Friday, November 30, 2012

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வாட்டன் சிறிலங்கா அரசுக்கு மிகவும் நெருக்கமா?

uk-flag1_330_228ஒன்பது மாதங்களில் நான்கு தடவைகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வாட்டன் சிறிலங்கா அரசுக்கு மிகவும் நெருக்கமாகி வருவதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.
கொன்சர்வேட்டிவ் கட்சியின் ஸ்ரொக்டன் தெற்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஜேம்ஸ் வாட்டன், கடந்த ஜுலை, ஓகஸ்ட் மாதங்களில் ஒன்பது பேர் கொண்ட நாடாளுமன்றக் குழுவுக்குத் தலைமை தாங்கி சிறிலங்காவுக்குச் சென்றிருந்தார்.
அதற்கு முன்னதாக கடந்த ஜனவரி மாதம் சிறிலங்கா அரசின் அழைப்பின் பேரில், கொழும்பு சென்ற இவர், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் நகரங்களுக்கும் சென்றிருந்தார்.

அதையடுத்து கடந்த மார்ச் மாதம், இன்ரநசனல் அலேர்ட் என்ற அரசசார்பற்ற நிறுவனத்துடன் இணைந்து மீண்டும் ஒருமுறை சிறிலங்கா சென்றிருந்தார்.
கொமன்வெல்த் நாடாளுமன்றக்குழுவுடன் இணைந்து கடந்த செப்ரெம்பர் மாதம் இவர் நான்காவது தடவையாகவும் சிறிலங்கா சென்றுள்ளார்.
ஜேம்ஸ் வாட்டன் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற பின்னர், கடந்த 12 மாதங்களில், பிரித்தானியாவில் சிறிலங்கா அரசினால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஐந்து அதிகாரபூர்வ நிகழ்வுகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
அவர் சிறிலங்கா விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்திலும் உரையாற்றியுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் நடந்த சிறிலங்கா தொடர்பான விவாதத்தில் ,உரையாற்றிய இவர், சிறிலங்கா அரசு மீது குற்றம்சாட்டிய ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை கவனமாக கையாள வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில், றோயல் நாடாளுமன்றக் குழுவில் ஜேம்ஸ் வாட்டனுடன் சிறிலங்கா சென்ற லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மான், வாட்டன் சிறிலங்காவுடன் நெருக்கமாகி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
“மிகப்பெரிய மனிதஉரிமைமீறல் பிரச்சினைகள் இப்போதும் உள்ள சிறிலங்காவுடன் அவர் மிகவும் நெருக்கமாகி வருகிறார்.
அடிக்கடி தமது செலவில் அவரை சிறிலங்கா அரசாங்கம் கொழும்புக்கு அழைப்பது ஏன்?
லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் அவருக்கு அடிக்கடி விருந்தும் மதுவிருந்தும் கொடுக்கப்படுகிறது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், ஜேம்ஸ் வாட்டன் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.
30 ஆண்டுகாலப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் சிறிய பங்களிப்புச் செய்ய முனைவதாகவும், உள்ளூர் நிறுவனங்களின் வர்த்தகத்துக்கு துணையாகவே அங்கு சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment