேறு காரணிகளில் பாரியளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் பின்னரான மீள் குடியேற்றம், புனர்வாழ்வு போன்ற துறைகளில் இலங்கை பெற்றுக் கொண்ட அனுபவங்களை பகிர்ந்துகொள்ளத் தயார் என ரவிநாத் ஆரியசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment